டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கையில் இந்திய அரசு தனி கவனம் செலுத்தி வருகின்றது. பல்வேறு அறிவிப்புகளையும் கொடுத்து வருகின்றது. பல்வேறு துறைகளிலும் டிஜிட்டல் தொழில் நுட்பத்தினை உட்புகுத்தி வருகின்றது.
குறிப்பாக பட்ஜெட் 2022 தாக்கல் செய்த 1.5 மணி நேர அறிக்கையில், டிஜிட்டல் என்ற வார்த்தை 35 முறையும், டெக் என்ற வார்த்தையை 26 முறையும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பயன்படுத்தினார்.
அந்தளவுக்கு டிஜிட்டல்மயமாக்கலுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது இந்திய அரசு.
மிகப்பெரிய வாய்ப்புகள்
பட்ஜெட்டில் பேசிய நிதியமைச்சர் டிஜிட்டல் பொருளாதாரம், ஃபின்டெக், டெக்னாலஜி டெவலப்மெண்ட் உள்ளிட்ட மூன்றும் முக்கிய இலக்காக அரசு கொண்டுள்ளது. இதன் மூலம் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு மிகப் பெரிய வாய்ப்புகள் காத்துக் கொண்டுள்ளன.
கல்வி, சுகாதாரம், விவசாயம், வங்கி, பணம் செலுத்துதல் மற்றும் அரசாங்க கொள்முதல் மற்றும் பேமெண்ட்களுக்கும் புதிய முதலீடுகள் என்பது டிஜிட்டல்மயமாக்கலுக்கு முதுகெலும்பாக இருக்கும் என டெலாய்ட் இந்தியாவின் இந்திய பார்ட்னர் பிஎன் சுதர்சன் கூறியுள்ளார்.
டிஜிட்டல் பொருளாதாரம்
டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு மாற்றுவதற்கான உத்வேகத்தினை பட்ஜெட் 2022 கொடுத்துள்ளது என KPMG பார்ட்னர் மற்றும் தலைவர் (டிஜிட்டல் கன்சல்டிங்) அகிலேஷ் துடேஜா கூறியுள்ளார்.
மேலும் இ-பாஸ்போர்ட் ஒரு டிஜிட்டல் சொத்து. ட்ரோன்கள் இன்னும் தொழில் நுட்பத்தினை மேம்படுத்தும். இதன் மூலம் டெக் நிறுவனங்களுக்கு வாய்ப்புகள் கூடும் என கூறியுள்ளார்.
மைண்ட் ட்ரீ
மைண்ட் ட்ரீ தலைமை நிர்வாக அதிகாரி டெபாசிஷ் சாட்டர்ஜி, டேட்டா சென்டர்களுக்கு உள்கட்டமைப்பு அந்தஸ்துகளை வழங்குவது, இந்தியாவினை ஊக்குவிக்கும். மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தின் அடிப்படையில் டிஜிட்டல் கரன்சிகள், இ-பாஸ்போர்ட் போன்ற சேவைகள் ஐடி துறைக்கு மிக பயனுள்ளதாக இருக்கும் என கூறியுள்ளார்.
டிசிஎஸ்
டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் கோபி நாதன் கூறுகையில், ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் கரன்சி முய்ற்சியானது, எதிர்காலத்திற்கானது என கூறியுள்ளார்.
பொதுவாகவே கொரோனாவின் வருகைக்கு பிறகு மக்கள் டிஜிட்டல் தேவையின் அவசியத்தினை உணர்ந்துள்ளனர். தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் தங்களது வணிக்கத்தினை மேம்படுத்த டிஜிட்டல் பயன்பாட்டினை அதிகரித்து வருகின்றனர். ஆஃப் லைன் வணிகம் என்பது இருந்தாலும், ஆன்லைனிலும் புரோமோட் செய்கின்றனர். கொரோனாவுக்கு பிறகும் இந்த போக்கானது தொடரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.