தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தொடர்ந்து கட்டணங்களை உயர்த்தி வரும் நிலையில், தற்போது பொதுமக்களின் கவனமானது பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் பக்கம் திரும்பியுள்ளது.
சொல்லபோனால் கிராமப்புறங்களில் இதன் தாக்கம் அதிகரித்துள்ளது எனலாம். சமீபத்திய வாரங்களுக்கு முன்பு தான் ஏர்டெல், வோடபோன் ஐடியா, ஜியோ உள்ளிட்ட தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது கட்டண விகிதங்களை உயர்த்தின. இது பயனாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஆனால் அந்த சமயத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் கட்டணத்தில் எந்த அதிகரிப்பும் செய்யவில்லை.
பிராட்பேண்ட் திட்டங்கள் மறுசீரமைப்பு
எனினும் தற்போது அரசின் தொலைத் தொடர்பு நிறுவனமானது தனது பிராட்பேண்ட் திட்டங்களை மறுசீரமைத்துள்ளது. எனினும் மறுசீரமைக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறிப்பிட்ட வட்டம் மற்றும் அந்தமான் மற்றும் நிகோபார் வட்டத்திற்கு பொருந்தும் என தெரிவித்துள்ளது. இது புதிய மற்றும் பழைய வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும் என அறிவித்துள்ளது.
ஏர்டெல் நுழைய திட்டமா?
அந்தமான் மற்றும் நிகோபார் வட்டத்தில் அதிக கட்டணங்களை கொண்டுள்ளது. இந்த வட்டத்தில் தற்போது கட்டணங்கள் மாறவில்லை என்றாலும், தற்போது மறுசீரமைக்கப்பட்ட பின்னர் பயனர்கள் அதிக நலன்களை பெறுவர். எனினும் தற்போது போர்ட் பிளேர் நகரில் ஏர்டெல் நுழைய வாய்ப்புள்ளது என்ற யூகத்திற்கு மத்தியில், பிஎஸ்என்எல்-ன் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இணைய வேகம் எப்படியிருக்கும்?
இந்த சீர்திருத்தத்தின் காரணமாக பிஎஸ்என்எல் நிறுவனம் 499 ரூபாய் மதிப்பிலான திட்டத்தில், 70 ஜிபி வரையிலான டேட்டாவினை எட்டும் வரையில், 15 எம்பிபிஎஸ் வரை வேகம் உள்ளது. அதன் பிறகு 512 கேபிபிஎஸ் வேகம் ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இதே 799 ரூபாய் மதிப்பிலான திட்டத்தில் 120 ஜிபி வரையில் 30 எம்பிபிஎஸ் வரை வேகம் இருக்கலாம். அதன் பிறகு 512 கேபிபிஎஸ் வேகத்தில் இணைய சேவை கிடைக்கும்.
இதில் எப்படி?
1,000 ரூபாய்க்கு கீழ் உள்ள 999 ரூபாய் திட்டத்தின் கீழ் 200 ஜிபி வரையில் 40 எம்பிபிஎஸ் வரையில் இருக்கலாம். அதன் பிறகு 512 கேபிபிஎஸ் வேகத்தில் இணைய சேவை கிடைக்கும்.
இதே 1,499 ரூபாய் மதிப்பிலான திட்டத்தில் 300 ஜிபிவரையிலான டேட்டா, 80 எம்பிபிஎஸ் வேகத்திலும், அதன் பிறகு 2எம்பிபிஎஸ் ஆகவும் குறையும்.
இதிலும் திருத்தங்கள்
பி.எஸ். என்.எல் மேற்கண்ட திட்டங்கள் மட்டும் அல்லம் 2,799 ரூபாய், 3,999 ரூபாய், 5,999 ரூபாய் மற்றும் 7,999 ரூபாய் திட்டங்களிலும் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இந்த திட்டங்கள் 150 எம்பிபிஎஸ், 200 எம்பிபிஎஸ், 250 எம்பிபிஎஸ், மற்றும் 300 எம்பிபிஎஸ் வேகத்தில் இணைய சேவையை வழங்குகின்றன. இதில் முறையே 750 ஜிபி டேட்டா, 1,100 ஜிபி டேட்டா, 1,800 ஜிபி டேட்டா மற்றும் 2,500 ஜிபி டேட்டாவினை வழங்குகின்றன.
ரூ.1000 கீழான திட்டங்கள்
பி எஸ் என் எல் நிறுவனம் டிஎஸ்எல் பிராட்பேண்ட் திட்டங்களையும் மாற்றி திருத்தியுள்ளது. மேலும் 1,000 ரூபாய்க்கு கீழ் உள்ள 350 ரூபாய், 650 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் திட்டங்களில் 50ஜிபி, 150 ஜிபி, 250ஜிபி டேட்டாக்களை வழங்கி வருகின்றது. இது மட்டும் அல்ல, இன்னும் பல திட்டங்களிலும் மாற்றம் செய்துள்ள பி எஸ் என் எல், மற்ற இடங்களிலும் மறுசீரமைப்பு செய்யுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.