இந்திய ஆட்டோமொபைல் துறையின் ஜாம்பவான் நிறுவனங்களான மாருதி சுசூகி, டாடா மோட்டார்ஸ், ஹியூண்டாய் என பலரும் கடந்த 12 மாதங்களாக தங்கள் விற்பனையில் மிகப் பெரிய சரிவை கண்டு கொண்டு இருக்கிறார்கள்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூட, ஆட்டோமொபைல் துறையில் விற்பனை சரிந்து இருப்பதற்கு காரணம் ஓலா, உபர் போன்ற டாக்ஸி அக்ரிகேட்டார்கள் எனச் சொன்னது நினைவில் இருக்கலாம்.
ஆனால் இங்கு ஒரு பாஜக எம்பி, இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையில் சரிவு எல்லாம் ஒன்றும் இல்லை என்கிற ரீதியில் ஒரு தினுசாக பாராளுமன்றத்தில் பேசி இருக்கிறார்.
பேச்சு
"இந்திய தாய் திரு நாட்டின் பெயரைக் கெடுக்கவும், மத்திய அரசின் பெயரைக் கெடுக்கவுமே, இந்திய ஆட்டோமொபைல் துறையில் மந்த நிலை இருப்பதாக மக்கள் சொல்கிறார்கள். உண்மையில் ஆட்டோமொபைல் துறையில் மந்த நிலை இருக்கிறது என்றால், சாலைகளில் ஏன் இவ்வளவு டிராஃபிக் ஜாம் ஆகிறது..?" என ஆழமாக யோசித்து நூதனமாக கேள்வி எழுப்பி இருக்கிறார்.
யார் இவர்
63 வயதாகும் வீரேந்திர சிங் மஸ்த் தான் அந்த மக்களவை உறுப்பினர். இவர், உத்திரப் பிரதேசத்தின் பலியா மக்களவை தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்று மக்களவைக்கு வந்திருக்கிறார். இத்தனைக்கும் இவர் தான் பாரதிய ஜனதா கட்சியின் கிஷான் மோர்ச்சாவின் தலைவர். பாராளுமன்றத்தின் பல்வேறு கமிட்டிகளிலும் உறுப்பினராக இருக்கிறார். இவர் சொல்வது உண்மையா..?
சரிவு
இந்தியாவில் சுமாராக 50 சதவிகித கார்களை மாருதி சுசூகி என்கிற ஒரே ஒரு நிறுவனம் விற்றுக் கொண்டு இருக்கிறது. கடந்த 12 மாதங்களில், பல மாதங்களின் மாருதி சூசுகியின் விற்பனை விவரங்களை எடுத்துப் பார்த்தால் 20 - 30 சதவிகிதம், விற்பனை சரிவு கண்டிருப்பதை நம் வீரேந்திர சிங் கவனிக்க வேண்டும்.
வணிக வாகனங்கள்
இந்தியாவின் மிகப் பெரிய வணிக வாகன தயாரிப்பாளர்களின் ஒன்றான அசோக் லேலண்ட் நிறுவனத்தின் விற்பனை இப்போது வரை சரியாக வில்லை. எனவே தன்னுடைய பல்வேறு உற்பத்தி ஆலைகளில், இந்த டிசம்பர் மாதத்தில் 2 முதல் 12 நாட்களை வேலை இல்லா நாட்களாக அறிவித்து இருப்பதை பாஜக எம்பிக்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டி இருக்கிறது.
விற்பனை விவரங்கள்
அசோக் லேலண்ட் தன் வலை தளத்தில் கொடுத்து இருக்கும் விவரங்கள் படி
--மீடியம் மற்றும் ஹெவி கமர்ஷியல் ட்ரக்குகள் விற்பனை 54 சதவிகிதம் சரிவைக் கண்டு இருக்கிறது.
--மீடியம் மற்றும் ஹெவி கமர்ஷியல் ட்ரக்குகள் விற்பனை 196 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது.
--லைட் கமர்ஷியல் வாகனங்களின் விற்பனை 25 சதவிகிதம் சரிவைக் கண்டு இருக்கிறது.
செய்திகளைப் பார்க்கவில்லையா
ஒவ்வொரு ஆட்டோமொபைல் நிறுவனமும், தன்னுடைய வாகன விற்பனை விவரங்களை மாத வாரியாக வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஏற்கனவே ஒரு கணிசமான ஊழியர்களை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார்கள். இந்தியா முழுக்க, சுமார் 250 டீலர்கள் ஆட்டோமொபைல் வியாபாரத்தில் நிலைத்து நிற்க முடியாமல் கடையை சாத்திவிட்டார்கள். இதை எல்லாம் அமைச்சர் பத்திரிகைகளில் படித்தாரா இல்லையா..?
ஆதாரம்
இப்படி தரவுகள் அடிப்படையில், ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்ட ஒரு விஷயத்தைக் கூட, பாஜக எம்பி வீரேந்திர சிங் எப்படி, எந்த ஆதாரத்தின் அடிப்படையில் மறுக்கிறார் என்றே தெரியவில்லை. வீரேந்திர சின் தன் தரவுகளையும், ஆதாரங்களையும் சரியாக தொகுத்து வெளியிட்டால் நல்லது. அந்த தரவுகள் & ஆதாரங்களை நாமும் ஆராய வசதியாக இருக்கும்.