நரேந்திர மோடி, கடந்த மே 2019-ல் தனிப் பெரும்பான்மை உடன், பாராளுமன்றத்தில் நுழைந்த பின், தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு வருகிறார்.
காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது, குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா (CAA), தேசிய மக்கள் பதிவேடு (NPR), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) எனக் வரிசையாக புதுப் புது ஐட்டங்களை இறக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.
இப்போது புதிதாக, தொழிலாளர் சட்டங்களில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்து இருக்கிறார்களாம்.
ஒருங்கிணைப்பு
இந்தியாவில் தொழிலாளர்களுக்கு சுமாராக 44 சட்டங்கள் இருக்கின்றன. இந்த 44 சட்டங்களை எல்லாம் ஒருங்கிணைத்து, வெறும் 4 பிரிவுகளாக மட்டும் பிரித்து புதிய சட்டங்களைக் கொண்டு வருவதாக கடந்த ஜூலை 2019-ல் சொல்லி இருந்தார்கள். இந்த மாற்றங்கள், அந்நிய நேரடி முதலீட்டாளர்களை கவரும் எனவும் சொல்லி இருந்தார்கள்.
பாஜகவிலேயே உள்ளடி
இப்போது, இந்த புதிய தொழிலாளர் சட்டங்களை, வர்த்தக யூனியன்கள் பார்வையிட்டு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யத் தொடங்கி இருக்கிறார்கள். மற்ற கட்சியினர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகள் மட்டும் இந்த புதிய தொழிலாளர் சட்டங்களை எதிர்த்தால் பரவாயில்லை. ஆனால் ஆர் எஸ் எஸ்-ன் பாரதிய மஸ்தூர் சங்கமே, மோடி அரசின் இந்த புதிய தொழிலாளர் சட்டங்களை கடுமையாக எதிர்த்து இருக்கிறது.
ஏன் எதிர்ப்பு
புதிய தொழிலாளர் சட்டங்கள், பெரு முதலாளிகளுக்கு சாதகமாகவும், வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு எதிராகவும் இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். எப்போது பொருளாதார வளர்ச்சி குறித்து பேசினாலும், தொழிலாளர் சட்டங்களை சீர்திருத்தச் சொல்கிறார்கள். இந்த நடவடிக்கைகளினால், தொழிலாளர்களின் உரிமை மேலும் நசுக்கப்படும் எனவும் சொல்லி இருக்கிறார் பாரதிய மஸ்தூர் சங்கத்தின் தேசிய தலைவர் சஜி நாராயணன்.
வேலை காலி
ஏற்கனவே நாட்டில் நிரந்தர வேலைகள் குறைந்து கொண்டே வருகின்றன. தினமும் நிரந்தர வேலைகள் அப்பட்டமாக அழிக்கப்பட்டு வருகிறது. இது இந்தியாவுக்கு வேண்டாம். இந்தியாவில் wage-driven growth வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார். அதாவது தொழிலாளர்கள் வேலை செய்து, வாங்கும் கூலி அதிகரித்தால், தானாகவே டிமாண்டும், வளர்ச்சியும் அதிகரிக்கும் எனச் சொல்லி இருக்கிறார்.
உலகமயம், தாராளமயம் எதிர்ப்பு
நேற்று (ஜனவரி 03, 2020, வெள்ளிக்கிழமை) பாரதிய மஸ்தூர் சங்கம், மோடி அரசின் புதிய தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து போராட அழைப்பு விடுத்த போது, "இந்தியாவில் முதலாலித்துவம் ஒரு மதம் அளவுக்கு உயர்ந்து இருக்கிறது. இந்த முதலாளித்துவத்துக்கு, தன் ஊழியர்கள் மீது பற்றுதலோ அல்லது பரிதாபமோ கிடையாது" என சஜி நாராயணன் சொல்லி இருக்கிறார்.
நிறுத்துங்கள்
அதோடு, இந்தியாவின் பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது, கார்ப்பரேட் மயமாக்குவது, பொதுத் துறை நிறுவனங்களை விற்று வருவாய் ஈட்டுவது" போன்ற நடவடிக்கைகளை நிறுத்தச் சொல்லி இருக்கிறார். அதிலும் குறிப்பாக ரயில்வேஸ், பாதுகாப்புத் துறைகளை கார்ப்பரேட் மயமாக்குவதையும், மாநில போக்குவரத்து கழகங்களை தனியார்மயமாக்குவதையும் கடுமையாக எதிர்த்து இருக்கிறார்கள்.
முதலீடுகள் வேண்டாம்
இந்திய பொருளாதாரம் வளர அந்நிய நேரடி முதலீடுகள் தான் ஒரே வழி என்கிறார் தற்போது இந்தியாவின் முதன்மைப் பொருளாதார ஆலோசகராக இருக்கும் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன். ஆனால் பாரதிய மஸ்தூர் சங்கமோ, அந்நிய நேரடி முதலீடுகளுக்கு, மத்திய அரசு ஒரு முடிவு கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்து இருக்கிறது.
கேட்பார்களா..?
பாஜக கட்சிக்குள்ளே சில பல கருத்துக்கள் நிலவுகிறது போல. மற்றவர்கள் சொன்னால் தான் நம் பிரதமர் நரேந்திர மோடிக்கும், உள் துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கேட்காது. அவர்கள் வளர்ந்த, ஆர் எஸ் எஸ் அமைப்பின் ஆசி பெற்ற, பாரதிய மஸ்தூர் சங்கம் சொல்வதையாவது கேட்பாரா..? தொழிலாளர்களுக்கு கொஞ்சமாவது ஈவு இரக்கம் காட்டுவாரா..? பொறுத்திருந்து பார்ப்போம். நல்லது நடக்கும் என நம்புவோம்..!