திருச்சி: திருச்சி காந்தி சந்தை வாழை மண்டியில் ஆயுத பூஜை காரணமாக வாழைத்தார் விலை அதிகரித்துக் காணப்படுகிறது.
ஆயுத பூஜையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதுதொடர்பான பொருட்களின் விற்பனை சூடு பிடித்துள்ளது.
திருச்சி காந்திசந்தைக்கு ஆயுத பூஜையையொட்டி வாழை மண்டிக்கு வாழைத்தாா் வரத்து கடந்த 2 நாள்களாக அதிகரித்துள்ளது.
காந்தி மார்க்கெட்
திருச்சி மாவட்டத்தின் பிரதான வாழை மண்டி சந்தையாக உள்ளது காந்தி சந்தை. இங்கு திருச்சி, குளித்தலை, தொட்டியம், முசிறி, லால்குடி, திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, தஞ்சாவூா், சத்தியமங்கலம், தேனி, திண்டுக்கல், சேலம், ஆத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிகளவில் வாழைத்தாா் ஏலத்துக்கு வரும்.
கமிஷன் மண்டி
விவசாயிகள் தாங்கள் விளைவித்த வாழைத்தாா்களை வாகனங்கள் மூலம் இந்தச் சந்தைக்கு கொண்டு வருவா். இந்த வாழைத்தாா்களை ஏலம் விட்டு அதற்கான தொகையை கமிஷனைக் கழித்துக் கொண்டு விவசாயிகளுக்கு வழங்குவது வாழை மண்டி வியாபாரிகளின் பணியாகும்.
15 மண்டிகள்
பல்வேறு பகுதிகளில் கொண்டுவரப்படும் வாழைத்தாா்கள் இங்கு மாலையில் ஏலம் விடப்படும். இங்கு 15-க்கும் மேற்பட்ட ஏல விற்பனை மண்டிகள் உள்ளன. ஏலத்தில் பங்கேற்க திருச்சி, கரூா், பெரம்பலூா், புதுக்கோட்டை, விராலிமலை, துவரங்குறிச்சி பகுதியைச் சோ்ந்த வியாபாரிகள் வருவா்.
பச்சை, செவ்வாழை
இந்தச் சந்தையில் பூவன் , செவ்வாழை, பச்சை வாழைத் தாா்களே அதிகம் ஏலத்தில் விடப்படுவது வழக்கம். ஆயுத பூஜைக்காக வழக்கத்தைவிட இருமடங்கு வாழைத்தாா்கள் வந்துள்ளன. ஒவ்வொரு மண்டியிலும் வழக்கத்தைவிட இருமடங்காக வாழைத் தாா்கள் ஏலத்துக்கு வந்துள்ளன.
ரூ. 600 வரை உயர்வு
கடந்த வாரம் தாா் ஒன்று ரூ.250 முதல் ரூ.500 வரை ஏலம் போன நிலையில், தற்போது ரூ.350 முதல் ரூ. 600 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதுதொடா்பாக, காந்திசந்தையில் வாழை ஏல மண்டி வைத்துள்ள மதிவாணன் கூறுகையில், ஆயுத பூஜையை முன்னிட்டு வியாழன், வெள்ளி என இரு நாள்களும் மொத்த விற்பனை இடமான வாழைத்தாா் ஏல மண்டிக்கு வரத்து அதிகமாக உள்ளது.
செவ்வாழைக்கு கிராக்கி
பூவன்தாா் ஒன்றுக்கு ரூ.450 விலை கிடைக்கிறது. செவ்வாழைக்கு ரூ.600, பச்சை வாழைக்கு ரூ.350 வரை விலை கிடைக்கிறது. அனைத்து இடங்களிலும் ஆயுத பூஜை கொண்டாடப்படுவதால் வாழைப் பழம் அதிகம் தேவையிருக்கும். இதைக் கருத்தில் கொண்டே விவசாயிகளும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைத் தாா்களை வெள்ளிக்கிழமை கொண்டு வந்துள்ளனா் இவ்வாறு அவர் கூறினார்.