18 வயதில் கோடீஸ்வரரான இளைஞர் ஒருவர் 22 வயதில் கிட்டத்தட்ட அனைத்தையும் இழந்து விட்ட நிலையிலும் அவர் மனம் தளராமல் இருக்கும் செய்தி வெளியாகியுள்ளது.
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஒரு இளைஞர் சிறுவயதிலிருந்தே யூடியூப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் பிரபலமாக இருந்தார்.
அவர் 18 வயதில் கிரிப்டோகரென்ஸி வர்த்தகம் செய்து நான்கு ஆண்டுகளில் தான் சம்பாதித்த கிட்டத்தட்ட அனைத்து சொத்துக்களையும் இழந்தார் என்று கூறப்படுகிறது.
யூடியூப் பிரபலம்
ஜெர்மனியை சேர்ந்த கியாராஷ் ஹொசைன்பூர் என்ற பிரபல யூடியூபர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பிரபலமான இளைஞர் கிரிப்டோகரன்சி வர்த்தகம் செய்து மில்லியன்கணக்கில் சம்பாதித்து கோடீஸ்வரர் ஆனார். யூடியூபில் பிரபலமாகியுள்ள அவரது ஒவ்வொரு வீடியோக்களும் அவருக்கு மிகப்பெரிய வருமானத்தை சம்பாதித்து கொடுத்தது. யூடியூப் மட்டும் இன்ஸ்டாகிராமில் கிடைக்கும் வருமானத்தை அவர் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து பெரும் தொகையை இலாபமாக பெற்றார்.
கிரிப்டோகரன்சியின் வீழ்ச்சி
இந்த நிலையில் திடீரென கிரிப்டோகரன்சியின் மதிப்பு சரிய தொடங்கியபோது அவர் வாங்கி வைத்திருந்த கிரிப்டோகரன்சி படுவீழ்ச்சி அடைந்தது. அதாவது அதிகபட்ச புள்ளியிலிருந்து 60 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது என்று கூறப்படுகிறது.
மில்லியனரில் இருந்து ஜீரோ
இளம் கோடீஸ்வரரான கியாராஷ் ஹொசைன்பூர் மிக அதிகமாக முதலீடு செய்த டெர்ரா லூனா என்ற கிரிப்டோகரன்சி கடந்த மே மாதம் 99 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்தது. அதாவது 120 டாலராக இருந்த லூனா கிரிப்டோகரன்சி ஒரு டாலருக்கு சரிந்ததால் அவர் சம்பாதித்து வைத்திருந்த ஒட்டு மொத்த பணமும் கிட்டதட்ட ஜீரோவாகிவிட்டது.
தவறு செய்துவிட்டேன்
ஒருசில நாட்களில் இந்த அபாயமான சரிவு ஏற்பட்டதையடுத்து அவர் பெரும் அதிர்ச்சி அடைந்தார். இருப்பினும் நான் தவறு செய்துவிட்டேன் என்பதை ஒப்பு கொள்கிறேன், ஆனால் எல்லா நேரத்திலும் எல்லாரும் சரியாக இருக்க முடியாது. துரதிருஷ்டவசமாக சில விஷயங்கள் கணிக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டன என்று கூறினார்.
நீண்டகால முதலீடு
கிரிப்டோவின் மூலம் பெரிய தொகையை இழந்தாலும் தனக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் கிரிப்டோகரன்சி என்பது ஒரு நீண்ட கால முதலீடாக தான் கருதுவதாகவும், தனது முதலீட்டை திரும்ப பெறுவதற்கு பத்து வருடங்கள் காத்திருக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நெருக்கடி
தற்போதைய நெருக்கடியில் இருந்து நான் வெளியே வருவதற்கு மீண்டும் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் கவனம் செலுத்துகிறேன் என்றும் 18 வயதில் பிட்காயின் செய்த அனுபவம் தனக்கு இருப்பதை அடுத்து அதை மேலும் பலருக்கு யூடியூப் மூலம் கற்றுக்கொடுக்க விரும்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.
விற்க மாட்டேன்
நான் வாங்கிய கிரிப்டோகரன்சிகளை இப்போதைக்கு விற்பதாக இல்லை என்றும் ஒருவேளை நான் வாங்கிய பிட்காயின் ஒரு லட்சம் யூரோக்கள் வரை சென்றாலும் கூட நான் விற்க மாட்டேன் என்றும் இது ஒரு நீண்ட கால முதலீடாக தான் நம்புகிறேன் என்றும் அவர் கூறினார்.
நம்பிக்கை
13 வயதில் யூடியூப் சேனலை ஆரம்பித்து அதன் பின் படிப்படியாக பணத்தை சேர்த்து வைத்து கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் ஈடுபட்ட இந்த இளைஞர் தற்போது கிட்டத்தட்ட ஒட்டுமொத்த பணத்தையும் இழந்து விட்டாலும் கூட அவர் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார். கிரிப்டோகரன்சி கண்டிப்பாக ஒருநாள் தனது லாபத்தை திருப்பி தரும் என்று அவர் நம்புகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.