2020 முழுவதும் ஒரு பிக்பாஸ் போலவே இருந்தது என் கூறலாம், எதிர்பார்க்காத அனைத்தையும் எதிர்கொண்டோம். கொரோனாவுக்காக மக்கள் வீட்டிற்குள் முடங்கியது, வீட்டுக்கு வெளியில் நின்று கைதட்டியதில் துவங்கி, தற்போது உலக நாடுகளைப் பயமுறுத்தும் வகையில் 2வது முறையாகப் பரவி வரும் கொரோனா உலகில் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.
இந்நிலையில் 2020ல் தொழில்நுட்ப ரீதியாக மக்கள் எதிர்கொண்ட மாற்றங்களை, புதிய டெக் புரட்சியையும் தான் இப்போதும் பார்க்கப்போகிறோம்.
டிஜிட்டல் பரிமாற்றங்கள்
கொரோனா காலத்தில் பெரும்பாலான நிறுவனங்களின் வர்த்தகம், விநியோகம் முடங்கிவிட்ட நிலையில், டிஜிட்டல் சேவை நிறுவனங்களான ஜூம், நெட்பிளிக்ஸ், அமேசான் போன்ற நிறுவனங்கள் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்து Corona safe என வர்த்தகச் சந்தைக்கு நிரூப்பித்தது. இதுமட்டும் அல்லாமல் கொரோனா காலத்தில் டிஜிட்டல் சேவைகள் இல்லாமல் நிறுவனங்கள் இனி இயங்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
இதேபோல் இந்த டிஜிட்டல் சேவை மூலம் நிறுவனத்தில் பல சேவைகளைக் குறைக்க முடியும் என்பதையும் உணர்த்தியுள்ளது.
வொர்க் ப்ரம் ஹோம்
வீட்டில் இருந்து பணியாற்றுவது புதியது இல்லை, ஆனால் ஒட்டுமொத்த நிறுவனமும் வீட்டில் இருந்து பணியாற்றுவதும், நீண்ட காலம் தொடர்ந்து பணியாற்றுவதும் இது தான் முதல் முறை. இந்தக் கொரோனா காலத்தில் வீட்டில் இருந்து பணியாற்றினாலும் எவ்விதமான வர்த்தகப் பாதிப்பும் இல்லாமல் இயங்குவதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் தற்போது இருக்கும் கரணத்தால் ஊழியர்களின் வேலைத் திறன் மற்றும் வர்த்தகத்தில் எவ்விதமான பாதிப்பும் இல்லை.
மேலும் இந்தியாவில் ஊழியர்கள் எங்குவேண்டுமானாலும் இருந்து பணியாற்ற புதிய சட்டதிட்டங்களை அமல்படுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் இன்னும் சில காலம் வீட்டில் இருந்து பணியாற்ற ஊழியர்களும், தயாராக உள்ளனர், நிறுவனங்களும் தயாராக உள்ளது. இந்தச் சூழ்நிலைக்கு முக்கியமான தொழில்நுட்ப சேவைகளும், அதிவேக இண்டர்நெட் மிகவும் குறைந்த விலையில் கிடைப்பதும் தான்.
பெரிய டெக் நிறுவனங்களுக்குச் செக்
இந்தக் கொரோனா காலத்தில் பெரிய டெக் நிறுவனங்கள் அடுத்தடுத்துப் பிரச்சனைகளில் சிக்கிக்கொள்கிறது. இதில் முதலாவதாக ஐரோப்பிய அரசுகள் பெரும் டெக் நிறுவனங்கள் மீது நம்பிக்கையைச் சீர்குலைத்ததிற்காகக் குற்றம்சாட்டியது.
இதன் பின்பு அமெரிக்கா பல பெரிய நிறுவனங்களிடம் சரமாரியாக அடுத்தடுத்த கேள்வியைக் கேட்டு வந்த நிலையில், தற்போது பேஸ்புக் சிக்கியுள்ளது.
சீனாவில் அலிபாபா
இதேபோல் சீனாவில் ஆன்ட் பைனான்சியல் மற்றும் அலிபாபா மீது சீன அரசு அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து வருகிறது.
இதன் மூலம் இதுநாள் வரையில் பெரிய டெக் நிறுவனங்கள் அதிகளவிலான கட்டுப்பாடு அற்ற சுதந்திரத்தோடு இருந்தது விளங்குகிறது.
எலான் மஸ்க்
இந்த ஆண்டின் சிறந்த பிஸ்னஸ்மேன் ஆக விளங்கும் எலான் மஸ்க், இந்த வருடம் நாசா உடன் இணைந்து மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பிச் சாதனை படைத்துள்ளார். உலகிலேயே முதல் முறையாக ஒரு தனியார் நிறுவனம் மனிதர்களை விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி வெற்றி அடைந்ததது மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் தனியார் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உருவாக்கியுள்ளது.
டெஸ்லா
டெஸ்லா எலக்ட்ரிக் கார்கள் ஏற்கனவே மக்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பையும். வெற்றியையும் அடைந்துள்ள நிலையில், இந்த வருடம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற்று 612 பில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டுக்கு உயர்ந்துள்ளது.
இதன் வாயிலாக மொத்த அமெரிக்க ஆட்டோமொபைல் துறையும் எலக்ட்ரிக் தயாரிப்பில் இறங்கியுள்ளது.
இதோடு ஹைபர்லூப், போரிங் கம்பெனி, நியூராலிங்க், ஸ்டார்லிங்க் பிரிவுகளில் அடுத்தடுத்து வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு துறையில் புரட்சி
OpenAI அமைப்பு உருவாக்கிய புதிய GPT 3 அல்லது Generative Pre-trained Transformer Ver 3 செயற்கை நுண்ணறிவு துறையின் புதிய சகாப்தம் எனக் கூறப்படுகிறது. இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் மனிதர்களைப் போலவே அனைத்து யோசனைகளையும் இந்த மெஷின் செய்ய முடியும் அளவிற்குத் திறன் வாய்ந்தது.
கொரோனா தடுப்பு மருந்து
பொதுவாக ஒரு வியாதிக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கக் குறைந்தது 10 வருட ஆராய்ச்சியில் தான் உருவாக்கப்படும், ஆனால் இந்த ஆண்டுக் கொரோனா உலக நாடுகளைப் பயமுறுத்தி வந்த நிலையில் ஆராய்ச்சியாளர்களின் கடின உழைப்பில் ஒரு வருடத்திற்குள்ளேயே கொரோனா தடுப்பு மருந்து கண்டு பிடித்துள்ளனர். இது மட்டும் அல்லாமல் உலக மக்களுக்குத் தடுப்பு மருந்து போடுவதற்காக Mass Production செய்யும் பணியிலும் இறங்கியுள்ளனர்.