டெல்லி: அடடா.. 4ஜி சேவையை அறிமுகம் செய்வோம் என்று அறிவித்தாலும், அறிவித்தார்கள், பிஎஸ்என்எல் கலக்கலான ஆஃபர்களை அறிவித்தபடி இருக்கிறது. ஜியோ, ஏர்டெல்லை தூக்கி சாப்பிடும் வகையில் அந்த அறிவிப்புகள் இருப்பதால், வாடிக்கையாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) புத்தாக்கத்திற்காக மத்திய அரசு பேக்கேஜ் அறிவித்து சில வாரங்கள்தான் ஆகியுள்ளன. அதற்குள்ளாக அதிரடியை ஆரம்பித்துள்ளது அந்த நிறுவனம்.
ரூ .1,699 ப்ரீபெய்ட் திட்டம் இதற்கு ஒரு நல்ல உதாரணம். நவம்பர் 30ம் தேதிக்குள் இந்த திட்டத்தில் இணைந்தால், 425 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். அதன்பிறகு இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால், 365 நாட்கள் வேலிடிட்டியாகும். அதாவது, நவம்பர் மாதத்தில் இத்திட்டத்தில் இணைந்தால், உங்களுக்கு முழுதாக 60 நாட்கள் கூடுதலாக கிடைக்கும்.
2 மாதம் அதிகம்
முன்னதாக, அக்டோபர் 31 வரை ரீசார்ஜ் செய்திருந்தால்தான், இப்படி 60 நாட்கள் கூடுதலாக கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது. இப்போது காலக்கெடு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ரூ .1,699 ப்ரீபெய்ட் திட்டம் அப்படி என்ன சலுகையை வழங்குகிறது என கேட்கிறீர்களா. பிற தனியார் நிறுவனங்களை வாய் பிளக்க வைக்கும் சலுகைகளை வாரி வழங்குகிறது.
தினம் 2 ஜிபி கிடைக்கும்
இந்த பேக்கேஜில் இணைந்தால், தினமும் 250 நிமிடங்கள் இலவசமாக எந்த ஒரு நெட்வொர்க் போனுக்கும் பேச முடியும். தினமும் 2 ஜிபி டேட்டா இலவசம். தினம், 100 எஸ்எம்எஸ்கள் வரை கட்டணம் கிடையாது. வாடிக்கையாளர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட ரிங் பேக் டோன்களும் (பிஆர்பிடி) வழங்கப்படும், இது முதல் 365 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
ஏர்டெல், ஜியோ
ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்களும், ரூ .1,699 பேக்கேஜ்களை வழங்குகின்றன. ஏர்டெல் தினமும் 1.4 ஜிபி டேட்டாவையும், வரம்பற்ற வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் பேக்கேஜ்களை வழங்குகிறது. 365 நாட்கள் வேலிடிட்டி. ஜியோ ரூ .1,699 ப்ரீபெய்ட் திட்டத்திலும் 365 நாட்கள் வேலிடிட்டிதான். ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாவுடன் வரம்பற்ற ஜியோ-டு-ஜியோ வாய்ஸ் கால் மற்றும் இலவச எஸ்எம்எஸ் சலுகைகளை வழங்குகிறது.
யார் சூப்பர்
இப்போ சொல்லுங்க, அதிக வேலிடிட்டி, அதிக டேட்டா உள்ளிட்டவற்றை கொடுப்பது பிஎஸ்என்எல்தானே? பாரதி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, ஜியோ உள்ளிட்டவை நஷ்டக்கணக்கு காட்டி வருகின்றன. எனவே கட்டணங்களை உயர்த்தபோவதாக அறிவித்தன. இந்த நிலையில், பிஎஸ்என்எல் தனது அதிரடியை ஆரம்பித்துள்ளது.