சீனாவிடமிருந்து உலக நாடுகள் கடன் பெற வேண்டாம் என்றும் அப்படியே கடன் வாங்குவதாக இருந்தாலும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து வாங்க வேண்டுமென்றும் வங்கதேச நிதி அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சீனா பல நாடுகளுக்கு கடன் கொடுத்து பின்னர் அந்த நாடுகளை தன்வசப்படுத்திக் கொண்டு பல்வேறு சலுகைகளை பெற்று வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் வங்கதேச அமைச்சரின் இந்த எச்சரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை உள்பட பல நாடுகள் திவால் ஆனதற்கு தற்போது சீனா கொடுத்த கடன் தான் காரணம் என்றும் கூறப்பட்டு வருகிறது.
பெல்ட் அண்ட் ரோடு
பெல்ட் அண்ட் ரோடு (பிஆர்) என்ற திட்டத்தை சீனா கடந்த 2013ஆம் ஆண்டு செயல்படுத்துவதாக அறிவித்தது. இந்த திட்டத்தை சீன அதிபர் ஜின்பிங் அறிவித்ததன் காரணம், ஆசிய நாடுகள் உட்பட மேற்கத்திய நாடுகளுடன் வர்த்தகத்தை மேம்படுத்த வேண்டும் என்பது மட்டுமே குறிக்கோளாக இருந்தது.
போக்குவரத்து இணைப்பு
இந்த திட்டத்தின் மூலம் சீனா உலக நாடுகளை தங்கள் நாட்டுடன் போக்குவரத்தின் மூலம் இணைக்கும் என்றும் சீனாவிலிருந்து பிற நாட்டிற்கு சாலை போக்குவரத்து, கடல் போக்குவரத்து ஆகியவற்றை ஏற்படுத்திக் கொள்ளும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக சீனாவில் இருக்கும் துறைமுகங்களை உலகில் பல நாடுகளின் துறைமுகங்களோடு இணைப்பதே தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் திட்டத்தின் முக்கிய அம்சம் ஆகும்.
வளரும் நாடுகளுக்கு கடன்
சீனாவில் உள்ள துறைமுகங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், சரக்கு முனையங்கள் ஆகியவற்றை மற்ற நாடுகளுடன் சாலை மார்க்கமாகவும், கடல் மார்க்கமாகவும், வான் வழியாகவும் இணைக்க திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக உலகின் வளரும் நாடுகளுக்கு பெரும் தொகையை கடனாக வழங்க சீனா முன்வந்துள்ளது. இதன் மூலம் உலகம் முழுவதும் சீனாவுடன் தொழில்முறையில் இணையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவின் உண்மை முகம்
இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக வளரும் நாடுகளுக்கு சீனா பெரும் தொகையை கடன் அளித்து வருகிறது. மக்களின் அத்தியாவசிய தேவை இல்லாத இந்தத் திட்டத்திற்காக கடன் வாங்கும் நாடுகள் அதன் பின்னர் அந்தக் கடனை திருப்பி கொடுக்க முடியாமல் தள்ளாடி வரும் நிலையில் சீனா தனது உண்மையான முகத்தை காட்டுகிறது என்றும் கடனை திருப்பி கொடுக்காத நாடுகளின் துறைமுகங்களை தன்வசப்படுத்தி கொள்கிறது என்றும் வங்கதேச அமைச்சர் முஸ்தபா கமல் தெரிவித்துள்ளார்.
மோசமான கடன்
இது ஒரு மோசமான கடன் வகை என்றும் சீனாவிடம் இருந்து இந்த கடனை வாங்கும் நாடுகள் அழுத்தங்களை சந்திக்கின்றது என்றும் இத்திட்டத்திற்கு கடன் வாங்குவதற்கு முன் முழுமையாக ஆய்வு செய்து நமது நாட்டிற்கு இந்தத் திட்டம் தேவை என்றால் மட்டுமே கடன் வாங்க வேண்டும் என்றும் வங்கதேச அமைச்சர் முஸ்தபா கமல் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தின் கடன்
எங்கள் நாட்டை பொறுத்தவரை அவசியமான பணிகளுக்கு மட்டுமே கடன் வாங்குவோம் என்றும் முடிந்தவரை நாங்கள் கடனை விரைவாக செலுத்தி வருகிறோம் என்று முஸ்தபா கமல் கூறியுள்ளார். அவசியமில்லாத திட்டத்திற்கு கடன் கொடுத்தால் நாங்கள் வேண்டாம் என்று சொல்லி விடுவோம் என்றும் குறிப்பாக சீனாவிடம் இருந்து கடன் வாங்குவது இல்லை என்பதை கொள்கை அளவில் முடிவெடுத்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார். உலக நாடுகள் சீனாவிடம் இருந்து கடன் பெறுவதற்கு முன் பல முறை யோசிக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருப்பது உண்மையில் பல நாடுகளை யோசிக்க வைத்துள்ளது.