முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக வலம் வந்து கொண்டு இருக்கும், பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்திற்கு சொந்தமான ருச்சி சோயா நிறுவனம் மறு பங்கு வெளியீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த நிறுவனம் அதன் விளம்பரதாரர்களின் பங்குகளை குறைக்க, இந்த மறுபங்கு வெளியீட்டினை (FPO) செய்ய உள்ளதாக இந்த நிறுவனத்தின் தலைவர் பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
பதஞ்சலி நிறுவனம், ருச்சிய சோயா சமையல் எண்ணெய் நிறுவனத்தினை கடந்த ஆண்டில் தான் 4,350 கோடி ரூபாய் கொடுத்து திவாலான நிலையில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த நிறுவனத்தினை பதஞ்சலி மிக திறமையாக கையாண்டு வருகின்றது. அதுமட்டும் அல்ல நடப்பு ஆண்டில் இதன் வளர்ச்சி அதிகரிக்கும் என்றும் நம்புவதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
மறுபங்கு வெளியீடு
இந்த நிறுவனத்தின் புரோமோட்டார்கள் கிட்டதட்ட 99 சதவீதம் பங்குகளைக் கொண்டுள்ளனர். மேலும் அவர்கள் குறைந்தபட்சம் 25 சதவீதம் பொது பங்குதாரர் விதிமுறையை பூர்த்தி செய்ய தங்கள் பங்குகளை விற்பனை செய்ய வேண்டும். இதனால் நாங்கள் FPO செய்ய திட்டமிட்டுள்ளோம். ஆக இதன் மூலம் எங்களது பங்குகளை அடுத்தாண்டில் விற்பனை செய்வோம் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
செபி விதிமுறை
செபி விதிமுறைகளின் படி, புரோமோட்டர்கள் ஜூன் 2021க்குள் 10% பங்குகளையும், 36 மாதங்களுக்குள் 25% பங்குகளையும் குறைக்க வேண்டும் என்று இந்த நிறுவனத்தின் அதிகாரி ஓருவர் கூறியுள்ளார். இது தொடர்பான இந்த நிறுவனத்தின் குழு ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
எனினும் இந்த FPO பங்கு வெளியீட்டில் எவ்வளவு பங்கு விற்பனை செய்யப்படும் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.
யார் எவ்வளவு பங்கு?
தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தால் அங்கீகரிக்கப்பட்ட தீர்மானத் திட்டத்தின் படி, விளம்பரதாரர்கள் மற்றும் ஊக்குவிப்பு குழு தற்போது ருச்சி சோயாவில் 98.90 சதவீதம் பங்குகளை வைத்துள்ளனர். மீதமுள்ள 1.10 சதவீதம் பங்குகள் மட்டுமே பொது பங்குகளாகும். செபி விதிகளின் படி, நிறுவனம் அதன் பொது பங்குகளை அதிகரிக்க வேண்டும்.
செப்டம்பர் காலாண்டில் நல்ல லாபம்
கடந்த வாரம் வெளியான இந்த நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு அறிக்கையில், ருச்சி சோயா 28.09% வருவாய் அதிகரித்து 3,990.72 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும், இதன் நிகரலாபம் 54.88 சதவீதம் அதிகரித்து 126.73 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்திருந்தது. இதே 2019 - 20ம் நிதியாண்டில் ருச்சி சோயா நிறுவனத்தின் வருவாய் 13,117.79 கோடி ரூபாயாக உள்ளது.
நன்றாக இயக்கியுள்ளோம்
இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டிருந்த அறிக்கையில், நாங்கள் ருச்சி சோயாவை நன்றாக இயக்கியுள்ளோம். எங்களுக்கு எஃப் எம்சிஜி நிறுவனத்தினை இயக்குவதில் மட்டுமே அனுபவம் இருக்கிறது என்றும் மக்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் நாங்கள் இந்த வணிகத்தினை நன்றாகவே இயக்கியுள்ளோம் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.