ஜால்னா, மகாராஷ்டிரா: பொதுவாக ஏடிஎம் இயந்திரத்தை குறி வைக்கும் கொள்ளையர்கள், ஏடிஎம் இயந்திரத்தில் இருக்கும் பணத்தை திருடிச் செல்வார்கள் அல்லது ஏடிஎம் இயந்திரத்தையே மொத்தமாக திருடிச் செல்வார்கள். ஆனால் இங்கு மகாராஷ்டிராவின், ஜால்னா மாவட்டத்தில், ஏடிஎம் இயந்திரத்தில் இருக்கும் பணப் பெட்டியை மட்டும் திருடிச் சென்று இருக்கிறார்கள் கொள்ளையர்கள்.
மகாராஷ்டிராவின் ஜால்னா மாவட்டத்தில் நுதன் வசஹத் பகுதியில் இருக்கும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் ஒரு ஏடிஎம் இயந்திரத்தில், கடந்த திங்கள் அன்று இந்த ஏடிஎம் கொள்ளை சம்பவம் நடந்து இருக்கிறது. ஏடிஎம் இயந்திரத்தில் இருக்கும் இந்த பணப் பெட்டியை உடைத்து பணத்தை மட்டுமே திருடிச் செல்ல முயன்று இருக்கிறார்கள் கொள்ளையர்கள். ஆனால் அவர்கள் நினைத்தது போல் பணத்தை மட்டும் கொள்ளை அடித்துக் கொண்டு செல்ல முடியவில்லை. எனவே ஏடிஎம் இயந்திரத்தில் இருக்கும் பணப் பெட்டியை மட்டும் திருடிச் சென்று இருக்கிறார்கள்.
கொள்ளையர்கள் இத்தனை ரிஸ்க் எடுத்து திருடிச் சென்ற ஏடிஎம் பணப் பெட்டியில் வெறும் 13,000 தான் பணம் இருந்ததாக காதி ஜால்னா காவல் நிலையத்தின் பொறுப்பாளர் தேவிடாஸ் ஷேல்கே சொல்லி இருக்கிறார்.
ஏடிஎம் இயந்திரத்துக்கு அருகில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில், கொள்ளையர்கள் கொள்ளை அடித்த முழு வீடியோவும் பதிவாகி இருக்கிறதாம். இந்த வீடியோ ஆதாரத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு, காவல் துறையினர் மேற்கொண்டு விசாரித்து வருகிறார்களாம்.
இதுவரை பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் ஏடிஎம் இயந்திரங்களில், கொள்ளை அடித்த திருடர்களைப் பற்றிய எந்த ஒரு அடையாளமும் கிடைக்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிட வேண்டி இருக்கிறது.
நல்ல வேளையாக கொள்ளை அடித்த பணம் வெறும் 13,000 என்பதால் வங்கிக்கும் ஓரளவுக்கு நிம்மதி இருந்திருக்கும். இதுவே லட்சக் கணக்கில் பறி போய் இருந்தால், வங்கிக்கு தான் தலைவலி அதிகரித்து இருக்கும். இப்படி வங்கிகளில் இருப்பது, நம்மை போன்ற சாதாரண மக்களின் பணம் தானே. இனியும் இப்படிப்பட்ட ஏடிஎம் கொள்ளை சம்பவங்கள் நடக்காமல் இருந்தால் சரி. நடக்காமல் இருக்கும் என நம்புவோம். வங்கிகள் இன்னும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்கட்டும்.