இந்தியா உட்பட உலகில் பல நாடுகள் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கத் திட்டமிட்டு வரும் நிலையிலும், முதலீட்டாளர்கள் தொடர்ந்து கிரிப்டோகரன்சி மீது முதலீடு செய்து வரும் காரணத்தால் முன்னணி தனியார் கிரிப்டோகரன்சிகள் சிறப்பான வளர்ச்சி அடைந்து வருகிறது.
குறிப்பாகக் கிரிப்டோகரன்சி சந்தையில் முன்னணி நாணயமாக விளங்கும் பிட்காயின் மதிப்பு இன்றைய வர்த்தகத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில், ஓரே நாளில் 1,500 டாலர் வரையில் உயர்ந்து 51,512 டாலர் என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
புதிய வரலாற்று உச்சம் : பிட்காயின்
உலகம் முழுவதும் கிரிப்டோகரன்சி வர்த்தகத்திற்குக் கடுமையான நெருக்கடி உருவாகி வரும் நிலையில் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் முதல் முறையாகப் பிட்காயின் 50,000 டாலரை அடைந்த நிலையில் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்குச் சென்றனர்.
ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் உலகின் பகுதியில் புதிதாகக் குவிந்துள்ள முதலீட்டின் காரணமாகப் புதன்கிழமை வர்த்தகத்தில் பிட்காயின் மதிப்பு 6 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ச்சி அடைந்து 51,512.11 டாலர் என்ற புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
ஜனவரியில் பெரும் சரிவு
2020ல் 5 மடங்கு வளர்ச்சி அடைந்த பிட்காயின் ஜனவரி மாதம் அமெரிக்க அரசு கிரிப்டோகரன்சி வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த திட்டமிட்ட நிலையில் 40,000 டாலர் என்ற அப்போதைய உச்ச அளவில் இருந்து 30,000 டாலர் வரையில் குறைந்தது. இதனால் முதலீட்டாளர்கள் சோகத்தில் மூழ்கினர்.
டெஸ்லா முதலீடு
ஆனால் பிப்ரவரி மாத துவக்கத்தில் எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா நிறுவனம் ஜனவரி மாதத்தின் இறுதியில் சுமார் 1.5 பில்லியன் டாலர் அளவில் முதலீடு செய்து பிட்காயின் வாங்கியதாகவும், கூடிய விரைவில் டெஸ்லா தளத்தில் பிட்காயின் வைத்து டெஸ்லா கார் வாங்கும் திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்தது.
புதிய உச்சம் தொட்ட பிட்காயின்
இந்த அறிவிப்புக்குப் பின்பு தொடர்ந்த வளர்ச்சிப் பாதையில் இருக்கும் பிட்காயின் இன்று 51,512 டாலரை என்ற புதிய உச்சத்தை அடைந்துள்ளது. டிசம்பர் மாதத்தில் தமிழ் குட்ரிட்டனஸ் அடுத்த சில மாதத்தில் பிட்காயின் 50,000 டாலரைத் தொடும் எனக் கணித்திருந்தது. ஆனால் பெரும் சரிவைக் கடந்து வெறும் 45 நாட்களில் 50,000 டாலக் அளவீட்டைக் கடந்துள்ளது பிட்காயின்.
புதிய டிஜிட்டல் கரன்சி மசோதா
இந்தியாவில் ரிசர்வ் வங்கி தயாரித்து வரும் புதிய டிஜிட்டல் கரன்சி மசோதாவில் இந்தியாவில் தனியார் கிரிப்டோகரன்சி அனைத்தையும் தடை செய்துவிட்டு இந்திய ரூபாய் மதிப்பில் புதிய டிஜிட்டல் கரன்சியை உருவாக்கத் திட்டமிட்டு உள்ளதாகக் கூறப்பட்டு உள்ளது.
அபராதம், சிறை தண்டனை
இதுமட்டும் அல்லாமல் தனியார் கிரிப்டோகரன்சி வைத்துள்ளவர்கள் மீது கடுமையான அபராதம் விதிக்கவும், சிறைத் தண்டனை விதிக்கவும் திட்டமிட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும் இந்தியாவில் இருக்கும் கிரிப்டோகரன்சி வர்த்தகத் தளத்தில் எப்போதும் இல்லாமல் அதிகளவிலான முதலீடுகளை இந்திய முதலீட்டாளர்கள் செய்து வருகின்றனர்.
வங்கி மற்றும் நிதியியல் அமைப்புகள்
கிரிப்டோகரன்சி மீது முதலீடு செய்யும் முதலீட்டாளர்களும், முதலீட்டு அளவுகளும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்காவில் இருக்கும் பல முன்னணி வங்கி மற்றும் நிதியியல் அமைப்புகள் கிரிப்டோகரன்சி வர்த்தகத்திற்கு ஏதுவான வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றனர். இதில் மாஸ்டர்கார்டு, பேங்க் ஆப் நியூயார்க் ஆகிய நிறுவனங்களும் அடக்கம்.
960 பில்லியன் டாலர்
பிட்காயின் மதிப்பு இன்று அடைந்துள்ள புதிய உச்சத்தின் மூலம் பிட்காயின் மதிப்பின் மொத்த சந்தை மதிப்பு 960 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது.