பொதுவாக ஆன்லைன் சில்லறை வர்த்தகம் என்றாலே அங்கு தள்ளுபடியும் சலுகையும் கிடைக்கும் என்றாலும், சில பிரச்சனைகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் இப்படியும் கூட நடக்குமா என்று நினைக்க வைக்கும் அளவுக்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்பி காகன் முர்மு ஆன்லைனில் ஒரு புதிய மொபைல் போனினை ஆர்டர் செய்துள்ளார்.
ஆனால் அவருக்கு ஒரு வாரத்திற்கு பின்பு டெலிவரி செய்யப்பட்ட பார்சலில் இரண்டு மார்பிள்ஸ் துண்டுகள் மட்டுமே இருந்துள்ளது.
போனிற்கு பதிலாக கல்லை அனுப்பிய நிறுவனம்
டெலிவரி செய்யப்பட்ட பார்சலில் மார்பிள் கல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த எம்பி, இது குறித்து கூறுகையில், ஆரம்பத்தில் எனக்கு இது சற்று அதிர்ச்சியாகத் தான் இருந்தது. ஏனெனில் ஆர்டர் செய்த சாம்சங் போனிற்கு பதிலாக ரெட்மி 5ஏ பெட்டி இருந்ததாகவும், அதோடு அந்த பெட்டியின் முத்திரை உடைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் அதை திறந்த போது அதில் இரண்டு மார்பிள் துண்டுகள் மட்டுமே இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
கேஸ் ஆன் டெலிவரி செய்யப்பட்டது
ஒரு வாரத்திற்கு முன்பு ஆர்டர் செய்யப்பட்ட இந்த போன் சரியான நேரத்தில் தான் டெலிவரி கொடுக்கப்பட்டதாகவும், அதுவும் தீபாவளி நேரத்தில் டெலிவரி செய்யப்பட்டதாகவும், அந்த நேரத்தில் நான் வீட்டில் இல்லாததால், என்னுடைய மனைவி 11,999 ரூபாயை ரொக்கமாக கொடுத்து பொருளை பெற்றுக் கொண்டதாகவும் கூறியுள்ளார் முர்மு. பாவம் அவங்களுக்கு அப்ப தெரியல அந்த பார்சலில் வெறும் கற்கள் தான் இருக்கிறது என்று.
மோசடி குறித்து எஃப்.ஐ.ஆர்
மேலும் இதை அவர்கள் எப்படி செய்ய முடியும். நான் இது குறித்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளேன். மேலும் இந்த பிரச்சனையை பற்றி மக்களவையில் பேசுவேன் என்றும் கூறியுள்ளார். மேலும் இது போன்ற நடவடிக்கைகளுக்கு ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் இது குறித்து நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளாராம். இந்த நிலையில் மால்டா காவல்துறைத் தலைவர் அலோக் ராஜோரியா நிச்சயமாக நாங்கள் விரைவில் நடவடிக்கை எடுப்போம் என்றும் கூறியுள்ளராம்.
அளவு மாறிய குர்தி
இந்த நிலையில் வேதியாளலாளரான பஜன் சஹா, என் மகள் ஒரு அளவிடப்பட்ட திட்டவட்டமான குர்தியை ஆன்லைனில் ஆர்டர் செய்தாள். ஆனால் அவர்கள் அனுப்பிய அந்த குர்தி சிறியதாக இருந்தது. மேலும் அந்த ஆடையை அணிய அவள் 750 ரூபாய் கூடுதலாக செலவழிக்க வேண்டியிருந்தது என்றும் கூறியுள்ளார். இதே பள்ளி ஆசிரியரான பர்னா குண்டு ஒரு புத்தகத்தை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவருக்கும் விலை மலிவான ஒரு டஜன் தீபக் குச்சிகளும், சில கல்களும் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
பிரச்சனைக்கு நாமே தான் காரணம்
இணையதளம் மூலம் வீட்டில் இருந்தபடியே நமக்கு தேவையான பொருட்களை ஆன்லைனில் உட்கார்ந்த இடத்திலேயே ஆர்டர் செய்து வாங்க வேண்டியது. பின்னர் அதில் ஏதும் பிரச்சனை என்றால் ஐயோ அம்மா என்று அலறி அடித்துக் கொண்டு காவல் துறையை நாடுவது, என்ன தான் ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனங்களில் விலை மதிப்புமிக்க ஒரு பொருளை ஆர்டர் செய்தாலும், நாம் நேரில் சென்று அதை தொட்டு பார்த்து வாங்குவது போல் இருக்காது. ஆக இனியாவது மக்கள் விலை அதிகம் உள்ள பொருட்களை நேரிடையாக சென்று ஒரு முறைக்கு பல முறை ஆய்வு செய்து வாங்க வேண்டும்.