நம் வாழ் நாளில் இப்படி ஒரு செய்தியினை இதுவரை கேள்விப்பட்டிருக்கவும் முடியாது. இனி இதுபோன்ற மதிப்பீடுகள் வருமா? என்பதும் சந்தேகம் தான்.
அப்படி என்ன செய்தி என்று தானே கேட்கிறீர்கள். இதுவரை இல்லாத அளவு இந்தியாவின் வளர்ச்சியினை முதன் முறையாக ஒரு மதிப்பீட்டு நிறுவனம் பூஜ்ஜியமாக கணித்துள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவின் வளர்ச்சியினை பல்வேறு மதிப்பீட்டு நிறுவனங்கள் குறைத்து வருகின்றன.
ஜிடிபி வளர்ச்சி குறைப்பு
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் காலாண்டர் ஆண்டு 2020ல் பூஜ்ஜியமாகத் தான் இருக்கும் என்று கணித்துள்ளது பார்க்லேஸ். இந்தியாவின் வளர்ந்து வரும் சந்தை ஆராய்ச்சி நிறுவனமான பார்க்லேஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியினை 2.5%ல் இருந்து 0% ஆக குறையும் என்று கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லாக்டவுன் நீட்டிப்பு
இதே 2020 - 2021ம் நிதியாண்டிற்கான வளர்ச்சியினை 3.5%ல் இருந்து 0.8% ஆகவும் குறைத்துள்ளது பார்க்லேஸ். இதற்கு முக்கிய காரணம் இந்தியாவில் மேற்கொண்டு கொரோனா தொற்று அதிகரிக்காமல் இருக்க, நீண்ட ஊரடங்கிற்கு பிறகு, இன்று இரண்டாவது முறையாக மே 3 வரை நீட்டிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
பொருளாதார இழப்பு
இந்த லாக்டவுன் காரணமாக பல சேவைத் துறைகளில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பெரும் இழப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இதனால் இந்திய ஜிடிபியில் பெரும் இழப்பு ஏற்படலாம் என்றும், குறிப்பாக 243.4 பில்லியன் டாலர் பொருளாதார இழப்பு, அதாவது ஜிடிபியில் 8.1% பாதிப்பு ஏற்படலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
பெரும் இழப்பு
ஏற்கனவே 21 நாள் லாக்டவுன் செய்யப்பட்ட நிலையில் பெரும் இழப்பினை சந்தித்துள்ள நிலையில், தற்போது மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது மக்களின் உயிரை காப்பாற்ற நல்ல விஷயமாக கருதப்பட்டாலும், இதனால் பொருளாதார ரீதியில் இந்தியா பெரும் இழப்பினை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
லாக்டவுன் நீட்டிக்கப்படலாம்
மேலும் ஏப்ரல் 20க்கு பிறகு கொரோனாவின் தாக்கம் குறையும் பகுதிகளில் ஊரடங்குக்கு சற்று தளர்வு அளிக்கப்படும் என்றும் பிரதமர் கூறியுள்ளார். ஆனால் இந்த ஊரடங்கானது ஜூன் இறுதி வரை நீட்டிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும், அதன் பிறகு ஒரு சுமாரான திருத்தம் வரலாம் என்றும் பார்க்லேஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளது. மேலும் தற்போது தான் இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஆக பொருளாதாரம் தொடர்ந்து வீழ்ச்சி தான் அடையும் எனவும் பார்க்லேஸ் தெரிவித்துள்ளது.