உலகின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான பிரிட்டிஷ் ஏர்வேஸ் 1.7 பில்லியன் டாலர் மதிப்பிற்கு புதிய விமானங்களை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின் தற்போது மீண்டும் விமான நிறுவனங்கள் விமானங்களை இயக்கி வருகின்றன.
முழுமையான அளவில் தற்போது விமானங்கள் இயங்கத் தொடங்கியுள்ள நிலையில் தற்போது பிரிட்டிஷ் ஏர்வேஸ் புதிய விமானங்களை வாங்குவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளது.
பிரிட்டிஷ் ஏர்வேஸ்
பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் 1.7 பில்லியன் டாலர் மதிப்பிலான 11 ஏர்பஸ் ஏ320 நியோ விமானங்களையும் மூன்று ஏ321 நியோ விமானங்களையும் ஆர்டர் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
தள்ளுபடி விலை
இந்த விமானங்களை கணிசமான தள்ளுபடி குறித்த பேச்சுவார்த்தைக்கு பிறகு ஆர்டர் செய்துள்ளதாகவும் எரிபொருள் சிக்கனத்தை கடைபிடிக்கும் இந்த ஜெட் விமானங்களை வாங்குவதற்கு இந்நிறுவனம் தனது விருப்பத்தை தெரிவித்து உள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெலிவரி எப்போது?
தற்போது ஆர்டர் செய்யப்பட்டுள்ள இந்த விமானங்கள் 2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில் டெலிவரி செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நவீன விமானங்கள் குறைவான எரிபொருளை பயன்படுத்தி அதிக தூரம் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் என்றும், விமானங்களுக்கான செலவு திறன் மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகள் ஆகிய இரண்டையும் கருத்தில் கொண்டே இந்த விமானங்கள் தற்போது ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புத்துயிர்
கொரோனா வைரஸ் நோயினால் உலகம் முழுவதும் விமானத்துறை மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் விமான நிறுவனங்கள் புத்துயிர் பெற்று வருகின்றன. அந்த வகையில் விமான தயாரிப்பு நிறுவனங்களுக்கும் ஆர்டர்கள் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
நல்ல லாபம்
இந்த நிலையில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் மலிவு விலையில் கட்டணத்தை குறைத்துள்ளதாகவும், அதனால் இந்த நிறுவனத்தின் விமானங்களை அதிகளவு பயணிகள் பயன்படுத்தியதால் நல்ல லாபம் கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
A320 நியோ விமானங்கள்
மேலும் 6.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள 56 A320 நியோ விமானங்களை வாங்க பிரிட்டிஷ் ஏர்வேஸ் திட்டமிட்டுள்ளதாகவும், இந்த விமானங்கள் 2026 மட்டும் 2029 ஆண்டுகளில் டெலிவரி செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சரியான நேரம்
விமான நிறுவனங்கள் தற்போது லாபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் சரியான நேரத்தில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் புதிய விமானங்களை வாங்க இருப்பதாக விமானத் துறையில் உள்ள வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.
வேலைநிறுத்தம்
இந்தநிலையில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் கடந்த வாரம் திடீரென லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் ஊதிய உயர்வு கேட்டு வேலை நிறுத்தம் செய்ய வாக்களித்தனர். பணவீக்கம் அதிகரித்து வரும் காரணத்தை கணக்கில் கொண்டு ஊதியத்தையும் அதிகரிக்க வேண்டும் என்பது தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது. இந்த கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.