இந்திய இன்சூரன்சர்ஸ் கட்டுப்பாட்டு ஆணையமான ஐஆர்டிஏஐ அமைப்பு நாட்டின் இரு முக்கியத் தனியார் இன்சூரன்ஸ் சேவை நிறுவனங்களான பார்தி AXA - ஐசிஐசிஐ லோம்பார்ட் இணைக்க முதற்கட்ட ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஒப்புதல் மூலம் ஐசிஐசிஐ லோம்பார்ட் அடுத்தகட்ட பணியாகப் பிற அரசு அமைப்புகளிடம் தேவையான ஒப்புதல்களைப் பெறுவதற்கான பணிகளைத் துவங்கியுள்ளது எனப் பங்குச்சந்தைக்குச் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது ஐசிஐசிஐ லோம்பார்ட்.

இந்த இணைப்பிற்கு அனைத்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் ஆயுள் காப்பீடு அல்லாத வர்த்தகச் சந்தையில் பார்தி AXA - ஐசிஐசிஐ லோம்பார்ட் கூட்டணி நிறுவனத்தின் சந்தை அளவீடு 8.7 சதவீதமாக உயரும்.
இதுமட்டும் அல்லாமல் இவ்விரு நிறுவனங்களின் இணைப்பு இருதரப்பு பங்கு முதலீட்டாளர்களுக்கும் நன்மை அளிப்பது மட்டும் அல்லாமல் வருமானம் மற்றும் இயக்க திட்டங்களைப் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படும் என நம்பப்படுகிறது.
இதோடு வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சேவையை அளிப்பது மட்டும் அல்லாமல் நாடு முழுவதும் மக்களை எளிதாகச் சென்றடைந்து வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முடியும். இதனால் நாடு முழுவதிலும் இருக்கும் மக்களுக்குத் தன் நிறுவன சேவைகளைக் கொண்டு சேர்க்க முடியும் என்பதைக் கூட்டணி பெரிய அளவில் நம்புகிறது.
பார்தி AXA ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பார்தி எண்டர்பிரைசர்ஸ் நிறுவனம் 51 சதவீத பங்குகளையும், பிரான்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனமான AXA 49 சதவீத பங்குகளையும் வைத்துள்ளது.
பார்தி AXA - ஐசிஐசிஐ லோம்பார்ட் இணைப்பிற்குப் பின் பார்தி எண்டர்பிரைசர்ஸ் நிறுவனம் மற்றும் AXA ஆகிய நிறுவனங்கள் பொதுச் சந்தை முதலீட்டாளர்களாகவே இருப்பார்கள் எனவும், இக்கூட்டணி நிறுவனத்தின் நிர்வாகத்தில் ஐசிஐசிஐ லோம்பார்ட் அதிக ஆதிக்கத்தைச் செலுத்தும் எனவும் தெரிகிறது.
பார்தி AXA - ஐசிஐசிஐ லோம்பார்ட் இன்சூரன்ஸ் நிறுவனங்களை இணைக்க ஆகஸ்ட் மாதம் முடிவு செய்யப்பட்ட நிலையில், நவம்பர் மாத துவக்கத்தில் CCI அமைப்பு இந்நிறுவன கைப்பற்றலுக்கு ஒப்புதல் அளித்தது, தற்போது IRDAI அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
இதைத் தொடர்ந்து இவ்விரு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இணைப்பிற்கு மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தை ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications