பெங்களூரு நகரில் சமீபத்தில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக அந்நகரமே வெள்ளத்தில் மூழ்கியது என்பதை பார்த்தோம்.
சாமானியர்கள் முதல் நடுத்தர வர்க்கத்தினர், பணக்காரர்கள், கோடீஸ்வரர்கள் வீடுகள் வரை வெள்ளத்தில் மூழ்கியதால் வீடுகளில் இருந்து வெளியேறி பொது மக்கள் தற்போது பாதுகாப்பான இடங்களில் மாறியுள்ளனர்.
இந்த நிலையில் பெங்களூரில் உள்ள முக்கிய ஹோட்டல்களில் 40 ஆயிரம் ரூபாய் வரை ஒரு இரவுக்கு வாடகை வசூலிக்கப்படுவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரில் வெள்ளம்
பெங்களூர் நகரில் ஏற்பட்ட கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக பல குடும்பங்கள் பெங்களூரில் உள்ள ஓட்டல்களில் தஞ்சமடைந்துள்ளனர். ஆரம்பத்தில் நார்மலான வாடகை லாட்ஜில் வசூலிக்கப்பட்ட நிலையில் லாட்ஜ்களுக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து ஒரு இரவுக்கு 40,000 வரை தற்போது ஒரு சில ஹோட்டல்களில் ஒரு இரவுக்கு அறை வாடகை வசூலிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரூ.40,000 லாட்ஜ் வாடகை
கனமழை காரணமாக பொருள்களை இழந்து துன்பத்தில் இருக்கும் பொது மக்கள் தற்போது தங்குவதற்கு ஒரு இரவுக்கு 30000 முதல் 40000 வரை வசூலிக்கப்படும் தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிரபல தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் தலைமை நிர்வாக அதிகாரியாக வரும் மீனா என்பவர் பழைய விமான நிலையம் வீதியில் உள்ள ஓட்டலில் ஒரு இரவை கழிக்க தான் 42,000 கட்டணம் செலுத்தியதாக ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.
15 நாட்களுக்கு முன்பதிவு
ஓல்ட் ஏர்போர்ட் ரோடு, ஒயிட்ஃபீல்டு, அவுட்டர் ரிங் ரோடு, கோரமங்களா ஆகிய இடங்களில் உள்ள பல ஹோட்டல்களில் வெள்ளிக்கிழமை வரை முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹோட்டல் மேலாளர்கள் இதுகுறித்து கூறுகையில், 10-15 நாட்களுக்கு அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சில ஹோட்டல்களில் செல்லப்பிராணிகளை அனுமதிக்கப்படவில்லை என்றும், சில ஹோட்டல்களில் செல்லப்பிராணிகள் தங்குவதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.
50 சதவீதம் தள்ளுபடி
ஒரு பக்கம் அதிக வாடகை வசூல் செய்தாலும் இன்னொரு பக்கம் நல்லெண்ண அடிப்படையில் ஒருசில ஹோட்டல்களில் ஏழை எளிய நடுத்தர வர்க்கத்தினர் தங்குவதற்கு 50 சதவீதம் தள்ளுபடி செய்து வாடகை வசூலிக்கப்படுவதாக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பி.சி. ராவ் தெரிவித்துள்ளார்
கோடீஸ்வர்களின் வீடுகள்
பெஙகளூரில் வாழும் கோடீஸ்வரர்களான விப்ரோ தலைவர் ரிஷாத் பிரேம்ஜி, பைஜு ரவீந்திரன் மற்றும் பிரிட்டானியா தலைமை நிர்வாக அதிகாரி வருண் பெர்ரி போன்றவர்களின் வீடுகளும் வெள்ளத்திற்கு தப்பவில்லை. தொழிலதிபர்கள் சிலரும் அவர்களுடைய குடும்பத்தினர்களும் படகுகளில் மீட்கப்பட்டனர்.
மீண்டும் கனமழை
இதற்கிடையில், பெங்களூருவில் அடுத்த ஐந்து நாட்களுக்கு தொடர் மற்றும் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. IMD சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. குறிப்பாக தரை தளத்தில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது