மும்பை: கொரோனா தாக்காத வியாபாரம் அல்லது வர்த்தகம் ஏதாவது உண்டா? உலக பொருளாதார அறிஞர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி இது.
பெரும் பணக்காரர்கள் தொடங்கி, அன்றாட கூலித் தொழிலாளர்கள் வரை, எல்லா தரப்பினரையும் வைத்து, உறித்து, உப்பு கண்டம் போட்டு இருக்கிறது கொரோனா வைரஸ்.
அதில் ஆட்டோமொபைல் கம்பெனிகள் மட்டும் தப்பிக்குமா என்ன..? அவர்களைப் பற்றித் தான் பார்க்க இருக்கிறோம்.
டிவிஎஸ்
நம் சென்னையை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் டிவிஎஸ் நிறுவனமும் சம்பளத்தை குறைக்க முடிவு செய்து இருக்கிறதாம். ஏப்ரல் 01-ம் தேதி சம்பள உயர்வு, பதவி உயர்வு குறித்த கடிதங்களை ஊழியர்களுக்கு கொடுப்பார்களாம். ஆனால் இந்த வருடம் கொடுக்கவில்லையாம். சம்பள குறைப்பு வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறதாம்.
பஜாஜ் ஆட்டோ
அதே போல, பஜாஜ் ஆட்டோ நிறுவனத்திலும் சம்பள குறைப்பு முடிவுகளை எல்லாம் சிறப்பாக எடுத்து இருக்கிறதாம். பஜாஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜிவ் பஜாஜ், இந்த லாக் டவுன் காலம் முழுக்க, தன் சம்பளத்தை விட்டுக் கொடுக்க இருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
வணிக வாகன தாதாக்கள்
இந்தியாவில் வணிக வாகனங்களாக லாரி, டிப்பர், கண்டெய்னர்... போன்றவைகளை எடுத்தால் அதில் அசோக் லேலண்ட் மற்றும் டாடா தான் டான். கடந்த 2019 - 20 நிதி ஆண்டில், இந்த நிறுவனங்கள் கடுமையான சவால்களை எதிர் கொண்டன. இப்போது இந்த கம்பெனிகளும் சம்பள குறைப்புகளைச் செய்ய இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
அப்பல்லோ டயர்ஸ்
அப்பல்லோ டயர்ஸ் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி (CMD - Chief Managing Director) ஓன்கார் கன்வார் (Onkar Kanwar) மற்றும் துணைத் தலைவர் நீரஜ் கன்வார் (Neeraj Kanwar) இந்த 2020 - 21 நிதி ஆண்டில் 25% சம்பளத்தை குறைத்துக் கொள்கிறார்களாம்.
எக்ஸிட்
அதே போல எக்ஸிட் இண்டஸ்ட்ரீஸ் (Exide Industries) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் இந்த 2020 - 21 நிதி ஆண்டில், தன் 30 % சம்பளத்தை குறைத்துக் கொள்ள இருக்கிறாராம். சம்பள குறைப்பை பற்றி, ஒரு காலாண்டுக்குப் பின் மறு பரிசீலனை செய்யவாராம்.
மஹிந்திரா
இந்த சம்பள குறைப்பில் அதிகம் அடி படாத கம்பெனி என்றால் மஹிந்திரா தான். இந்த கம்பெனிக்கு டிராக்டர் வியாபாரம் இருப்பதாலும், இந்த ஆண்டு மழை சராசரியாக பொழியும் எனக் கணித்து இருப்பதாலும் ஓரளவுக்கு சம்பள குறைப்பை கையில் எடுக்காமல் இருக்கிறார்கள் எனச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
நல்ல செய்தி
இந்த இக்கட்டான சூழலிலும், தங்கள் விற்பனை பலமாக பாதிக்கப்பட்டு இருப்பதற்கு இடையிலும், தங்கள் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பாமல் இருக்க, முயற்சித்துக் கொண்டு இருக்கிறார்களாம். எனவே, ஆட்டோமொபைல் கம்பெனிகள், ஊழியர்களின் சம்பளம் போன்ற செலவீனங்களைக் குறைக்கத் தொடங்கி இருக்கிறார்கள் என ஆட்டோமொபைல் கம்பெனியில் வேலை பார்க்கும் ஹெச் ஆர் தலைவர் ஒருவரே எகமானிக் டைம்ஸ் பத்திரிகைக்குச் சொல்லி இருக்கிறார்.