அமெரிக்காவின் பெடரல் வங்கி திடீரென 75 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் அமெரிக்க வர்த்தக சந்தையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் நிர்வாகம் மற்றும் பெடரல் ரிசர்வ் வங்கி ஆகியவை 40 பணவீக்கத்தை சமாளிப்பதற்காக இந்த கொள்கை முடிவை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
வட்டி விகித உயர்வு காரணமாக அமெரிக்க பொருளாதாரம் ஊசலாடிக் கொண்டிருப்பதாகவும் அமெரிக்க பொருளாதாரத்தில் பெரும் மந்த நிலையை ஏற்படுத்தும் என்று பல பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
அமெரிக்க பொருளாதாரம்
பொருளாதார வல்லுனர்கள் மற்றும் நிதி மேலாளர்கள் இதுகுறித்து கூறியபோது மத்திய வங்கியின் வட்டி விகித உயர்வு காரணமாக அமெரிக்க பொருளாதாரம் மந்த நிலையை எதிர்கொள்ளும் என்றும் இந்த மந்தநிலை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.
பெடரல் வங்கி
இந்த நிலையில் அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி விகித உயர்வு காரணமாக அமெரிக்க பொருளாதாரம் குறித்து பில்கேட்ஸ் முதல் எலான் மஸ்க் வரை பல பிரபலங்கள் என்ன கூறி உள்ளனர் என்பதை பார்ப்போம்.
லாரி சம்மர்ஸ்
இந்தியாவின் நிதியமைச்சர் என்ற பதவிக்கு இணையான பதவியான அமெரிக்காவின் கருவூலச் செயலர் என்ற பதவியை கடந்த 1999 முதல் 2001 வரை வகித்த லாரி சம்மர்ஸ் கூறியதாவது: அடுத்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்கப் பொருளாதாரம் மந்தநிலையைக் காணும். பணவீக்கம் 4 சதவீதத்திற்கு மேல் உயர்ந்து வேலையின்மை 4 சதவீதத்திற்கு கீழே குறைந்திருக்கும் போதெல்லாம், அமெரிக்காவில் இந்த இரண்டு அளவுகோல்களால் அமெரிக்க பொருளாதாரம் மந்தநிலையால் பாதிக்கப்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார்.
அடேனா ஃப்ரீட்மேன்
உலகின் மிகப் பெரிய பங்குச் சந்தைகளில் ஒன்றான Nasdaq இன் தலைமை நிர்வாக அதிகாரி அடேனா ஃப்ரீட்மேன் இதுகுறித்து கூறியபோடு, 'மந்தநிலை பற்றிய கணிப்புகள் அமெரிக்காவின் முதல் இடத்திற்கு தரும் எச்சரிக்கையாக இருக்கலாம். அத்தகைய கணிப்புகள் நுகர்வோர் நம்பிக்கையை சிதைத்துவிடும், அதே நேரத்தில் சந்தைகள் நிலையற்றதாக இருக்கும்' என்று கூறியுள்ளார்.
லாயிட் பிளாங்க்ஃபைன்
நிதிச் சேவைகள் நிறுவனமான கோல்ட்மேன் சாச்ஸின் மூத்த தலைவரான லாயிட் பிளாங்க்ஃபீன் அவர்கள் கூறியபோது, 'அமெரிக்காவின் மந்தநிலை மிக மிக அதிக ஆபத்து. ஆனால் அதைத் தடுக்க மத்திய வங்கி சக்திவாய்ந்த கருவிகளையும் கொண்டுள்ளது என்று கூறினார்.
டேவிட் சாலமன்
கோல்ட்மேன் சாக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் சாலமன் இதுகுறித்து கூறியபோது, 'அடுத்த 12 முதல் 24 மாதங்களில் மந்தநிலை ஏற்பட 30 சதவீதம் வாய்ப்பு உள்ளது. இந்த மந்தநிலை மிக மிக மெதுவான மந்தமான வளர்ச்சியைக் கொண்டிருப்பதற்கு வாய்ப்பு உள்ளது' என்று கூறினார்.
எலான் மஸ்க்
உலகின் மிகப் பெரிய பணக்காரரும் ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலோன் மஸ்க் கூறுகையில், நீண்ட காலமாகவே அமெரிக்க பொருளாதாரம் மந்தநிலையில் உள்ளது. மூலதனத்தை மேலும் தவறாக ஒதுக்கீடு செய்வது வரும் மாதங்களில் பொருளாதார நிலையை மோசமாக்கும் என்று எச்சரித்தார்.
பில் கேட்ஸ்
மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் இதுகுறித்து கூறியபோது, 'உக்ரைனில் ரஷ்யாவின் போர் போன்ற காரணங்களால் பணக்கார நாடுகள் பணவீக்கப் பிரச்சினைகளை துரிதப்படுத்தலாம். இது வட்டி விகிதங்களை அதிகரிக்கச் செய்யும் என்று எதிர்பார்க்கலாம். இது இறுதியில் பொருளாதார மந்தநிலையை ஏற்படுத்தும். இதனால் பங்குச்சந்தையில் கரடிகளின் ஆதிக்கத்தை அதிகரிக்க செய்யும் என நான் அச்சம் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.