இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு அதிகரித்துள்ள காரணத்தால் நிலக்கரியை அடிப்படையாக வைத்து மின்சாரம் உற்பத்தி செய்யும் அனல் மின் நிலையத்தில் போதுமான நிலக்கரி இல்லாத காரணத்தால் மின்சார உற்பத்தி குறைந்து தற்போது நாட்டின் பல பகுதிகளில் மின்சாரத் தட்டுப்பாடு உருவாகியுள்ளது.
இந்நிலையில் தற்போது பீஹார், ஜார்கண்டில் ஒரு நாளுக்கு 14 மணி நேர மின் வெட்டு ஏற்பட்டு வரும் காரணத்தால் மக்கள் டார்ச்லைட் மூலம் வாழ துவங்கியுள்ளனர். இது மட்டும் அல்லாமல் பல தொழிற்சாலைகள் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.
இந்நிலையில் மத்திய அரசு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு மக்களின் பர்ஸ் ஓட்டையாக்க உள்ளது.
மத்திய அரசின் தளர்வு
மத்திய அரசு தற்போது அனைத்து அனல் மின் நிலையத்தையும் மின்சார உற்பத்தியை மேம்படுத்த வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டும் நிலக்கரியைப் பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. இது மின்சார உற்பத்தியை அதிகரித்தாலும் மின்சாரத்தின் விலையைப் பெரிய அளவில் பாதிக்கும்.
10 சதவீதம் வெளிநாட்டு நிலக்கரி
இன்று வெளியாகியுள்ள தரவுகள் அடிப்படையில் மத்திய அரசு அனல் மின் நிலையம் பயன்படுத்தும் மொத்த நிலக்கரியில் 10 சதவீதம் வரையில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது. இது ஏற்கனவே நடைமுறையில் இருந்த ஒன்றாக இருந்தாலும், இதைத் தடை செய்யப்பட்டு இருந்தது. தற்போது மத்திய அரசு மின்சாரப் பற்றாக்குறை காரணத்தால் இத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் அலுவலகம்
நிலக்கரி அமைச்சகமும், மின்சார அமைச்சகமும் இணைந்து பிரதமர் அலுவலகத்தில் நடத்திய பேச்சுவார்த்தையில் விரைவில் நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்கவும், நிலக்கரி விநியோகம் செய்யும் போக்குவரத்து தளத்தையும் மேம்படுத்த உறுதி அளிக்கப்பட்டு உள்ளது.
நிலக்கரி டெலிவரி உயர்வு
இதைத் தொடர்ந்து அக்டோபர் 11ஆம் தேதி அனல் மின்நிலையத்திற்குத் தினசரி நிலக்கரி டெலிவரி செய்யும் நிலக்கரி அளவீடு 1.9 மில்லியன் டன்னில் இருந்து 1.95 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது. இந்த மாதத்தின் இறுதிக்குள் இதன் அளவீடு 2 மில்லியன் டன்னாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
40 மில்லியன் டன் நிலக்கரி
தற்போது இந்திய நிலக்கரி சுரங்கத்தில் 40 மில்லியன் டன் அளவான நிலக்கரி இருப்பு உள்ளது, ஆனால் பற்றாக்குறை மிகுந்த அனல் மின்நிலையத்தில் சேர்ப்பதில் தாமதமும், உற்பத்தியில் தொய்வும் இன்னும் சரி செய்யப்படவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் தான் வெளிநாட்டு நிலக்கரியை பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
என்ன பிரச்சனை
இந்தியா மட்டும் அல்லாமல் உலகில் பெரும்பாலான நாடுகளில் நிலக்கரி தட்டுப்பாடு அதிகமாக இருக்கும் காரணத்தால் சப்ளை டிமாண்ட பிரச்சனை பெரிய அளவில் வெடித்துள்ளது. இதன் மூலம் 60 டாலருக்கு விற்பனை செய்யப்பட்ட நிலக்கரி தற்போது 160 டாலருக்கு உயர்ந்துள்ளது.
மின்சாரக் கட்டண உயர்வு
இந்தச் சூழ்நிலையில் இந்திய அனல் மின் நிலையத்தில் 10 சதவீத வெளிநாட்டு நிலக்கரியை பயன்படுத்த ஒப்புதல் அளித்தால் மின்சார உற்பத்தி விலை அதிகரிக்கும். இதனால் மக்கள் மின்சாரக் கட்டணத்தை அதிகளவில் செலுத்த வேண்டிய நிலை உருவாகும்.
நிலக்கரி கனிமவளம்
இந்தியாவில் அதிகளவிலான நிலக்கரி கனிமவளம் இருந்தாலும், உலகில் அதிகமாக நிலக்கரி இறக்குமதி செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. மேலும் நிலக்கரி சுரங்கம் இருக்கும் பகுதியில் அதிகமான மழைப் பதிவாகியுள்ள காரணத்தால் நிலக்கரி சுரங்கம் இருக்கும் பகுதிகளில் மழை வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் நிலக்கரி உற்பத்தியும் தடைப்பெற்றுள்ளது.
இந்தியப் பொருளாதாரம்
இந்தியாவில் கொரோனா தொற்றை விடவும், பெட்ரோல் டீசல் விலை உயர்வை விடவும், மின்சார உற்பத்தியில் ஏற்பட்டு உள்ள பிரச்சனை வேகமாக வளர்ந்து வரும் இந்தியப் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்த உள்ளது.