டெல்லி: நாட்டில் சிறப்பான ஊழலுக்கு பேர் போன கிங்க் பிஷர் ஏர்லைன்ஸ் விஜய் மல்லையா, பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழல் புகழ் நிரவ் மோடிக்கு அடுத்த படியாக பூஷன் பவர் & ஸ்டீலின் முன்னாள் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சிங்காலுக்கு, கடந்த வெள்ளிக்கிழமை சிறப்பு நீதி மன்றம் ஜாமீன் வழங்கியுள்ளதாம்.
பூஷன் பவர் & ஸ்டீல் நிறுவனம் ஏழு வருட காலத்தில் 33 வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கி விட்டும் கட்டாமல், நிதி மோசடி செய்திருப்பதாக அமலாக்க இயக்குனரகம் (ED) குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த சஞ்சய் சிங்காலுக்கு தான் தற்போது ஜாமீன் கிடைத்துள்ளது.
சிபிஐ சிறப்பு நீதிபதி தலைமையிலான நீதிபதி அருண் பரத்வாஜ் இந்த ஜாமீனை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. எனினும் 10 லட்சம் ரூபாய் மற்றும் சில நிபந்தனைகள் மூலம் இந்த ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
பூஷன் ஸ்டீல் மோசடி
கடந்த 2007 - 2014 வரையிலான காலத்தில் பூஷன் பவர் & ஸ்டீல் நிறுவனம் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக, அண்மையில் இவர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதிலும் சஞ்சய் சிங்காலுடன் சேர்த்து மொத்தம் 24 பேருக்கு எதிராக இந்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடனை திரும்ப செலுத்தவில்லை
பல்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பெற்ற கடனை சரியான நேரத்தில் திரும்ப செலுத்தவில்லை என்றும் குற்றம் சாட்டப்படுள்ளது. இது தவிர இவ்வாறு கடன் வாங்க மோசடி மூலம் உருவாக்கப்பட்ட பொய்யான வங்கிக் கணக்குகளை பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த மோசடி கணக்குகளை பயன்படுத்தி, பல்வேறு கணக்குகளுக்கு பணத்தை திருப்பி விடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மோசடி மூலம் சொத்து
பூஷன் பவர் & ஸ்டீல் நிறுவனம் மோசடி செய்து கடன் வாங்கியதோடு, அந்த பணத்தினை பயன்படுத்தி பல சொத்துகளை சட்டத்தை மீறி வாங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக பிபிஎஸ்எல் நிறுவனத்தில் பங்கு முதலீடு, டெல்லி மற்றும் லண்டனில் அசையும் அசையா சொத்துகளை வாங்கியிருப்பதாகவும் முன்னரே கூறப்பட்டது. இதற்கான ஆதாரங்கள் சில கிடைத்ததாகவும் கூறப்பட்டது.
கைது செய்யப்பட்ட சஞ்சய் சிங்கால்
கடந்த நவம்பர் 22, 2019 அன்று கைது செய்யப்பட்ட சஞ்சய் சிங்கால், தற்போது கடந்த வெள்ளிக்கிழமையன்று சிறப்பு நீதிமன்றம் மூலம் நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் சமீபத்தில் சஞ்சய் சிங்காலின் கையகப்படுத்தப்பட்ட சொத்துகள் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ளதாக கூறப்பட்டது. இதற்காக 204.3 கோடி ரூபாய் மதிப்பிலான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
வங்கி அதிகாரிகளும் உடந்தை
பூஷன் பவர் & ஸ்டீல் மோசடியில் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை ஏமாற்றுவதற்காக வங்கி ஊழியர்கள் மற்றும் பலருடன் சேர்ந்து சதி செய்ததுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த ஒரு நிலையில் இவருக்கு ஜாமீன் கிடைத்திருப்பது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.
எவ்வளவு மோசடி?
பல போலியான ஆவணங்கள் மூலம் மோசடி செய்யப்பட்டு கடன் வாங்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், பஞ்சாப் நேஷனல் பேங்க் மற்றும் அலகாபாத் வங்கியிலிருந்து மட்டும் அல்ல, கடந்த 2007 முதல் 2014 வரையிலான காலத்தில் மட்டும், இந்த நிறுவனம் தோராயமாக ரூ.47,204 கோடியை பெற்று மோசடி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.