மத்திய அரசு தனது வரி வருமானத்தை அதிகரிக்க எந்தத் துறையில் எல்லாம் சரியான முறையில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவது இல்லையோ அதையெல்லாம் கண்டுப்பிடித்து உரிய வரியை விதித்து, வரி வருமானத்தை இழக்கும் அனைத்து ஓட்டைகளையும் அடைக்கும் பணியில் இறங்கியுள்ளது மத்திய வருமான வரித்துறை.
இந்நிலையில் தற்போது வரித்துறை பேக்கரி மற்றும் சில பிரிவு உணவு கடைகளுக்கு அதிகப்படியான வரியை விதிக்கத் திட்டமிட்டு வருகிறது.
உணவு
இந்தியாவில் பல கடைகளில் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட உணவை வெறுமெனச் சட்டியில் வாட்டி அல்லது மைக்ரோவேவ் ஓவனில் சூடு செய்து விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் கேக் மீது க்ரீம் தடவி கொடுப்பது எல்லாம் சமையல் கிடையாது. அதனால் 5 சதவீதம் இருக்கும் ஜிஎஸ்டி வரி 18 சதவீதமாக உயர்த்த வேண்டும் என வரித் துறை பரிந்துரை செய்துள்ளது.
18 சதவீத ஜிஎஸ்டி வரி
உணவு விற்பனையில் ஒரு உணவு எப்படிச் சமைக்கப்படுகிறது என்பதைப் பொருத்தும் வரி விதிப்பு மாறும். தற்போது வருமான வரித்துறை குறிவைத்துள்ள பெரும்பாலான கடைகள் சென்டரலைஸ்டு கிட்சனில் சமைக்கப்பட்ட உணவை ரீடைல் விற்பனை கடைகளுக்குக் கொண்டு வந்து சூடு செய்தோ, க்ரீம் அல்லது சாஸ் தடவியோ வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகிறது.
வரித்துறை
கடைக்கும், ரெஸ்டாரென்ட்-க்கும் இருக்கும் பெரிய வித்தியாசமே இந்தச் சமைக்கும் முறை தான். சூடு செய்தோ, க்ரீம் அல்லது சாஸ் தடவியோ கொடுப்பது சமைப்பது கிடையாது, இதனால் 5 சதவீத வரியில் அதிக லாபத்தைப் பார்க்கும் இத்தகைய கடைகளுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட வேண்டும் என வரித்துறை விளக்கம் கொடுத்துள்ளது.
முக்கிய உணவுகள்
உதாரணமாகக் கேக், சிக்கன், puffs, கட்லெட், மோமோஸ் போன்ற பல உணவுப் பொருட்கள் இத்தகைய பிரிவில் வரும். மேலும் வருமான வரித்துறை மும்பையில் இருக்கும் முன்னணி பேக்கரியை இந்தப் பிரச்சனையின் கீழ் கண்காணிப்பில் வைத்துள்ளது.
ஜிஎஸ்டி வரி மறுசீரமைப்பு
நரேந்திர மோடி அரசு அமலாக்கம் செய்துள்ள ஜிஎஸ்டி வரி அமைப்பில் 0, 5, 12, 18, 28 சதவீதம் என 5 பிரிவுகளாக உள்ளது. இந்த வரி அமைப்பு வர்த்தகர்களுக்கும், மக்களுக்குக் கடுமையாகவும், சுமையாக இருக்கிறது எனக் கருந்து நிலவியது. இந்நிலையில் கடந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் 12 மற்றும் 18 சதவீத வரி பிரிவை இணைத்து 15 அல்லது 16 சதவீத வரியாக மறுசீரமைப்புச் செய்வதாகப் பேச்சுவார்த்தை நடந்தது.
வரி உயர்வு
ஆனால் அடுத்த நடக்க உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 5 சதவீத வரி பலகையை 8 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளதாகவும் அதற்கான மாநில நிதியமைச்சர்கள் குழு தனது அறிக்கையைச் சமர்ப்பிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.