டீ-க்குப் பிஸ்கட் தொட்டு சாப்பிடுவதைத் தாண்டி பல கோடி பேர் இந்தியாவில் ஒரு வேளை உணவாகவும் இந்தப் பிஸ்கட் பாக்கெட் விளங்குகிறது. இப்படிப்பட்ட முக்கியமான பிஸ்கட் விலையை உயர்த்த நாட்டின் முன்னணி பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே எரிபொருள் விலையால் மக்கள் அதிகப்படியான சுமையை எதிர்கொண்டு வரும் நிலையில், தற்போது இதன் பாதிப்பு உணவு பொருட்கள் மீதும் எதிரொலித்துள்ளது.
பிரிட்டானியா
இந்தியாவின் முன்னணி பிஸ்கட் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான பிரிட்டானியா, இந்த ஆண்டில் தனது தயாரிப்புகளின் விலையை 7 சதவீதம் வரையில் உயர்த்த திட்டமிட்டு உள்ளது. இந்த விலை உயர்வுக்கு உற்பத்தி பொருட்களின் விலையில் ஏற்பட்டு உள்ள மாற்றங்கள் தான் காரணம்.
ரஷ்யா - உக்ரைன் போர்
ரஷ்யா - உக்ரைன் போர் துவங்கிய காலத்தில் இருந்து இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலக நாடுகளில் உணவு பொருட்கள் மற்றும் சமையல் எண்ணெய் விலை அதிகப்படியாக உயர்ந்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் அரிசி, சர்க்கரை, போன்ற பல பொருட்கள் வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
7 சதவீதம் வரை உயர்வு
இதோடு பெட்ரோல், டீசல் விலை உயர்வாலும் விவசாயப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது மறுக்க முடியாது. இதன் வாயிலாக உற்பத்தி பொருட்களின் விலை உயர்வால் பிரிட்டானியா தனது பிஸ்கட் உட்பட அனைத்து உற்பத்தி பொருட்களின் விலையை இந்த வருடம் 7 சதவீதம் வரையில் உயர்த்த திட்டமிட்டு உள்ளது.
வருன் பெர்ரி
இந்த விலை உயர்வின் மூலம் ஏழை மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட உள்ளனர். இதுகுறித்து பிரிட்டானியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வருன் பெர்ரி கூறுகையில் முதலில் நாங்கள் பணவீக்க அளவீட்டை 3 சதவீதமாக மட்டுமே இருக்கும் எனக் கணித்திருந்த நிலையில் உக்ரைன் போருக்குப் பின்பு 8-9 சதவீதமாக உயர்ந்துள்ளது எனத் தெரிவித்தார்.
வாடியா குரூப்
வாடியா குரூப் கீழ் சுமார் 130 வருடமாக இயங்கி வரும் பிரிட்டானியா நிறுவனம் குட் டே, மாரி கோல்டு, டைகர் பிஸ்கட்களுக்குப் பிரபலமானவை. இந்நிறுவனம் பிஸ்கட்களைத் தாண்டி பிரெட், கேக் மற்றும் பால் சார்ந்த பொருட்களைத் தயாரித்து வர்த்தகம் செய்து வருகிறது. பிஸ்கட் விலை உயர்வு குறித்து நீங்க என்ன நினைக்கிறீங்க.. கமெண்ட் பண்ணுங்க..