இந்தியாவில் 1969-ம் ஆண்டு பல வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. ஆனால் இன்று பல அரசு வங்கிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு வருகின்றன.
பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்து வங்கி சார்ந்த, பல புதிய சட்ட திட்டங்களையும், அதிரடி நடவடிக்கைகளையும் எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக இன்று இந்திய வங்கித் துறையில் இருக்கும் என் பி ஏ பிரச்சனையை தங்களால் இயன்ற வரை சிறப்பாக கையாண்டு வருகிறார்கள்.
வங்கித் துறையில் Insolvency Bankruptcy Code கொண்டு வந்தது, வங்கி டெபாசிட்டுக்கான இன்சூரன்ஸ் கவரேஜை அதிகரித்தது, வங்கிகள் இணைப்பு என தற்போதைய மத்திய அரசின் நடவடிக்கைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
கடந்த 2017-ம் ஆண்டு, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் ஐந்து துணை வங்கி + பாரதிய மஹீளா பேங்க் ஆகியவற்றை, ஸ்டேட் பேங்க் இந்தியா உடன் இணைத்து ஒரு மிகப் பெரிய வங்கியாக உரு மாற்றினார்கள். இன்று அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட வங்கி, அதிகம் கடன் கொடுத்திருக்கும் வங்கி, அதிக வங்கிக் கிளைகளைக் கொண்ட வங்கி என பலவற்றில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தான் நம்பர் 1.
மற்ற வங்கிகள்
கடந்த ஏப்ரல் 2020-ல் பஞ்சாப் நேஷனல் பேங்க் உடன் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய இரண்டு வங்கிகளை இணைத்து இந்தியாவின் இரண்டாவது பெரிய பொதுத் துறை வங்கியாக மாற்றினார்கள்.
கனரா வங்கி உடன் சிண்டிகேட் வங்கியை இணைத்தார்கள்.
அலஹாபாத் வங்கி & இந்தியன் வங்கி உடன் இணைத்தார்கள்.
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா உடன் ஆந்திரா பேங்க் மற்றும் கார்ப்பரேஷன் பேங்கை இணைத்தார்கள்
4 வங்கிகள் தனியார்மயம்
இப்போது வங்கிகள் இணைப்பதைத் தாண்டி, நான்கு அரசு வங்கிகளை, இந்த நிதி ஆண்டுக்குள் தனியார்மயமாக்க வாய்ப்பு இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
பஞ்சாப் & சிந்த் பேங்க், பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, யூகோ பேங்க், ஐடிபிஐ பேங்க் போன்ற வங்கிகள் இந்த தனியார்மய நடவடிக்கைப் பட்டியலில் இருக்கிறதாம்.
எந்த வங்கியில் எவ்வளவு பங்கு
மும்பை பங்குச் சந்தை வலைதளத்தில் இருக்கும் விவரப்படி,
1. யூகோ வங்கியில் மத்திய அரசு 94.44 % பங்குகளை வைத்திருக்கிறது.
2. பேங்க் ஆஃப் மகாரஷ்டிரா வங்கியில் மத்திய அரசு 92.49 % பங்குகளை வைத்திருக்கிறது.
3. ஐடிபிஐ வங்கியில் மத்திய அரசு 47.11 % பங்குகளையும் எல் ஐ சி 51.00 % பங்குகளையும் வைத்திருக்கின்றன.
4. பஞ்சாப் & சிந்த் வங்கியில் மத்திய அரசு 83.06 % பங்குகளை வைத்திருக்கிறது.
பங்குகள் விற்பனை (Disinvestment)
இந்த கொரோனா வைரஸ் கால கட்டத்தில் அரசுக்குத் தேவையான வருவாய்கள் சரியாக வரவில்லை. எனவே, அரசு வங்கிப் பங்குகளை விற்று, பணத்தைத் திரட்ட, மத்திய அரசு வேலை பார்த்து வருவதாக, ஒரு சில மூத்த அரசு அதிகாரிகள் ராய்டர்ஸுக்குச் சொல்லி இருக்கிறார்களாம். அரசு பங்கு விற்பனைகளை, மத்திய அரசு சீரியஸாக கையில் எடுத்து இருப்பதாகவே தெரிகிறது.


Click it and Unblock the Notifications