இந்தியா முழுவதும் லாக்டவுன் செய்யப்பட்டுள்ள நிலையில் மின் விநியோக நிறுவனங்களில் கட்டண வசூல் அளவு எப்போதும் இல்லாத வகையில் சுமார் 80 சதவீதம் குறைந்துள்ளது. தற்போது பெறப்பட்டுள்ள கட்டணம், விநியோக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் சம்பளத்திற்கு மட்டுமே போதுமானதாக இருக்கும்.
இந்நிலையில் மின்சார உற்பத்திக்கு பவர் பிளான்ட்-க்கு தேவையான நிலக்கரி வாங்கவும், மின்சாரக் கடத்தலுக்கான செலவுகளுக்கு நிதி இல்லாமல் தவித்து வருகிறது மின்சார விநியோக நிறுவனங்கள்.
இந்த நிதி பற்றாக்குறை தொடர்ந்து நிலவினால் நாடு முழுவதும் மின்சார தட்டுப்பாட்டின் காரணமாக அதிகளவிலான மீன் தடை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
90,000 கோடி ரூபாய்
தற்போது மின்சார விநியோக மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் மத்தியில் நிலவி வரும் நிதிப் பற்றாக்குறையைச் சரி செய்ய இத்துறை தற்போது மத்திய அரசிடம் உடனடியாக 90,000 கோடி ரூபாய் நிதி உதவியை நாடி வருகிறது. இதற்கான ஒப்புதல் பெற 2 முதல் 3 வாரமும், அதற்கான நிதி திரட்ட அடுத்த 2 முதல் 3 வாரங்கள் ஆகும்.
இந்நிலையில் அடுத்த 6 முதல் 8 மாத காலத்தில் இந்திய மக்கள் அதிகளவிலான மின் தடை சந்திக்க வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.
20 முதல் 25 சதவீதம்
லாக்டவுன் காலத்தில் நாடு முழுவதும் வர்த்தகம் மற்றும் தொழிற்சாலை முடங்கியுள்ளதாலும், மத்திய மாநில அரசுகள் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்த போதிய கால அவகாசம் கொடுத்துள்ள காரணத்தாலும் மின்சார விநியோக நிறுவனங்கள் வழக்கத்தைக் காட்டிலும் வெறும் 20 முதல் 25 சதவீத கட்டணத்தை மட்டுமே வசூல் செய்துள்ளனர்.
லாக்டவுன் நீட்டிப்பு
மேலும் இந்தியாவில் கொரோனா பரவுவதைத் தடுக்க வேண்டும் என்பதற்காக லாக்டவுன் காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதால் எதிர்வரும் ஆபத்துகளைச் சமாளிக்கவும், கடனை திருப்பிச் செலுத்தவும் தொழிற்துறை நிறுவனங்களும் நிதியை முடக்கி வைத்துள்ளதால், அரசு கொடுத்த சலுகையைக் காரணம் காட்டி மின் கட்டணம் செலுத்தாமல் இருக்கின்றனர்.
மின் பயன்பாடு
மேலும் இந்த லாக்டவுன் காலத்தில் மின்சாரப் பயன்பாடும் 20 முதல் 30 சதவீதம் வரையில் குறைந்துள்ளது. இவை அனைத்தும் பெரும் தொழிற்துறை, உற்பத்தி நிறுவனங்களைச் சார்ந்து இருக்கும் காரணத்தால் அதிகளவிலான வருமானம் பாதிப்பு அடைந்துள்ளது.
92,887 கோடி ரூபாய்
மாநில மின் நிலையங்கள் மட்டும் சுமார் 92,887 கோடி ரூபாய் அளவிலான கட்டணம் பெரும், அதில் 80,818 கோடி ரூபாய் உத்திர பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கான, ஆந்திரா பிரதேசம் மாநிலங்கள் பெறுகிறது.
கடன் உதவி
தற்போது ஏற்பட்டுள்ள நிதி தட்டுப்பாட்டைச் சமாளிக்க மாநில மின் அமைப்புகள் மத்திய அரசிடம் கடன் உதவியைக் கேட்டுள்ளது. இந்தக் கடன் உதவியைக் குறைந்த வட்டியில் விரைவில் கிடைத்தால் மின் உற்பத்தியிலும், விநியோகத்திலும் எவ்விதமான தடையும் இருக்காது. இல்லையெனில் நாடு முழுவதும் நீண்ட நேரம் அல்லது அதிக நேரத்திற்கு மின் வெட்டை மக்கள் சந்திக்க வேண்டியிருக்கும்.