இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையானது தொடர்ந்து உச்சம் தொட ஆரம்பித்துள்ள நிலையில், மக்கள் மத்தியில் மின்சார வாகனங்கள் மீதான ஆர்வம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
ஆனாலும் கூட இன்றளவிலும் மின்சார வாகங்களுக்கு சார்ஜிங் ஏற்றம் குறித்த உள்கட்டமைப்பு வசதிகள் என்பது மிக குறைவாக உள்ளது. இதனால் மின்சார வாகனங்கள் பற்றிய தயக்கம் இருந்து வருகின்றது.
இதனால் பெட்ரோல் டீசலுக்கு மாற்றாக பார்க்கப்பட்டாலும், மின்சார வாகன சந்தையானது, இந்தியாவில் இன்னும் அந்தளவுக்கு விரிவடையவில்லை என்றே கூறலாம்.
வாகனங்களுக்கான சார்ஜிங் மையம்
ஆனால் தற்போது பல நிறுவனங்களும் மின்சார வாகனங்கள் உற்பத்தியில் ஆர்வ காட்டத் தொடங்கியுள்ள நிலையில், மின்சார வாகனங்களுக்கு தேவையான சார்ஜிங் மையங்களையும் அமைக்க முனைப்பு காட்டி வருகின்றன. வாகன நிறுவனங்கள் மட்டும் அல்ல, இன்று நாட்டின் மிகப்பெரிய எரிபொருள் சில்லறை விற்பனையாளார்களும் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளன.
எரிபொருள் விற்பனையார்கள் ஆர்வம்
பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனங்கள் கூட காலத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ள முயன்று வருகின்றன. குறிப்பாக அரசின் 2070ம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வு பூஜ்ஜியம் என்ற இலக்கினை அடைய எண்ணெய் நிறுவனங்களும் உதவ உள்ளதாக தெரிவித்துள்ளன.
மின்சார வானக சார்ஜிங் மையங்கள்
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் அடுத்த சில ஆண்டுகளில், 7,000 மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. இது மின்சார வாகன சந்தையை மேற்கொண்டு ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியத்துவம்
இது குறித்து பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அருன் குமார் சிங், அடுத்த சில ஆண்டுகளில் 7,000 சார்ஜிங் மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளோம். இது சில்லறை விற்பனை, பெட்ரோ கெமிக்கல், கேஸ், ரினிவபிள் எனர்ஜி மற்றும் பயோபியூவல்ஸ் உள்ளிட்ட அம்சங்களில் இதுவும் முக்கிய அம்சம் பொருந்திய ஒன்றாகும் என தெரிவித்துள்ளார்.
பிபிசிஎல் + ஐஓசி
பிபிசிஎல்லின் இந்த அறிவிப்பானது, சில தினங்களுக்கு முன்பு மற்றொரு எண்ணெய் ஜாம்பவான் ஆன இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 10,000 சார்ஜிங் மையங்களை அடுத்த மூன்று ஆண்டுகளில் அமைப்பதாக கூறியுள்ள நிலையில் வந்துள்ளது.
இதில் அடுத்த 12 மாதங்களில் 2000 சார்ஜிங் மையங்களையும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 8,000 சார்ஜிங் மையங்களையும் அமைக்க உள்ளதாக கூறியிருந்தது. மொத்தத்தில் 2024ம் ஆண்டிற்குள் 10,000 சார்ஜிங் மையங்களை நாடு முழுவதும் அமைக்க திட்டமிட்டுள்ளது.
ஹிந்துஸ்தான் பெட்ரோலியத்தின் திட்டம்
இதேபோல செப்டம்பர் மாதம் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மூன்று ஆண்டுகளில் 5,000 இடங்களில் சார்ஜிங் நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்தது. மொத்தத்தில் அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவிலும் மின்சார வாகன சந்தையானது மேம்பட தொடங்கிவிடும் என பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
அடுத்த கட்டம் நோக்கி நகரும் பிபிசிஎல்
மேற்கண்ட எரிபொருள் விற்பனையாளர்கள் எண்ணெய் விற்பனையோடு நின்று விடாமல், தற்போது இந்தியாவின் மின்சார வாகன சந்தைக்கு தூண்டுகோலாய் அமையும் விதமாக மின்சார வாகனங்களுக்கான உள்கட்டமைப்பு வசதியினையும் மேம்படுத்த தொடங்கியுள்ளன.
பிபிசிஎல்-லின் திறன்
நாட்டின் இரண்டாவது பெரிய எண்ணெய் சுத்திகரிப்பாளரான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், மும்பை, கொச்சின் உள்ளிட்ட பகுதிகள் சுத்திகரிப்பு நிலையங்களை வைத்துள்ளது. 19,000-க்கும் மேற்பட்ட பெட்ரோல் பம்புகளையும், 6,100-க்கும் மேற்பட்ட எல்பிஜி விற்பனையாளர்களையும், 733 லூப்ஸ் விற்பனையாளர்கள், 123 பிஓஎல் சேமிப்பு நிலையம், 54 எல்பிஜி பாட்டிலிங் ஆலைகள், 64 ஏவியேஷன் சர்வீஸ் ஸ்டேஷன் என பல அம்சங்களையும் கொண்டுள்ளது.