மத்திய அரசின் தொழிலாளர் சட்ட, தனியார்மயமாக்கல், வைப்பு நிதி வட்டி விகித குறைப்பு, எரிபொருள் மற்றும் எரிவாயு விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு போன்ற 12 கோரிக்கைகளை முன்வைத்து இன்று பல்வேறு தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துப் பாரத் பந்த் நடத்தி வருகிறது.
மார்ச் 28 மற்றும் மார்ச் 29ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் காரணத்தால் பல்வேறு சேவைகள் மொத்தமாக முடங்கியுள்ளது.
பாரத் பந்த்
மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் பல்வேறு அமைப்புகள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள காரணத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை இன்று கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்றால் மிகையில்லை. குறிப்பாகப் போக்குவரத்துச் சேவைகள், வங்கி சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
பொதுத்துறை வங்கிகள்
இன்று தனியார் வங்கிகள் இயங்கினாலும், இந்தியாவிலேயே அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள பொதுத்துறை வங்கிகள் இன்றும், நாளையும் இயங்காது. பொதுத்துறை வங்கிகளில் சாமானிய மக்கள் தான் முக்கிய மற்றும் அதிகப்படியான வாடிக்கையாளர்கள்.
2 நாள் வங்கி சேவை
இந்த நிலையில் 2 நாள் வங்கி சேவை முடங்கியிருக்கும் காரணத்தால் இண்டர்நெட் வங்கி சேவையைப் பயன்படுத்தத் தெரியாத அனைத்து மக்களும் வங்கிக் கணக்கில் பணத்தைப் போடவும் எடுக்கவும் முடியாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக இந்த நிலை கிராமம் மற்றும் டவுன் பகுதிகளில் இருக்கும் மக்களை அதிகம் பாதித்துள்ளது.
ஏடிஎம் இயந்திரம்
பெரு நகரங்கள் மற்றும் முக்கிய வர்த்தகப் பகுதிகளில் இருக்கும் ஏடிஎம் இயந்திரத்தில் பொதுத்துறை வங்கிகள் முன்கூட்டியே திட்டமிட்டுப் பணத்தை நிரப்பினாலும் 2 நாள் பார்த் பந்த காரணமாக இன்று மாலை அல்லது நாளை காலைக்குள்ள ஏடிஎம் பணத்தில் இருக்கும் பணம் தீர்ந்துவிடும்.
கிராமம் மற்றும் டவுன்
இதேவேளையில் கிராமம் மற்றும் டவுன் பகுதிகளில் இருக்கும் ஏடிஎம் இயந்திரத்தில் முழுமையாகப் பண இருப்பு இல்லை, சில ஏடிஎம் இயந்திரத்தில் மட்டுமே பணம் உள்ளது. பொதுப் போக்குவரத்துச் சேவைகள் முடங்கியிருக்கும் இந்த வேளையில் பணம் இருக்கும் ஏடிஎம் இயந்திரங்களைத் தேடி அலைவது மக்களுக்குத் தலைவலியாக மாறியுள்ளது.
4 நாட்கள் வங்கி விடுமுறை
அனைத்தையும் தாண்டி மார்ச் 26ஆம் தேதி நான்காவது சனிக்கிழமை காரணமாக வங்கிகள் விடுமுறை மேலும் மார்ச் 27 ஞாயிறு விடுமுறை. இதைத் தொடர்ந்து மார்ச் 28 மற்றும் மார்ச் 29ஆம் தேதி இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பில் இருக்கும் பல அமைப்புகள் ஒன்றாக இணைந்து பாரத் பந்த் அறிவித்துள்ள காரணத்தால் 4 நாட்கள் வங்கி சேவைகளைப் பெற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.