டெல்லி : இந்திய ஆட்டோமொபைல் துறையில் நிலவி வரும் மந்த நிலையால், ஒட்டுமொத்த துறையும் வீழ்ச்சி கண்டுள்ளது.
இந்த நிலையில் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், இந்திய ஆட்டோமொபைல் துறையில் முக்கிய பங்கு வகித்து வருகிறது.
கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலையால் ஆட்டோமொபைல் துறைகளில் நிலவி வரும் உற்பத்தி குறைபாடு, மந்தமான விற்பனை, பணிநீக்கம் உள்ளிட்ட பிரச்சினைகள் நீடித்து வருகின்றன. குறிப்பாக ஆட்டோமொபைல் துறையானது, இந்த மந்த நிலையால் மரண அடி வாங்கியது என்றே கூறலாம். ஏனெனில் அந்தளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது.
மந்த நிலையால் பணி நீக்கம்
குறிப்பாக தேவை குறைவால் வாகன விற்பனை ஒவ்வொரு மாதமும் குறைந்து படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் வாகன உற்பத்தி நிறுவனங்கள் தொடர்ந்து உற்பத்தியையும் குறைத்து வருகின்றன. சில நிறுவனங்கள் தங்களது பணியாளர்களின் எண்ணிக்கையையும் குறைத்து வருகின்றது. இதன் காரணமாக பல ஆயிரம் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
டாடா மோட்டார்ஸில் பணி நீக்கம் இல்லை
எனினும் நாட்டின் முன்னணி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் மந்தநிலையைக் காரணம் காட்டி ஊழியர்கள் யாரையும் பணிநீக்கம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே சில நிறுவனங்கள் மந்த நிலையால் பணி நீக்கம் செய்து வருகின்றன. சில நிறுவனங்கள் வேலையில்லா நாட்களையும் அறிவித்து வருகின்றன.
டாடா மோட்டார்ஸ் அதிரடி
ஆனால் இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. ஆக நிலவி வரும் மந்த நிலையை காரணம் காட்டி எந்தவொரு பணி நீக்கமும் இல்லை என அதிரடியாக தனது முடிவை அறிவித்துள்ளது டாடா மோட்டார்ஸ். மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு வாகன விற்பனையில் ஈடுபட்டு வரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பல நாடுகளுக்கு தனது ஏற்றுமதியை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
டாடா மோட்டார்ஸ் உறுதி
அர்ஜெண்டினா, பிரிட்டன், தாய்லாந்து, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் ஆலை அமைத்து வாகன விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த நிறுவனத்தில் 83,000 பேருக்கு மேல் வேலை பார்க்கும் நிலையில் அவர்களின் எதிர்காலத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதென்று டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உறுதியளித்துள்ளது. இது அந்த நிறுவன ஊழியர்களிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
விரைவில் நிலைமை சீராகும்
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியான கேண்டர் புட்செக் கூறுகையில், மந்த நிலை காரணமாக ஊழியர்களை பணிநீக்கம் செய்வது போன்ற திட்டம் எதுவும் எங்களிடம் இல்லை. அப்படி பணிநீக்கம் செய்வதாக இருந்தால் அதை ஆரம்பத்திலேயே செய்திருப்போம். இந்த நெருக்கடியானது கடந்த 12 மாதங்களாகவே இத்துறையில் நிலவி வருகிறது. எனினும் இன்னும் சில காலத்தில் இயல்பு நிலை திரும்பிவிடும் என்று நம்புகிறோம். ஆக விரைவில் எல்லாம் சரியாகி விடும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த சில மாதங்களில் புதிய அறிமுகம்
அடுத்த சில மாதங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய ரக கார்களை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிலும் வரவிருக்கும் பிஎஸ் 6 விதிகளுக்கு ஏற்ப மாற்றம் செய்யவிருப்பதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆல்ட்ரோஸ், நெக்ஸான் ஈவி மற்றும் கிராவிட்டி உள்ளிட்ட புதிய தயாரிப்பு அறிமுகங்களுக்கு மத்தியில் நிறுவனம் இப்போது உள்ளது. இதனால் அடுத்த ஆண்டு சந்தையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடையும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
எங்களை வலுவாக நிலை நிறுத்தி உள்ளோம்
பொருளாதாரம் என்ன செய்து விட போகிறது. நாங்கள் சந்தையில் நன்கு நிலை நிறுத்தப்பட்டுள்ளோம். அதுவும் சந்தையை விஞ்சுமளவுக்கு நாங்கள் எங்களை நிலை நிறுத்தியுள்ளோம். மேலும் முழு தயாரிப்பு வரம்பும் வேறுபட்ட தளத்தில் அமைந்திருப்பதால், எங்களது லாபம் கணிசமான அளவு அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. அதிலும் தற்போதிருக்கும் சூழ்நிலையை முறியடிக்க வருவாயைப் பொறுத்தவரையில் அதன் முதுகெலும்பாகத் தொடரும் வணிக வாகன விற்பனையில், டாடா மோட்டார்ஸ் அனைத்து கவனத்தையும் செலுத்து வருகிறது.
நம்பிக்கையை தரும் வர்த்தக வாகனம்
சந்தையில் நிலவி வரும் மந்த நிலையிலும், வர்த்தக வாகனங்கள் விற்பனையானது நல்ல நம்பிக்கையை தருகிறது. எங்களிடம் சரியான தயாரிப்புகள் உள்ளன. மேலும் அடுத்த நிலைக்கு செல்வதற்கு செலவு மேம்படுத்துதல் மற்றும் தரக்கட்டுப்பாடு நடவடிக்கைகள் உட்பட அனைத்து வகையான வழிமுறைகளையும் நிறுவனம் கொண்டுள்ளது என்றும் டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.
லாபம் வீழ்ச்சி
எனினும் கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், 44 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளதாகவும், இதனால் நிகர நஷ்டம் 1,281.97 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டில் இதே காலத்தில் 109.14 கோடி ரூபாயாக இருந்துள்ளது.
எனினும் வரவிருக்கும் காலாண்டுகளில் சாதகமான முன்னேற்றத்தை காணலாம் என்றும் கருதப்படும் நிலையில், பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.