நீங்கள் வாகனத்துறையில் உள்ளீர்கள் எனில் நிச்சயம் பால்கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ் பற்றி அறிந்திருக்க வாய்ப்புண்டு. மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் நிறுவனம் தான் Balkrishna Industries.
இந்த நிறுவனம் நெடுஞ்சாலை அல்லாத வாகனங்கள் பயன்படுத்தும் டயர்களை (ஆஃப் ஹைவே டயர்) உற்ப்சத்தி செய்து விற்பனை செய்து வருகின்றது.
கடந்த 1987ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் விவசாயம், கட்டுமானம் மற்றும் தொழிற்சாலைகள், எர்த் மூவிங், துறைமுகம் மற்றும் சுரங்கங்களில் பயன்படுத்தப்படும் வாகனங்கள், அனைத்து நிலப்பரப்பிலும் செல்லும் (ஆல் டெரைன்) வாகனங்கள், தோட்டங்களில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் போன்றவற்றிற்கு, தேவைப்படும் டயர்களை உற்பத்தி செய்து, விற்பனையும் செய்து வருகிறது.
சர்வதேச சந்தையில் பங்கு
இந்த நிறுவனம் குறிப்பாக இந்த பிரிவில் முழுமையான கவனத்துடன் ஆரம்பக்காலம் தொட்டு செயல்பட்டு வருவதால், உலக அளவில் உள்ள ஆஃப் ஹைவே டயர் துறையில் 6% அளவிலான சந்தைப் பங்களிப்பைக் கொண்டு திகழ்கிறது. தற்போது வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நான்கு துணை நிறுவனங்களைக் கொண்டுள்ளது.
என்னென்ன துறை நிறுவனங்கள்?
இத்தாலியில் உள்ள செர்க்னோவில் பி.கே.டி யூரோப் எஸ்.ஆர்.எல் (BKT Europe), அமெரிக்காவில் ஓஹியோவில் பி.கே.டி டயர்ஸ் யு.எஸ்.ஏ இன்க் (BKT Tires USA Inc), கனடாவில் உள்ள டொரான்ட்டோவில் பி.கே.டி டயர்ஸ் கனடா இன்க் (BKT Tires Inc.), டெனெசியில் ப்ரெட்டன்வுட் எனும் இடத்திலுள்ள பி.கே.டி டயர்ஸ் இன்க் (BKT Tires Inc) என்ற நான்கு துணை நிறுவனங்களைக் கொண்டுள்ளது இந்த பால்கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம்.
இந்தியாவில் எங்கெங்கு?
இந்த நிறுவனம் முழுக்க முழுக்கத் தன் உற்பத்தி வசதிகளை இந்தியாவிலேயே கொண்டிருக்கிறது. இந்தியாவில் அவுரங்காபாத்தில் தனது முதல் உற்பத்தி ஆலையை தொடங்கியது. இதனையடுத்து ராஜஸ்தானில் உள்ள பிவாடி, சோபான்கி, டோம்பிவாலி (மும்பை) மற்றும் பூஜ் உள்ளிட்ட பல இடங்களில் தன்னுடைய உற்பத்தியினை செய்து வருகிறது.
என்னென்ன தயாரிப்புகள்
ஆரம்பக்காலத்தில் மூன்று சக்கர வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள், கார்கள், ஜீப்கள் மற்றும் இலகு ரக ட்ரக்குகள் போன்றவற்றிற்கான டயர்களை உற்பத்தி செய்து வந்தது. ஆனால் 1995-லிருந்து ஆஃப் ஹைவே ரக வாகனங்களுக்கான டிரக்குகளை உற்பத்தி செய்ய ஆரம்பித்துள்ளது.
அதோடு பிவாடியில் உள்ள தொழிற்சாலையில் விவசாயத்திற்கு உதவும் வாகனங்களில் பயன்படுத்தப்படும் ரேடியல் டயர்கள் மற்றும் விவசாய வாகனங்களுக்குத் தேவையான சாதாரண ரக டயர்கள், எர்த் மூவிங் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் போன்றவற்றுகான டயர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
6 மாதத்தில் 120% லாபம்
இப்படி ஏரளாமான அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ள இந்த நிறுவனம், கடந்த ஆறு மாதத்தில் மட்டும் 120% லாபத்தினை கொடுத்துள்ளது. இந்த நிலையில் இன்று மட்டும் 6% மேலாக அதிகரித்து 1443.75 ஆக முடிவடைந்துள்ளது. இதுவே இன்று காலை நேர வர்த்தகத்தில் அதிகபட்சமாக 9% அதிகரித்து காணப்பட்டது.
இவ்வளவு ஏற்றமா?
இது அதிகப்படியான தேவை காரணமாக இந்த அளவுக்கு பலமான ஏற்றத்தினைக் கண்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த பங்கின் விலையானது ஆகஸ்ட் 2018ல் 1467.80 ரூபாய் தான் முந்தைய உச்சமாக இருந்தது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் 52 வார குறைந்த விலையான 677.60 ரூபாயினையும் தொட்டது. எனினும் நடப்பு ஆண்டின் ஏப்ரல் - செப்டம்பர் வரையிலான காலத்தில் 118% ஏற்றம் கண்டுள்ளது.
இன்றைய பங்கு நிலவரம்
கடந்த வெள்ளிக்கிழமையன்று பால்கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 1356.60 ரூபாயாக முடிவடைந்தது. இந்த நிலையில் இன்று தொடக்கத்திலேயே 1368 ஆக தொடங்கியது. இதன் பினனர் 9.21% அதிகரித்து, 1,482 என்ற புதிய உச்சத்தினை தொட்டது. எனினும் முடிவில் 1443.75 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது.
போட்டி நிறுவனங்களின் நிலை?
இதே போட்டி நிறுவனங்களாக எம் ஆர் எஃப் (MRF), ஜேகே டயர்ஸ், அப்பல்லோ டயர்ஸ் மற்றும் சியாட் உள்ளிட்ட பங்குகளும் 3 -7% வரை அதிகரித்துள்ளன. முதலீட்டாளர்கள் இத்துறையில் அதிகரித்து வரும் தேவை, ஏற்றுமதி தேவை உள்ளிட்டவை அதிகரித்து வரும் நிலையில், தங்களது முதலீடுகளை டயர் பங்குகளில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் காரணமாக இத்துறை சார்ந்த பங்குகள் பலத்த ஏற்றத்தில் உள்ளன.
தேவையும் விழாக்கால பருவத்தில் அதிகரிக்கும்
அதோடு இந்தியாவில் அடுத்து வரும் பண்டிகை கால சீசனில் தேவை இன்னும் அதிகரிக்கும் என்ற உந்துதலும் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகரலாபம் 131.56 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே இதற்கு முந்தைய ஆண்டில் 176.84 கோடி ரூபாயாகவும் அதிகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இது சுமார் 26% சரிவாகும்.


Click it and Unblock the Notifications