கோடீஸ்வரர் ஒருவரின் 247 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் இந்த கொள்ளை குறித்து துப்பு கொடுத்தால் 5.7 கோடி ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டில் பிரிட்டனில் உள்ள கோடீஸ்வரர் ஒருவரின் வீட்டில் இருந்து ரூபாய் 247 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளை நடந்து மூன்று ஆண்டு ஆகியும் எந்த துப்பும் கிடைக்கவில்லை.
இதனை அடுத்து கோடீஸ்வரரின் மகள் தற்போது அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.
ரூ. 247 கோடி மதிப்பு நகைகள்
ஒரு பிரிட்டிஷ் கோடீஸ்வர மகள் தனது லண்டன் வீட்டில் இருந்து $31 மில்லியன் (ரூ. 247 கோடி) மதிப்பிலான கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்டெடுப்பதற்கான தகவலை கொடுத்தால் அதற்கு ஈடாக $7.2 மில்லியன் (தோராயமாக ரூ. 5.7 கோடி) வெகுமதி வழங்குவதாக அறிவித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த இந்த திருட்டு, நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய திருட்டாக கருதப்படுகிறது.
வெகுமதி
தொழிலதிபர் பெர்னி எக்லெஸ்டோன் என்பவரது வீட்டில் தான் இந்த கொள்ளை நடந்துள்ள நிலையில் அவரது மகள் தமரா நேற்று முன் தினம் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்கப்பட்டால், மீட்கப்பட்ட நகைகளின் மதிப்பில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 5.7 கோடியை வெகுமதியாக வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
குடும்ப சொத்து
இந்த மிகப்பெரிய கொள்ளையில் இதுவரை ஒரே ஒரு ஜோடி காதணிகள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. ஃபார்முலா 1 நடத்தும் தொழிலதிபரான பெர்னி எக்லெஸ்டோன் அவர்களின் மகள் தனது திருடப்பட்ட நகைகளில் பெரும்பாலானவற்றை மீண்டும் "ஒருபோதும் பார்க்க முடியாது" என்று அவநம்பிக்கையுடன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். திருடப்பட்ட நகையின் மதிப்பை விட தனது குடும்ப சொத்து திருட்டு போனதில் தனக்கு மிக மிக வருத்தம் என்றும் தமரா கூறியுள்ளார்.
சந்தேக நபர்
இந்த திருட்டை செய்தது டேனியல் வுகோவிச் என்று லண்டன் காவல்துறையிடம் தமரா தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நபர் குறித்து துப்பு கொடுத்தால் கூட தமரா $300,000 (தோராயமாக ரூ. 2.3 கோடி) பரிசாக வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார். வுகோவிச் தற்போது செர்பியாவில் இருப்பதாக கூறப்படுகிறது.
சட்டப்படியான வழிகள்
தொழிலதிபர் எக்லெஸ்டோன் மேலும் கூறுகையில், தனது நகைகளை சட்டப்படியான வழிகளில் திரும்பப் பெறுவதற்கு நீண்ட நேரம் காத்திருந்ததாகவும், ஆனால் அதனால் எந்தவித பலனும் இல்லை என்பதால் தற்போது வெகுமதியை அறிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
திருட்டு
கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமரா எக்லெஸ்டோன், அவரது கணவர் மற்றும் அவர்களது மகள் லண்டனில் இருந்து பின்லாந்துக்கு தனிப்பட்ட விமானத்தில் சென்றபோது தான் இந்த திருட்டு நடந்தது. அன்றைய இரவில், திருடர்கள் கென்சிங்டன் அரண்மனை தோட்டத்தில் உள்ள அவர்களது வீட்டிற்குள் நுழைந்து ஒவ்வொரு அறையையும் சூறையாடியுள்ளனர். விலை உயர்ந்த கடிகாரங்கள் மற்றும் நகைகள் உள்பட பல பொருட்களை திருடினர்.
சொத்துமதிப்பு
தமராவின் தந்தை பெர்னி எக்லெஸ்டோன் மற்றும் அவரது குடும்பத்தினர்களின் சொத்து மதிப்பு சுமார் $3 பில்லியன். இவர் ஃபார்முலா 1 போட்டிகளை நடத்தும் நிறுவனத்தை நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.