டோல் பிளாசக்களில் மஞ்சள் கோட்டைத் தாண்டினால் வாகனங்களை கட்டணமின்றி சுங்கச்சாவடியை கடக்க அனுமதிக்க வேண்டும் என்று, சுங்கச்சாவடி ஒப்பந்ததாரர்களுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல் பிளாசகளில் பீக் அவர்ஸ் நேரங்களில் கூட, ஒரு வாகனத்திற்கு 10 வினாடிகளுக்குள் சேவை நேரத்தை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்களை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) வெளியிட்டது.
இந்த நிலையில் சுங்கசாவடிகளின் இருபுறமும் 100 மீட்டர் தொலைவில் மஞ்சள் கோடுகளை வரையுமாறும் உத்தரவிட்டுள்ளது.
கட்டணம் கட்டணமில்லை
இந்த குறிப்பிட்ட 100 மீட்டருக்குள் வரிசையில் நிற்கும் வாகனங்களுக்கு மட்டுமே சுங்கக்கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று சுங்கச்சாவடி ஒப்பந்ததாரர்களுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த 100 மீட்டரை தாண்டி மஞ்சள் கோட்டிற்கு வெளியே வாகனங்கள் வரிசைப்படுத்தி நின்றால், அனைத்து வாகனங்களையும் கட்டணமின்றி சுங்கச்சாவடியை கடக்க அனுமதிக்க வேண்டும் என்றும் NHAI உத்தரவிட்டுள்ளது.
10 வினாடிகளுக்குள் கடக்க வேண்டும்
எனினும் சுங்கச்சாவடியை கடக்கவும், சுங்கச்சாவடி தடைக் கம்பியை உயர்த்தவும் 10 வினாடிகளுக்கு மேல் நேரம் எடுக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 2021ல் இருந்து NHAI வெற்றிகரமாக 100 சதவீத பணமில்லா டோல்கேட்டாக மாறியுள்ளது. இந்த நிலையில் பல டோல் பிளாசக்களில் பாஸ்டேக் பயன்பாடு 96%யும், சிலவற்றில் 99%மும் எட்டியுள்ளது..
வளர்ந்து வரும் தொழில்நுட்பம்
நாட்டில் வளர்ந்து வரும் டிஜிட்டல் வளர்ச்சிக்கு மத்தியில், அடுத்த 10 ஆண்டுகளில், இன்னும் தொழில்நுட்பங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது கொரோனா பரவல் காரணமாக சமூக இடைவெளி என்பது மிகவும் பழக்கமானதாகி வரும் நிலையில், வாகன் ஓட்டிகள் ஃபாஸ்டேக் முறையை பெரிதும் விரும்புகின்றனர்.
மிக பயனுள்ள விஷயம்
உண்மையில் இதுபோன்ற விஷயங்கள், வரவேற்கதக்க ஒன்றாகவே வாகன ஓட்டிகள் மத்தியில் பார்க்கப்படுகிறது. ஏனெனில் இது நெடுஞ்சாலைகளில் தொடர்ந்து பயணிக்கும வாகன ஓட்டிகளுக்கு மிக பயனுள்ள விஷயமாகவும் பார்க்கப்படுகிறது. ஏனெனில் இது வாகன ஓட்டிகள் ஃபாஸ்டேக்கும் இருந்தும் அதிக நேரம் காத்திருப்பதை குறைக்கும் என்பதால், வாகன ஓட்டிகள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.
டோல்கேட் இல்லாத நாடாக மாறும்
வரும் காலத்தில் டிஜிட்டல் தொழில் நுட்பம் மூலமாக டோல்கேட்டுகளே இல்லாத நாடாக இந்தியாவை மாற்றும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. தற்போது இருக்கும் டோல்கேட்டுகள் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக நவீன தொழில் நுட்பங்கள் மூலம்,வாகனங்கள் செல்லும்போது தானாகவே கட்டணத்தினை வசூலிக்கும் திட்டத்தினை செயல்படுத்த திட்டமிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
காத்துக் கிடக்க வேண்டிய அவசியம் இருக்காது
இம்முறை வரும்போது வாகனங்கள் வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இருக்காது. டோல்கேட்டுகள் இருக்காது. எல்லாவற்றுக்கும் மேலாக வாகனங்கள் வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இருக்காது என்றும் நெடுஞ்சாலை துறை ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
விரைவாக செல்ல முடியும்
முன்பெல்லாம் விழாக்காலம், அலுவல் நேரங்களில் கார்கள் மணிக்கணக்கில் காத்துக் கிடக்கும் சூழ்நிலைகள் நிலவி வந்தது. இன்றளவிலும் சென்னை போன்ற பெரு நகரங்களில் வாகனங்கள் மணிக்கணக்கில் காத்துக் கிடப்பதை பார்க்க முடிகிறது. இந்த செயல்முறையானது பாஸ்டேக் நடைமுறைக்கு பின்பு சற்று குறைந்துள்ள நிலையில், இனி இந்த நடைமுறையானது செயல்பாடுக்கு வந்தால் இன்னும் விரைவாக செல்ல முடியும்.