இந்தியாவின் ஐடி நகரமாக விளங்கும் பெங்களூர் சில வாரங்களுக்கு முன்பு கடும் மழையால் பாதிக்கப்பட்ட போது மக்கள் படகு, ஸ்பீடு போட், டிராக்டர், ஜேசிபி இயந்திரங்களில் 50 ரூபாய் கட்டணத்தில் பயணித்து வந்த நிலையில் தற்போது மழை வெள்ளம் சரியாகி மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர்.
ஆனால் பெங்களூருக்கே உண்டான ஸ்பெஷலான டிராபிக் பிரச்சனை எப்போது தீரும் எனப் பெங்களூர் வாசிகள் புலம்பிக்கொண்டு இருக்கும் வேளையில் 'நாங்க இருக்கோம்' எனக் களத்தில் குதித்துள்ளது Fly Blade நிறுவனம்.
புதுமைகளுக்குப் பஞ்சம் இல்லாமல் பெங்களூரில் Fly Blade நிறுவனம் புதிதாக ஹெலிகாப்டர் டாக்சி சேவை அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. கட்டணம் எவ்வளவு தெரியுமா..?
பெங்களூர்
பெங்களூரில் கார் டாக்சி, பைக் டாக்சி, கார் பூலிங், சமீபத்தில் டிராக்டர் டாக்சி, போட் டாக்சி எனப் பல இருக்கும் வேளையில் இந்த ஹெலிகாப்டர் டாக்சி மக்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏர்பஸ் ஹெலிகாப்டர்
Fly Blade இந்தியா பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனம் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து H125 helicopter-களை வாங்க உள்ளது. இதன் இந்நிறுவனம் அர்பன் ஏர் மொபிலிட்டி சேவை அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
3,250 ரூபாய் கட்டணம்
வார நாட்களில் மட்டும் அளிக்கப்படும் இந்த ஹெலிகாப்டர் டாக்சி ஒரு முறை பயணம் செய்ய 3,250 ரூபாய் கட்டணத்தில் சேவை அளிக்கிறது. மேலும் முதல் கட்டமாக இந்தத் தேவை பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து HAL பகுதிக்கு அளிக்கப்படுகிறது.
வொயிட்பீல்டு மற்றும் எலக்ட்ரானிக் சிட்டி
இதைத் தொடர்ந்து மக்களின் வரவேற்பு மற்றும் ஹெலிகாப்டர் டெலிவரி ஆகியவற்றைப் பொருத்து ஹெலிகாப்டர் டாக்சி சேவை வொயிட்பீல்டு மற்றும் எலக்ட்ரானிக் சிட்டி ஆகிய இரு பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது என Fly Blade இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
6 பேர்
மேலும் தற்போது ஏர்பஸ் நிறுவனத்தில் ஆர்டர் செய்யப்பட்டு உள்ள ஹெலிகாப்டர்களில் 5 முதல் 6 பேர் உட்காரும் அளவிற்கு இருக்கும் என இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அமித் டட்டா தெரிவித்துள்ளார்.