சமீபத்தில் தொடங்கிய உலக பொருளாதார மந்த நிலை காரணமாக, பல நிறுவனங்களும் தங்களின் உழியர்களை வீட்டுக்கு அனுப்புவது அதிகரித்து இருக்கிறது.
சமீபத்தில் தொடங்கிய உலக பொருளாதார மந்த நிலை காரணமாக, பல நிறுவனங்களும் தங்களின் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புவது அதிகரித்து இருக்கிறது.
ஆனால் தற்போது இந்த லே ஆஃப் பூதம் ஆட்டோமொபைல் துறையைப் பிடித்து இருக்கிறது.
இந்திய ஆட்டோமொபைல்
இந்திய ஆட்டோமொபைல் துறையைப் பற்றி பேசவே தேவை இல்லை. ஆயிரக் கணக்கான ஒப்பந்த ஊழியர்கள் என்ன ஆனார்கள் எனத் தெரியவில்லை. சுமார் 250 ஆட்டோமொபைல் டீலர்களால் தங்கள் வியாபாரத்தை முன் எடுத்துச் செல்ல முடியாததால் கடையை மூடிவிட்டார்கள். இதனால் மட்டும் சுமாராக 25 - 30 ஆயிரம் ஊழியர்கள் தங்கள் வேலையை இழந்தார்கள்.
நிறுவனங்கள்
மாருதி சுசூகி தன் 3,000 தற்காலிக பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியது, அசோக் லேலண்ட் தன் ஊழியர்களுக்கு கூடுதல் போனஸ் கொடுக்க முடியாது என திட்டவட்டமாகச் சொன்னது. இப்படியாக இந்திய ஆட்டோமொபைல் துறை ஊழியர்கள், தங்கள் வேலை பாதுகாத்துக் கொள்ள பயந்து நடுங்க வேண்டி இருக்கிறது. இந்திய ஆட்டோமொபைல் துறை நிறுவனங்களுக்கு ஒப்பந்த வேலை செய்யும் சிறு குறு நிறுவனங்களின் நிலை இதை விட மோசம். சரி சர்வதேச ஆட்டோமொபைல் பிரச்னைக்கு வருவோம்.
உலக நிறுவனங்கள்
கடந்த மே 2019-ல் ஃபோர்ட் நிறுவனம் சுமார் 7,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புவதாகச் சொன்னது. சமீபத்தில் மெர்சிடஸ் பென்ஸ் சுமாராக 10,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப இருப்பதாகச் சொன்னது, பி எம் டபிள்யூ தன் ஊழியர்களுக்கு போனஸ் தொகையைக் குறைத்து இருப்பது என பல சர்வதேச ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தடுமாறிக் கொண்டு இருக்கின்றன. இந்த வரிசையில் இப்போது ஆடியும் இணைந்து இருக்கிறது.
9500 பேர்
ஜெர்மானிய சொகுசு கார் நிறுவனமான ஆடி நிறுவனத்தில், சுமாராக 9,500 பேரை தேர்வு செய்து வீட்டுக்கு அனுப்ப இருக்கிறார்களாம். இந்த 9,500 பேரை வீட்டுக்கும் அனுப்பும் வேலையை இந்த ஆண்டு தொடங்கி வரும் 2025 வரை தொடருமாம். இந்த லே ஆஃப், ஜெர்மனியில் வேலை பார்க்கும் 61,000 ஊழியர்களில் மட்டும் நடக்க இருப்பதாகச் சொல்கிறது டிஜிட்டல் ஜர்னல் பத்திரிகை.
பணம்
இந்த 9,500 ஊழியர்களுக்குக் கொடுக்கும் சம்பளப் பணம் மிச்சமாகும் இல்லையா..? இந்த பணத்தை தன் மின்சார கார்களுக்கு முதலீடு செய்யப் போகிறார்களாம். "ஆடி நிறுவனம் எதிர்காலத்துக்கு தயாராக வேண்டும். எனவே சில வேலைகளுக்கான ஆட்கள் இனி தேவை இருக்காது. தேவைக்கு தகுந்தாற் போல புதிய வேலைகள் உருவாக்கப்படும்" எனச் சொல்லி இருக்கிறது ஆடி.
மின்சார வாகனங்கள்
ஒரு பக்கம் இந்தியாவில் மின்சார வாகனங்கள் பெரிய அளவில் பிரபலம் அடையவில்லை தான். ஆனால் உலக நாடுகள் மின்சார வாகனங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. அந்த எதிர்பார்ப்பை டெஸ்லா நிறுவனம் பூர்த்தி செய்து கொண்டிருக்கிறது. மறு பக்கம் நல்ல எண்ணிக்கையில் தன் மின்சார வாகனங்களை விற்பனை செய்து கொண்டு இருக்கிறது. சாதாரண பெட்ரோல் டீசல் கார்களை விட, குறைந்த அளவிலான ஊழியர்களே இந்த மின்சார வாகனங்களைத் தயாரிக்க தேவைப்படுகிறார்களாம்.
உலக அரசியல்
உலக நாடுகளில், ஐரோப்பிய ஒன்றியம் பெரிய அளவில் சூழலியலை கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது. எனவே, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அதிகம் மின்சார வாகனங்களை விற்குமாறு, ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு பெரிய அளவில் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறதாம். எனவே ஆடி தன் கவனத்தையும் மின்சார வாகனம் பக்கம் திருப்பி இருப்பதாகச் சொல்கிறார்கள் அனலிஸ்டுகள்.