மும்பை: இந்தியாவின் வாரன் பப்பெட் என்று செல்லமாக அழைக்கப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, இந்திய பங்கு சந்தைகளில் முதலீடு செய்பவர்களில் மிகவும் பிரபலமானவர்.
ஆப்டெக் லிமிடெட் கணினி மையத்தின் நிறுவனராகவும், பல பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் இயக்குனர் குழுவிலும் பங்கு வகிப்பவர் தான் இந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா.
பங்குச்சந்தையில் இவருடைய முதலீட்டின் மதிப்பு சுமார் 18,000 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
புதிய பங்கில் முதலீடா?
தனது ஆப்டெக் நிறுவனத்தில் 24% பங்குகளை வைத்துள்ள ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, பெரிய நிறுவனங்களிலும் முதலீடுகளை பரவலாக செய்து வருகிறார். அவர் தற்போது இரு பங்குகளில் முதலீடு செய்துள்ளாராம். அதோடு ஏற்கனவே வைத்துள்ள 6 பங்குகளில் முதலீட்டினையும் வைத்துள்ளராம். வாருங்கள் பார்க்கலாம். யார் இந்த ராகேஷ், அந்த புதிய பங்குகள் என்ன? பழைய பங்குகள் என்ன என்று?
வெற்றிகரமான முதலீட்டாளர்
பங்கு சந்தை என்றாலே பதறியடுத்து பலர் ஒடும் காலத்தில், அதற்கு மாறாக மிக இளம் வயதில் பங்குசந்தையில் நுழைந்து மிகக் குறைந்த முதலீட்டை பலமடங்கு பெருக்கி, வெற்றிகரமான முதலீட்டாளராக வலம் வந்தவர் தான் இந்த ராகேஷ் ஜூன் ஜூன்வாலா. இதனால் தானே என்னவோ? இவர் இந்தியாவின் வாரன் பஃபெட் என்று செல்லமாக அழைக்கப்படுகிறார்.
ராகேஷின் கல்வித் தகுதி
மும்பையில் பணியாற்றி வந்த வருமான வரித்துறை அதிகாரி ராதேஷ்யாம் ஜுன்ஜுன்வாலாவின் மகனாக ராகேஷ், 1960ஆம் ஆண்டு பிறந்தார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சார்ந்த ஷெகாவத் பகுதி இவரின் சொந்த ஊர். கல்வித் தகுதியில் ராகேஷ் ஒரு பட்டய கணக்காளர்.
எல்லாவற்றையும் விட, பல ஆண்டுகளுக்கு மேலாக பங்கு சந்தையில் முதலீடு செய்து, சந்தையின் ஏற்ற இறக்கத்தை மிக அருகில் இருந்து பார்த்தவர். இதனை விட வெறென்ன தகுதி வேண்டும் பங்கு சந்தையில் முதலீடு செய்ய?
பல பங்குகளில் முதலீடு
ஆரம்பத்தில் இவர் மிகச் சிறிய அளவில் டாடா டீ, சேஷ கோவா உள்ளிட்ட சில நிறுவனங்களில் இவர் செய்த முதலீடு நல்ல லாபத்தை அளித்தது. அந்த லாபத்தையும் திரும்ப ராகேஷ் பங்குசந்தையில் முதலீடு செய்தார். இவரது முதலீட்டிலேயே மிகவும் லாபகரமான முதலீடு என்பது டைட்டன் நிறுவனப் பங்கில் செய்த முதலீடு தான். கடந்த 2002 - 2003 காலகட்டத்தில் அந்த நிறுவனப் பங்குகள், ஒற்றை இலக்கத்தில் இருந்த நிலையில், இன்று அது ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான விலையில் வர்த்தகமாகிக் கொண்டுள்ளது.
டாடா மோட்டார்ஸில் பங்கு
இப்படி ஒரு முதலீட்டு ஜாம்பவான், கடந்த செப்டம்பர் காலாண்டில் மற்றொரு ஜாம்பவான் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் 4 கோடி பங்குகளை வாங்கியுள்ளதாக பிஎஸ்இ தரவுகள் காட்டின. இந்த நிலையி தான் தற்போது புதியதாக இரு பங்குகளில் முதலீடு செய்துள்ளதாகவும் தரவுகள் வெளியாகியுள்ளன. மேலும் ஏற்கனவே கையில் வைத்துள்ள ஆறு பங்குகளில் முதலீட்டினை மேலும் அதிகரித்துள்ளதாகவும் தரவுகள் கூறுகின்றன.
நிகர மதிப்பு அதிகரிப்பு
ராகேஷின் மொத்த நிகரமதிப்பு கடந்த மார்ச் மாத சரிவில் இருந்து 45 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது இடி அறிக்கை. எப்படி எனில் அவர் பங்கு வைத்துள்ள எட்டு நிறுவனங்களின் பங்கு விலையானது செப்டம்பர் காலாண்டில், நல்ல ஏற்றம் கண்டுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது. இது குறித்தான தரவில், டாடா மோட்டார்ஸின் முக்கிய முதலீட்டாளர்கள் பட்டியலில் ஜூன் காலாண்டில் ராகேஷின் பெயர் இல்லை. ஆனால் செப்டம்பர் காலாண்டில் அவர் 4 கோடி பங்குகளை வாங்கியுள்ளதாக தரவுகள் சுட்டிக் காட்டின.
வி.ஏ டெக் வபாக்கில் முதலீடு
இதற்கிடையில் அவரது மனைவி ரேகா ஜூன்ஜூவாலா, நீர் சுத்திகரிப்பு நிறுவனமான வி.ஏ டெக் வபாக்கில் (VA Tech Wabag) பங்குகளை வாங்கியுள்ளதாகவும் தரவுகள் கூறுகின்றன. இந்த நிலையில் தான் கடந்த அக்டோபர் 21 அன்று இந்த VA Tech Wabag பங்கின் விலையானது 75 சதவீதம் அதிகரித்து, 187.75 ரூபாயாக அதிகரித்துள்ளது, இது கடைசியான ஜூன் 30ல் 107.55 ரூபாயாக இருந்தது.
பங்கு விலை அதிகரிப்பு
இதே டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் 33% அதிகரித்து, மேற்கண்ட அதே காலகட்டத்தில் 130.25 ரூபாயாக காணப்பட்டது. இது கடந்த 2015ம் ஆண்டில் 605 ரூபாயினை தொட்டது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் 30 நிலவரப்படி ரேகாவிற்கு 50 லட்சம் பங்குகள் அல்லது 8.04% பங்குகள் VA Tech Wabag நிறுவனத்தில் வைத்துள்ளனர்.
பழைய பங்குகளில் முதலீடு அதிகரிப்பு
இதே போல என்சிசி (NCC)யிலும் 11.45% பங்கிலிருந்து 12.14% பங்குகளாக ராகேஷ் உயர்த்தியுள்ளார். இதே போல அக்ரோ டெக் புட்ஸ், டெல்டா கார்ப், ஜூபிலியன்ட் லைஃப் சயின்ஸ், டிவி18 பிராட்காஸ்ட், லூபின் உள்ளிட்ட பங்குகளி தனது முதலீடுகளை அதிகரித்துள்ளார்.
முதலீடு குறைப்பு
அதே நேரம் ராகேஷ் எஸ்கார்ட்ஸ், ஃபெடரல் வங்கி, பிரகாஷ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட பங்குகளில், தனது முதலீடுகளை குறைத்துள்ளார். இந்த நிலையில் அவரது நிகர மதிப்பு கடந்த வியாழக்கிழமை நிலவரப்படி 13,272 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த மார்ச் மாதத்தில் 9,169 கோடி ரூபாயாக இருந்தது.