டெல்லி : பொதுத்துறையை சேர்ந்த பி.எஸ்.என்.எல் நிறுவனம், சமீபத்தில் அறிவித்த தன்னார்வ விருப்ப ஓய்வு திட்டத்தினை 70,000 பேர் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
டிசம்பர் 3 வரை இந்த திட்டமானது இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், கடந்த வாரமே இந்ததிட்டம் ஆரம்பமானது.
இந்த நிலையில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு வாரத்திலேயே 70,000 பேர் இந்த திட்டத்திற்கு ஆர்வம் தெரிவித்திருப்பதாக, இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் தலைவருமான பிகே புர்வார் தெரிவித்துள்ளார்.
விருப்ப ஓய்வுக்கு ஆர்வம்
இந்த 70,000 பேர் மட்டும் அல்ல, கிட்டதட்ட 1 லட்சம் பேர் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் தன்னார்வ ஓய்வூதிய திட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்த நிறுவனத்தின் மொத்த வலிமையே 1.50 லட்சம் ஊழியர்கள் என்ற நிலையில், கிட்டதட்ட பாதிக்கு பாதி பேர் இதற்கு ஆர்வம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பி.எஸ்.என்.எல் இந்த விருப்ப ஓய்வு திட்டத்திற்கு நிர்ணயித்துள்ள இலக்கு 77,000 பேர் என்றும் தெரிவித்துள்ளார்.
விருப்ப ஓய்வுக்கு வரவேற்பு
இந்த தன்னார்வ விருப்ப ஓய்வுக்காக ஆர்வம் தெரிவித்தவர்கள், ஜனவரி 31, 2020 வரை பதவியில் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. இதுவே அவர்கள் விருப்ப ஓய்வு பெறுவதற்கான தேதியும் இதுதான் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதுவரை 70,000 பேர் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளதாகவும் புர்வார் தெரிவித்துள்ளார்.
கவனமாக இருக்கிறோம்
தன்னார்வ விருப்ப ஓய்வு திட்டத்தினை அறிமுகப்படுத்திய பின்னர், குறிப்பாக கிரமாப்புறங்களில் உள்ள தொலைபேசி பரிமாற்றங்களைப் பொறுத்தவரை, சுமூகமான செயல்பாடுகள் மற்றும் வணிக தொடர்ச்சியை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை அவசரமாக பரீசிலிக்கும் படி, தொலைத் தொடர்பு துறையிடம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏனெனில் ஊழியர்களில் கிட்டதட்ட பாதிபேர் வி.ஆர்.எஸ் பெறும் போது, சேவை தடைபடக் கூடாது என்பதிலும் கவனமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
செலவு மிச்சம்
மேலும் இந்த தன்னார்வ விருப்ப ஓய்வு திட்டத்தினால் (BSNL Voluntary Retirement Scheme - 2019) 70,000 - 80,000 ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம் என்ற எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது. இதன் படி இந்த நிறுவனத்திற்கு மாதம் சம்பள செலவாக 7000 கோடி ரூபாய் குறையும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த தொகையினை தொய்வடைந்துள்ள பகுதிகளுக்கு முதலீடு செய்ய ஏதுவாக இருக்கும் என்றும் முன்னரே கூறப்பட்டது.
விருப்ப ஓய்வூ பெறும் ஊழியர்களுக்கு சலுகை
தன்னார்வ விருப்ப ஓய்வூ பெறும் ஊழியர்களுக்கு, அரசு இந்த திட்டத்தின் கீழ் பல சலுகைகளை அறிவித்துள்ளது. குறிப்பாக ஊழியர்களுக்கு பணி முடித்த ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு 35 நாட்கள் ஊதியமும், மீதமுள்ள பணிக்காலத்திற்கு ஆண்டுக்கு 25 நாட்கள் ஊதியமும் வழங்கப்படும் என பி.எஸ்.என்.எல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன் பெற, 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
விருப்ப ஓய்வூக்கு ஆர்வம் அதிகரிப்பு
மேலும் தற்போது பணியில் உள்ள 1.5 லட்சம் ஊழியர்களில் கிட்டத்தட்ட 1 லட்சம் பேர், இந்த விருப்ப ஓய்வுக்கு தகுதி பெறுகிறார்கள். மேலும் இந்த விருப்ப ஓய்வை பெற இதுவரை 70,000 பேர் ஆர்வம் தெரிவித்துள்ள நிலையில், இதற்கு ஊழியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் விரைவில் இதன் மூலம் 70,000 - 80,000 பேர் ஊழியர்கள் வரை இந்த திட்டத்திற்கு ஆர்வம் தெரிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
பி.எஸ்.என்.எல்லுக்கு புத்துயிர் கிடைக்கும்
மேலும் கடந்த மாதத்தில் அரசு அறிவித்த இணைப்பு நடவடிக்கையும், இந்த தன்னார்வ விருப்ப ஓய்வூ திட்டத்தாலும், நஷ்டத்தில் இயங்கி வருகிற பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்களுக்கு இது ஒரு புத்துயிரூட்டலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் விருப்ப ஓய்வு திட்டத்துக்கு தேவையான நிதியினை மத்திய அரசு வழங்கும் என்றும் கடந்த மாதமே அறிவித்திருந்தது நினைவு கூறத்தக்கது.