பஜாஜ் ஆட்டோ லிமிடெட் நிறுவனம் இந்தியாவில் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பில் முன்னணி நிறுவனமாகும். இது பஜாஜ் குழுமத்தின் துணை நிறுவனம் ஆகும்.
பஜாஜ் நிறுவனம் 1930 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியா முழுவதும் நிறைய இடங்களில் பல ஆலைகள் உள்ளது.
இன்றைய நடுத்தர குடும்பத்தினை சேர்ந்த இளைஞர்களின் கனவு பைக்காக இருக்கும் பல்சர் இந்த நிறுவனத்தினை சேர்ந்தது.
சம்பளம் குறைப்பு
இப்படி இந்தியா மக்களை கவர்ந்துள்ள ஒரு நிறுவனம் வரும் ஏப்ரல் 21க்கு அன்று உற்பத்தி தொடங்காவிட்டால், ஊழியர்களின் சம்பளத்தில் 10% குறைக்கப்போவதாக தெரிவித்துள்ளது. இதனையடுத்து இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது பிஎஸ்இ-யில் 2.51% குறைந்து 2,274 ரூபாயாக குறைந்துள்ளது. இதன் முந்தைய நாள் முடிவு விலையானது 2,333 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சரிவு காணலாம்
எனினும் ஏப்ரல் 21 முதல் உற்பத்தி மீண்டும் தொடங்கினால் சம்பளத்தில் குறைப்பு இருக்காது. லார் கேப் பங்கான பஜாஜ் ஆட்டோ, 5 நாள் மற்றும் 20 நாள் மூவிங் ஆவரேஜ்ஜினையும் தாண்டி கீழே வர்த்தகமாவதாகவும் கூறப்படுகிறது. அதோடு 50 நாள் மற்றும் 100 நாள் மற்றும் 200 நாள் சராசரிகளை விடவும் குறைவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தொடக்கத்தில் இருந்தே வீழ்ச்சி தான்
இந்த பங்கானது இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து 27% இழந்துள்ளதாகவும், இதே கடந்த ஆண்டில் 24% இழந்துள்ளது. இந்த நிலையில் தற்போது கொரோனாவினால் லாக்டவுன் செய்யப்பட்டுள்ள நிலையில் உற்பத்தியும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை லாக்டவுன் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக மே 3 வரை நீட்டித்துள்ளது.
மக்களை காப்பாற்ற பொருளாதாரம் தான் பலி
இதற்கிடையில் சில துறைகளுக்கு மட்டும் விலக்கு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் அரசின் வழிகாட்டுதல் படி கட்டாயம் செயல்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் இந்திய மக்களின் உயிரை காப்பாற்ற பொருளாதாரத்தினை பலிகொடுக்க வேண்டியுள்ளது. ஆனால் உயிர்களை காப்பாற்ற வேறு மாற்று இல்லை என்றும் பிரதமர் மோடி கூறியிருந்தார்.