இந்தியாவில் சுமார் மூன்று மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இந்த நிலையில் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் பெட்ரோல் விலை விண்ணைத் தொட்டு உள்ளன என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் இந்தியாவின் மற்றொரு அண்டை நாடான வங்கதேசத்தில் 52% பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருளின்விலை உயர்த்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திரமான பிறகு வங்கதேசத்தில் மிகப்பெரிய அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக அந்நாட்டு மக்கள் வீதியில் இறங்கி போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா
நேற்று வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா அவர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 44 டாக்காவும், டீசல் விலை லிட்டருக்கு 34 டாக்காவும், ஆக்டேன் விலை லிட்டருக்கு 46 டாக்காவும் விலை உயர்வு என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வங்கதேச மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
52 விலை உயர்வு
இந்த விலை உயர்வு என்பது இதற்கு முன் இருந்த விலையிலிருந்து 52% அதிகம் என்பதும், 1971ஆம் ஆண்டு வங்கதேசம் சுதந்திரம் பெற்ற பிறகு இந்த அளவிற்கு பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது இதுவே முதல் முறை எனவும் அந்நாட்டு பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பெட்ரோல் விலை
இந்த நிலையில் விலை ஏற்றத்திற்கு பிறகு தற்போது வங்கதேச தலைநகர் டாக்காவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 135 டாக்காவாக உள்ளது. இது முந்தைய விலையை விட சுமார் 52 சதவீதம் அதிகமாகும்.
எரிசக்தித் துறை அமைச்சகம்
இது குறித்து வங்கதேச எரிசக்தித் துறை அமைச்சகம் விளக்கமளித்தபோது, ;சர்வதேச சந்தை நிலவரப்படி பெட்ரோல் டீசல் விலை தவிர்க்க முடியாதது என அறிவித்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் போரின் விளைவுகளால் ஏற்பட்ட இழப்புகளுக்காக எரிபொருள் விலை உயர்த்தப்பட்டதாகவும் வங்கதேச பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (BPC) குறைந்த விலையில் எரிபொருளை விற்றதன் மூலம் 8,014.51 கோடி டாக்கா நஷ்டம் அடைந்துள்ளதாகவும் வங்கதேச எரிசக்தித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆர்ப்பாட்டம்
வங்கதேச அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வு அறிவிப்பை கேட்டு ஆத்திரமடைந்த வங்கதேச பொது மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்து வருவதாகவும், எரிபொருள் நிலையங்களை சூழ்ந்து முற்றுகைப் போராட்டம் நடத்தி வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தட்டுப்பாடு
மேலும் இந்த விலை உயர்வு காரணமாக பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டதால் மக்கள் தங்கள் வாகனங்களுடன் பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்ப நீண்ட வரிசையில் பெட்ரோல் நிலையங்களில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வங்கதேசம் இன்னொரு இலங்கையாக மாறி விடுமோ என்ற அச்சமும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் விளக்கம்
இது குறித்து வங்கதேச மின்சார எரிசக்தி மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் நஸ்ருல் ஹமித் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியபோது, 'பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் என்பது நாட்டு மக்களால் சகித்து கொள்ள முடியாத ஒரு விஷயம் என்றாலும் அரசுக்கு வேறு வழியில்லை என்றும் மக்கள் பொறுமை காக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.