இந்தியாவில் சேவை மற்றும் டெக் துறை வலிமையாக இருக்கும் நிலையில், மோடி தலைமையிலான மத்திய அரசு சீனா, பங்களாதேஷ், வியட்நாம், தென் கொரியா ஆகிய நாடுகளைப் போல இந்திய பொருளாதாரத்தை உற்பத்தி சார்ந்து உருவாக்க வேண்டும் என்பதற்காக PLI என்ற உற்பத்தித் துறை சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தை அறிவித்து வருகிறது.
இந்தியாவில் இருக்கும் பல முன்னணி உற்பத்தித் துறையில் உற்பத்தி பொருட்களை அதிகரிக்கவும், இந்தியாவில் ஏற்றுமதி வர்த்தகத்தை அதிகரிக்கவும் production-linked incentive என்ற திட்டத்தின் மூலம் 5 ஆண்டு ஊக்கத் திட்டத்தை ஒவ்வொரு துறைக்கும் அறிவித்து வருகிறது.
இன்று ஆட்டோமொபைல், ஆட்டோமொபைல் உதிரிப்பாகங்கள் மற்றும் ட்ரோன் துறைக்கும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
மோடி அரசு
மோடி தலைமையிலான மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்திய ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோமொபைல் உதிரிப்பாகங்கள் துறைக்காக 26,538 கோடி ரூபாய் அளவிலான PLI ஊக்குவிப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது.
PLI ஊக்குவிப்புத் திட்டம்
இதோடு இந்தியாவில் ட்ரோன் உற்பத்தி அதிகரிக்க வேண்டும் என்பதற்காகச் சுமார் 120 கோடி ரூபாய் அளவிலான PLI ஊக்குவிப்புத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
இந்திய ஆட்டோமொபைல் துறை
இந்த PLI திட்டம் மூலம் இந்திய ஆட்டோமொபைல் துறையில் மட்டும் சுமார் 7 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என மோடி தலைமையிலான அரசு நம்புகிறது. மேலும் ட்ரோன் துறைக்கு அறிவிக்கப்பட்டு உள்ள 120 கோடி ரூபாய் ஊக்க திட்டங்கள் பெரிய அளவில் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீட்டு அளவு
PLI திட்டம் மூலம் ஊக்க தொகை பெற வேண்டும் என்றால் இரு சக்கரம் மற்றும் 3 சக்கர வாகன உற்பத்தியாளர்கள் அடுத்த 5 வருடத்தில் 1000 கோடி ரூபாயும், ஆட்டோமொபைல் உதிரிப்பாகங்கள் உற்பத்தியாளர்கள் அடுத்த 5 வருடத்தில் 500 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைச் செய்ய வேண்டும்.
இறக்குமதி ஆட்டோமொபைல் உதிரிப்பாகங்கள்
இதன் மூலம் ஒவ்வொரு வருடமும் வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் 17 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆட்டோமொபைல் உதிரிப்பாகங்கள் அளவீட்டை பெரிய அளவில் குறைக்க முடியும்.
ஏற்றுமதிக்கு வாய்ப்பு
இந்தியாவில் ஆட்டோமொபைல் தனது உற்பத்தி அதிகரிப்பது மூலம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதைக் குறைப்பது மட்டும் அல்லாமல் உபரியாக உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய முடியும். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம், ரூபாய் மதிப்பு என அனைத்தும் மேம்படும்.
வெறும் 2 சதவீதம்
சர்வதேச ஆட்டோமொபைல் உற்பத்தி துறையில் இந்தியாவில் பங்கு என்பது வெறும் 2 சதவீதம், இதைக் கட்டாயம் பெரிய அளவில் அதிகரிக்க வேண்டும் என இன்று நாடாளுமன்ற கூட்டத்திற்குப் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.
பேட்டரி மற்றும் ஹைட்ரஜன் Fuel Cell
அட்டோமொபைல் துறை PLI திட்டத்தில் பேட்டரி மற்றும் ஹைட்ரஜன் Fuel Cell தயாரிப்பாளர்களுக்குக் கூடுதலாக 5 சதவீதம் ஊக்கத்தொகை அளிக்கப்பட உள்ளது. பிற பொதுவான உற்பத்தி நிறுவனங்களுக்கு 8 முதல் 13 சதவீதம் வரையிலான ஊக்கத்திட்டம் வழங்கப்பட உள்ளது என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.
இந்தத் திட்டம் மூலம் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் கிரீன் எனர்ஜி தொழிற்சாலை பெரிய அளவில் லாபம் அடைய உள்ளது.