யோகா குருவான பாபா ராம்தேவ்-ன் பதஞ்சலி நிறுவனம் பல தடைகளையும், வர்த்தகப் போட்டியை சமாளித்து 4,350 கோடி ரூபாய் என்ற பெரும் தொகைக்குக் கைப்பற்றி ருச்சி சோயா நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் பாபா ராம்தேவ், பதஞ்சலி நிறுவனத்தின் தலைவர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா உட்படப் பாபா ராம்தேவ்-ன் இளைய சகோதரரான ராம் பாரத் இடம்பெற்றுள்ளார்.
இதுகுறித்து ருச்சி சோயா பங்குச்சந்தையில் சமர்ப்பித்த அறிக்கையில் பாபா ராம்தேவ்-ன் இளைய சகோதரரான ராம் பாரத் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் சேர்க்கப்பட்டு உள்ளார் என்றும், 41 வயதான ராம் பாரத் ருச்சி சோயா நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார் எனத் தெரிவித்துள்ளது.
பதஞ்சலி
ருச்சி சோயா நிறுவனம் திவாலான நிலையில் பதஞ்சலி ஆயுர்வேத் லிமிடெட், திவ்யா யோக் மந்திர் டிரஸ்ட், பதஞ்சலி பரிவாகன் பிரைவேட் லிமிடெட், பதஞ்சலி கிரமுத்யோக் ஆகிய நிறுவனங்கள் இணைந்து NCLT அமைப்பில் இருந்து ருச்சி சோயா நிறுவனத்தைச் சுமார் 4,350 கோடி ரூபாய்க்குக் கைப்பற்றியது.
ருச்சி சோயா நிர்வாகம்
இந்நிலையில் ருச்சி சோயா நிறுவனத்தை முழுமையாகப் பாபா ராம்தேவ் தலைமையிலான பதஞ்சலி குழும நிறுவனங்கள் கைப்பற்றிய நிலையில் மொத்த கட்டுப்பாடும் இக்குழுமத்திற்கு உள்ளது. இதன் வாயிலாகவே புதிய நிர்வாகக் குழு தன் விருப்பத்தின் அடிப்படையில் புதிய நிர்வாகத் தலைவரை நியமித்துள்ளது.
ராம் பாரத்
ஆகஸ்ட் மாதம் நடந்த நிர்வாகக் குழுவின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி ராம் பாரத் முழுநேர தலைவர் பதவியில் இருந்து நிர்வாகத் தலைவராக வருகிற டிசம்பர் 17,2022 வரையில் நியமிக்கப்பட்டார். தற்போது இவரது நியமனத்திற்குப் பங்கு முதலீட்டாளர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
1 ரூபாய் சம்பளம்
ருச்சு சோயா நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராகப் பணியாற்றும் பாபா ராம்தேவ்-ன் இளைய சகோதரரான ராம் பாரத் வருடத்திற்கு 1 ரூபாய் மட்டுமே சம்பளமாகப் பெறுகிறார்.
ஆச்சார்யா பாலகிருஷ்ணா
இதேபோல் பதஞ்சலி குழுமத்தின் தலைவரான ஆச்சார்யா பாலகிருஷ்ணா ருச்சு சோயா நிறுவனத்தின் சேர்மேன் ஆக நியமிக்கப்பட்டு உள்ளது நிர்வாகம். 48 வயதான ஆச்சார்யா பாலகிருஷ்ணாவும் வருடத்திற்கு வெறும் 1 ரூபாய் மட்டுமே சம்பளமாகப் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.