கடந்த ஆண்டு முதல் கொண்டே ஆட்டோமொபைல் துறையானது பலத்த அடி வாங்கி வருகின்றது. இதன் காரணமாக பல ஆயிரம் பேர் கடந்த ஆண்டே வேலையிழந்தனர். பலருக்கு சம்பள குறைப்பு என்று பல அதிரடியான நடவடிக்கைகள் இத்துறையில் இருந்து வந்தன.
இது நடப்பு ஆண்டு தொடக்கத்தில் தான் சற்று மீண்டு வர தொடங்கியது. ஆனால் கடந்த ஆண்டு நிலையினை இன்னும் மோசமாக்கும் விதமாக கொரோனா வந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக முடங்கிபோன வாகன விற்பனையும் தற்போது மீண்டு வர தொடங்கியுள்ளது. இந்த நிலையில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது அவுரங்காபாத்தில் உள்ள வாலுஜ் ஆலையில் உள்ள ஊழியர்களின் சம்பளத்தினை 50 சதவீதம் குறைக்கலாம் என்று கூறப்படுகிறது.
கடுமையான லாக்டவுன்
ஏனெனில் அவுரங்காபாத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக லாக்டவுன் செய்யப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதன் காரணமாக இந்த ஆலை மூடப்பட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கொரோனா வழக்குகள் அங்கு அதிகரித்துள்ளதை அடுத்து, அங்கு ஜூலை 10 முதல் 18 வரை அவுரங்காபாத்தில் கடுமையான பூட்டுதலை அமல்படுத்துவதாக அதிகாரிகள் தரப்பில் ஏற்கனவே கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆலையை மூட அறிவிப்பு வரலாம்
இதன் காரணமாக பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் ஆலையும் மூடக் கோரி அறிவிப்புகள் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக கூறியுள்ளது. மேலும் இந்த நிறுவனம் ஜூலை 8 மற்றும் 9ம் தேதிகளில் உள்ள ஊழியர்கள் மற்றும், பூட்டுதலுக்கு பிந்தைய முதல் நாளில் பணி புரியும் ஊழியர்களுக்கு மீதமுள்ள 50 சதவீத சம்பளம் மட்டுமே கிடைக்கும் என்றும் கூறியுள்ளது.
இவர்களுக்கு சம்பள குறைப்பு இருக்காது
எனினும் இந்த சம்பள குறைப்பானது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், தனிமைப்படுத்தப்பட்டவர்கள், அவசரகால வேலைக்கு அழைக்கப்படுபவர்களுக்கு இந்த சம்பள குறைப்பு இருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது. பஜாஜ் ஆட்டோ மட்டும் அல்ல, இன்னும் பல நிறுவனங்களிலும் இதே நிலை தான் நிலவி வருகிறது.
இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை
இந்த நிறுவனம் இதுவரை பஜாஜ் நிறுவனம் லாக்டவுன் காரணமாக எந்த வித பணி நீக்கமோ செய்யப்படவில்லை. மேலும் சம்பள குறைப்பும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தகக்து.
எனினும் தற்போதைய நிலையில் இன்னும் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டாலோ, உற்பத்தி குறைக்கப்பட்டாலோ, மீண்டும் நிறுவனங்கள் பிரச்சனைக்கு தள்ளப்படலாம். இது மீண்டும் ஊழியர்களுக்கும் நிறுவனங்களுக்கும் தான் பிரச்சனையாக அமையும்.