குவகாத்தி: கொரோனா பிரச்சனைக்கு மத்தியில் இந்தியாவில் தற்போது பர பரப்பாக பேசப்படும் விஷயம், சீனாவில் உள்ள நிறுவனங்கள், இந்தியாவுக்கு வர ஆலோசித்து வருவதாக கூறப்படுவது தான். இது குறித்த மற்ற விவரங்கள் லாக்டவுனுக்கு பிறகு வெளியிடப்படலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.
சீனாவில் உள்ள பல கார்ப்பரேட் நிறுவனங்களின் கிளைகள் இந்தியாவில் அதன் உற்பத்தி ஆலையை தொடங்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அதற்கு அமெரிக்க வர்த்தக கவுன்சில் கூட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அண்மையில் கூறப்பட்டது.
இந்த நிலையில் அப்படி சீனாவில்; இருந்து இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும் கார்ப்பரேட்களுக்கு, இந்தியா நிலங்களை கூட அளிக்க தயாராக உள்ளதாக சில செய்திகள் வெளியாகின.
நிறுவனங்களுடன் ஆலோசனை
இப்படி இருக்கையில் அசாம் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் சந்திர மோகன் படோவரி, பல அமெரிக்கா மற்றும் ஜப்பானிய நிறுவனங்கள், தென் கொரிய நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி வசதிகளை சீனாவிலிருந்து இந்தியாவுக்கு மாற்றுவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியுள்ளார் என கவுகாத்திபிளஸ் என்னும் ஆங்கில தளத்தில் வெளியிட்டுள்ளது.
அசாமிற்கு கவர்ந்திழுக்க நடவடிக்கை
மேலும் இந்த நிறுவனங்களை அசாமிற்கு கவர்ந்திழுக்க அசாம் அரசு, தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தினை மேம்படுத்துவதற்கான துறை (DPIIT), இந்திய அரசு, முதலீட்டு இந்தியா, japan External Trade Organization, அமெரிக்கா வர்த்தக கவுன்சில் மற்றும் அமெரிக்கா வர்த்தக சபை ஆகியவற்றுடன் சேர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அசாமில் போதிய வசதிகள் உள்ளது
மேலும் அசாமில் கார்ப்பரேட் நிறுவனங்கள் அவற்றின் உற்பத்தி வசதிகளை அமைக்க போதிய இருப்பிட வசதிகள் உள்ளதாகவும், பரந்த இயற்கை வளங்கள், வலுவான தொழில்துறை, உள்கட்டமைப்பு மற்றும் நம்பகமான இணைப்பு வசதிகள் உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.
ஜப்பானுடனும் பேச்சு வார்த்தை
இதற்கிடையில் ஜப்பானிய தொழில்களில் இருந்து முதலீட்டை ஈர்ப்பதற்காக அசாமில் ஒரு ஜப்பானிய தொழில்துறை டவுன்ஷிப்பை அமைப்பதற்காக தொழில்கள் மற்றும் வணிகத்துறை DPIIT மற்றும் JETRO வுடன் தொடர்பில் உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
எர்னஸ்ட் & யங் ஆய்வு
இதற்கிடையில் அசாமில் தொழில்துறை அமைப்பது குறித்த ஆய்வு செய்வதற்கும் மதிப்பீடு செய்வதற்கும், சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை ஈர்பதற்காகவும், கொள்கை கட்டமைப்புகளை பரிந்துரைப்பதற்கும் தொழில்கள் மற்றும் வர்த்தகத் துறை மற்றும் எர்னஸ்ட் & யங் உடன் ஈடுப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
அசாமின் ஜிடிபி
ஏற்கனவே அசாம் மாநிலத்தின் ஜிடிபியில் 39% பங்கு வகிக்கும் தொழில் துறைகள், நேரடியாக சுமார் 4 லட்சம் பேருக்கும் வேலை வாய்ப்பினை வழங்கி வருவதாகவும், இதே மறைமுகமாக 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பினை வழங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மேற்கொண்டு பல நிறுவனங்களை கொண்டு வர ஆயத்தமாகி வருகின்றது.
தமிழகத்திலும் இது போன்ற நிறுவனங்கள் வந்தால் வேலை வாய்ப்பு பெருகும் என்று நீங்கள் கூறுவது புரிகிறது. நிச்சயம் அனைவரின் வேண்டுகோளும் இதுவாகத் தான் இருக்கிறது.