இந்தியாவின் முன்னணி ரீடைல் நுகர்வோர் நிறுவனமான டிமார்ட் கடைகளின் தாய் நிறுவனமான அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் 2020-21ஆம் நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில் லாபத்தில் 38.39 சதவீத வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளது மட்டும் அல்லாமல் இந்நிறுவனத்தின் எதிர்காலத்தின் மீதும் பயம் ஏற்பட்டுள்ளது.
இந்தச் செப்டம்பர் காலாண்டில் தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது ஜியோமார்ட் வர்த்தகத்தை நாட்டின் பல முக்கிய நகரங்களுக்கு விரிவாக்கம் செய்தது மட்டும் அல்லாமல் புதிய விற்பனை பிரிவையும் சேர்த்துள்ளது. இந்தச் செப்டம்பர் காலாண்டில் ஜியோமார்ட் தளத்தில் மளிகை பொருட்களுடன் ஆடை விற்பனையும் துவங்கிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.
அதுமட்டும் அல்லாமல் இதே காலகட்டத்தில் ஜியோமார்ட் தனது டிஜிட்டல் விளம்பரத்திற்கான முதலீட்டை 3 மடங்கு அதிகரித்துப் பல புதிய வாடிக்கையாளர்களைச் சேர்த்தது. இதனால் நுகர்வோர் வாடிக்கையாளர்கள் பெருமளவில் ஜியோமார்ட்-க்கு மாறிவிட்டதால் தான் டிமார்ட்-ன் லாபம் அளவீடுகள் குறைந்துள்ளது எனக் கருத்து நிலவுகிறது.
டிமார்ட் லாபம் வீழ்ச்சி
டிமார்ட் கடைகள் நாடு முழுவதும் பெரு மற்றும் சிறு நகரங்களில் உள்ளது. கொரோனா பாதிப்பால் வர்த்தக அளவீடுகள் சரிந்தாலும், ஜூன் காலாண்டில் நிலையான வர்த்தகத்தைப் பெற்றது. ஆனால் செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் லாப அளவீடுகள் கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் 38.39 சதவீதம் சரிந்து வெறும் 199 கோடி ரூபாய் மட்டுமே லாபமாகப் பெற்றுள்ளது.
2019-20 நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டில் டிமார் 323 கோடி ரூபாயை லாபமாகப் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
வருவாய்
இதேபோல் கடந்த வருடச் செப்டம்பர் காலாண்டில் 5,991 கோடி ரூபாயை வருவாயாகப் பெற்ற அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் இந்த வருடம் செப்டம்பர் 30 உடன் முடிந்த காலாண்டில் 11.43 சரிவில் 5,306 கோடி ரூபாய் மட்டுமே வருவாயாகப் பெற்றுள்ளது.
இதனால் இந்நிறுவனத்தின் EBITDA அளவீடு கடந்த வருடத்தை விடவும் 2.40 சதவீதம் சரிந்து 8.6 சதவீதத்தில் இருந்து 6.2 சதவீதமாகக் குறைந்துள்ளது.
தொடர் வளர்ச்சி
இந்தக் காலாண்டில் ஒவ்வொரு மாதமும் வர்த்தகம் அதிகரித்தாலும், இன்னும் கொரோனாவுக்கு முன் இருந்த அளவீடுகள் அடையவில்லை. வாடிக்கையாளர்கள் வருகை எண்ணிக்கை இக்காலகட்டத்தில் சற்று குறைவாகவே உள்ளது, ஆனால் கடந்த மாதத்தை ஒப்பிடுகையில் ஒவ்வொரு மாதமும் அதிக வாடிக்கையாளர்களை டிமார்ட் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
சிஇஓ
வர்த்தகம் மற்றும் வாடிக்கையாளர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வரும் காரணத்தால் அடுத்த காலாண்டில் டிமார்ட் சிறப்பான வளர்ச்சியை அடையும் என வென்யூ சூப்பர்மார்ட்ஸ் நிறுவனத்தின் சிஇஓ மற்றும் நிர்வாகத் தலைவர் Neville Noronha தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் சந்தை
செப்டம்பர் 2019ஐ ஒப்பிடுகையில் கொரோனா பாதிப்பு நிறைந்து, மக்களிடம் முழுமையான வருமானம் இல்லாத இந்தக் காலகட்டத்திலும் இந்தியாவில் எப்எம்சிஜி மற்றும் அடிப்படையான பொருட்களின் தேவை மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது.
டிமார்ட்
ஆனால் இந்தக் காலகட்டத்தில் ரீடைல் துறையில் மிகவும் லாபகரமான வர்த்தகத்தைப் பெற்று வந்த டிமார்ட் தற்போது லாபம் மற்றும் வருவாயில் வீழ்ச்சி அடைந்துள்ளது என்றால் இது இத்துறையில் சக போட்டி நிறுவனங்களின் ஆதிக்கத்தின் எதிரொலியாகவே பார்க்கப்படுகிறது.