Recommended Video
இந்தியன் ரயில்வே, உலகிலேயே மிகப்பெரிய ரயில் போக்குவரத்து வைத்துள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று, கிட்டத்தட்ட 1 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு இயங்குகிறது. ஒவ்வொரு வருடமும் பல கோடிப்பேர் ரயிலில் பயணிக்கும் காரணத்தால் இந்திய பட்ஜெட் அறிக்கையில் ரயில்வே துறைக்கென தனிப் பட்ஜெட் அறிக்கை அறிவிக்கப்பட்டது.
சுமார் 92 வருடம் இது நடைமுறையில் இருந்த நிலையில் 2017-18ஆம் நிதியாண்டு பட்ஜெட்-ன் போது ரயில்வே பட்ஜெட் அறிக்கையைப் பொதுப் பட்ஜெட் அறிக்கையுடன் இணைக்கப்பட்டது. இன்று முதல் இந்திய ரயில்வே துறைக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் குறைந்துள்ளதாகச் சாமானிய மக்கள் மத்தியில் கருத்து நிலவி வருகிறது.
இந்நிலையில் பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் அறிக்கையில் ரயில்வே துறைக்கு என்ன கிடைக்கும் என்பதைத் தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
இந்திய ரயில்வே துறைக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் குறைந்துள்ளதாகச் சாமானிய மக்கள் மத்தியில் கருத்து இருந்தாலும், கடந்த 10 வருடத்தில் இந்திய ரயில்வே சற்று நவீனமயமாகியுள்ளது என்பதை ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும். அதே சமயம் ரயில் பயணக் கட்டணங்கள் தாறுமாறாக உயர்ந்துள்ளதையும் யாரும் மறந்துவிடக்கூடாது.
இந்நிலையில் 2020-21ஆம் நிதியாண்டு பட்ஜெட் அறிக்கையில் இந்திய ரயில்வே துறைக்கு ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் capacity enhancement செய்யப்படும், நவீன ரயில்வே கட்டுமான திட்டங்கள் அறிவிக்கப்படும், அனைத்திற்கும் மேலாகப் பாதுகாப்பை மையப்படுத்தித் தான் மொத்த திட்டங்களும் இருக்கும் என எதிர்பார்க்கப்படும்.
அதோடு 6 அதிவேக ரயில் தளங்கள், சரக்கு போக்குவரத்திற்காகத் தனிப்பட்ட ரயில் தடங்கள் கொண்டு அமைப்பை உருவாக்கும் திட்டம், அதிவகே ரயில்கள் அதிகளவில் இயக்க multitracking அமைக்கும் திட்டம், தனியார் நிறுவனங்கள் ரயில்களை இயக்கும் திட்டத்தின் விரிவாக்கம் ஆகியவை இந்தப் பட்ஜெட் அறிக்கையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு ரயில்வே துறையில் தொடர்ந்து விரிவாக்கத் திட்டங்களை அறிவித்தாலும் இத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவு குறைவாகத் தான் உள்ளது. 2019-20ஆம் நிதியாண்டில் இத்துறைக்கு மத்திய அரசு வெறும் 65,837 கோடி ரூபாய் அளவிலான நிதியை மட்டுமே ஒதுக்கியது.
ஆனால் 2018-19லேயே இந்திய ரயில்வே துறையில் செலவினத்தின் அளவு 1.60 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. இப்படியிருக்கும் போது ஏர் இந்தியாவைப் போல் இந்திய ரயில்வே துறையும் கடனில் தான் இருக்கும், இல்லையெனில் தனியாருக்கு ஒவ்வொன்றாகத் தாரைவார்த்துக் கொண்டு இருக்க வேண்டும்.