ஒரு காலத்தில் 42 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் 6வது மிகப்பெரிய பணக்காரர் ஆக இருந்த அனில் அம்பானி, இன்று கடனை திருப்பிச் செலுத்த முடியாத அளவிற்கு மோசமான நிலையில் உள்ளார். ரிலையன்ஸ் ADA குரூப் குழுமத்தின் வர்த்தக வளர்ச்சிக்காக வாங்கிய கடன் திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில், இந்தியாவில் அனில் அம்பானிக்குச் சொந்தமான சொத்துக்கள் அனைத்தையும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கைப்பற்றிக் கடனை சரி செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், வெளிநாட்டில் இருக்கும் சொத்துக்களுக்கும் தற்போது பிரச்சனை வந்துள்ளது.
கடந்த 4 மாதங்களாக 3 சீன வங்கிகளுக்கு அனில் அம்பானி கொடுக்க வேண்டிய 5,276 கோடி ரூபாய்க்கு எதிராகப் பிரிட்டனில் வழக்கு நடந்து வருகிறது.
இந்தத் தொகையும் அனில் அம்பானி கொடுக்க முடியாத நிலையில் தற்போது அனில் அம்பானிக்குச் சொந்தமாக இந்தியாவைத் தவிரப் பிற நாடுகளில் இருக்கும் சொத்துக்களைக் கைப்பற்றும் முடிவில் இறங்கியுள்ளது சீன வங்கிகள்.
சீன வங்கிகள்
அனில் அம்பானி சீனாவின் தொழிற்துறை மற்றும் வர்த்தக வங்கி (ICBC), ஏற்றுமதி இறக்குமதி சீன வங்கி, சீன வளர்ச்சி வங்கி ஆகியவற்றுக்குச் சுமார் 716 மில்லியன் டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் அளவிலான 5,276 கோடி ரூபாய் மற்றும் அதற்காக வட்டி, வழக்குத் தொடுத்தற்கான கட்டணமாக 7,50,000 பவுண்ட் (7.04 கோடி ரூபாய்) கொடுக்க வேண்டும்.
இக்கடன் தொகையைச் செலுத்த ஜூன் 29ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அனில் அம்பானியால் செலுத்தவில்லை. இதனால் இன்றைய நிலையில் வட்டியுடன் சேர்த்து கடன் நிலுவையின் அளவு 717.67 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
அனில் அம்பானி
கடன் நிலுவைக்கான வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இதன் விசாரணையில் அனில் அம்பானி தரப்பில் கடனை செலுத்த அனைத்து விதமான முயற்சிகளையும் எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
உலகளாவிய சொத்துக்கள்
அனில் அம்பானி தரப்பு வாதங்களை ஏற்காத சீன வங்கிகள், நீதிமன்றத்தில் அனில் அம்பானி செலுத்த வேண்டிய 717.67 மில்லியன் டாலர் தொகைக்கு, இந்தியாவைத் தவிரப் பிர நாடுகளில் இருக்கும் அவரது சொத்துக்களை ஆய்வு செய்து சீட்டரீதியில் கைப்பற்றவும் தங்களது கடனுக்கான ஆதாரத்தையும் பெற திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
சொத்துக்கள்
ஜூன் 29, 2020ல் பிரிட்டன் நீதி மன்றம் இந்தியாவிற்கு வெளியில் 1,00,000 அமெரிக்க டாலருக்கு அதிக மதிப்புடைய அனில் அம்பானிக்கு சொந்தமாகவோ அல்லது உரிமை கொண்டு இருக்கும் சொத்து விபரங்களைச் சமர்ப்பிக்கும் படி அனில் அம்பானிக்கு உத்தரவிட்டது.
இதில் பங்கு இருப்பு, குடும்பச் சொத்துக்கள் முதல் வெளிநாட்டில் இருந்து தனக்குக் கிடைக்கும் வருமானம் வரையில் அனைத்தும் அடக்கம்.
மறுப்பு
சீன வங்கிகள் அனில் அம்பானியின் வெளிநாட்டுச் சொத்து விபரங்களை ஆய்வு செய்வதற்கு முன், அனில் அம்பானி மூன்றாம் தரப்புகள் தனது சொத்துக்களை ஆய்வு செய்யப் பிரிட்டன் நீதிமன்றத்தில் தடை உத்தரவைப் பெற்றுவிட்டார். இதனால் சீன வங்கிகளின் முயற்சி தடைப்பெற்றது.
இதேபோல் இந்தியாவில் இருக்கும் சொத்துக்களை ஸ்டேட்ட பாங்க் ஆப் இந்தியா கைப்பற்றவும் தடை உத்தரவை பெற்றுள்ளார் அனில் அம்பானி.
கூடுதல் நிதி
இந்த வழக்கு விசாரணை முடிவில் நீதிபதி Jervis Kay, அனில் அம்பானியின் சொத்துகளைத் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்து மதிப்பீடு செய்யவும், சட்ட ரீதியிலான கட்டணங்களுக்கும் கூடுதலாக 1,40,000 பவுண்ட் அதாவது 131 லட்சம் ரூபாய் செலுத்த உத்தரவிட்டார்.
இதேபோல் 3ஆம் தரப்புச் சொத்துக்களை ஆய்வு செய்யத் தடை உத்தரவைப் பெற்றதற்காக அனில் அம்பானியிடம் 31 லட்சம் ரூபாய் செலுத்தவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.