இந்திய டெலிகாம் துறை ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது, ஒருபக்கம் 5ஜி சேவையை நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் செயற்கைக் கோள் மூலம் அளிக்கப்படும் பிராட்பேண்ட் சேவைக்கான கட்டமைப்பு, ஸ்பெக்ட்ரம் ஆகியவை திட்டமிடப்பட்டு வருகிறது.
இதை இந்தியாவின் டிஜிட்டல் புரட்சி காலமாகப் பார்க்கப்படும் நிலையில், இத்துறையில் பொதுத்துறை நிறுவனமான BSNL பங்கு இல்லை என்றால் எப்படி..?
பிஎஸ்என்எல்
இந்திய அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் சரிவில் இருந்து மீண்டு வரவும், லாபகரமான நிறுவனமாக மாற வேண்டும் என்பதற்காக மத்திய அரசு பல புதிய முயற்சிகளையும், பல புதிய நிதி உதவி திட்டங்களையும் அறிவித்து வருகிறது. இதன் எதிரொலியாக இந்திய டிஜிட்டல் புரட்சியில் பிஎஸ்என்எல்-ம் முக்கியப் பங்கு வகிக்க உள்ளது.
22,000 கோடி ரூபாய்
பிஎஸ்என்எல் அடுத்த நான்கு ஆண்டுகளில் 4ஜி சேவைக்கான மூலதனச் செலவினமாக 22,000 கோடி ரூபாயை மத்திய அரசு அறிவித்தது.இந்த நிதியை வைத்து BSNL நிறுவனம் அதன் 4ஜி, 5ஜி தொழில்நுட்பங்களை மேம்படுத்தப் பயன்படுத்த உள்ளது.
4ஜி சேவை
மத்திய அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) இதுவரை தனியார் நிறுவனங்களைப் போல் 4ஜி சேவையை அளிக்காத நிலையில் புதிய வாடிக்கையாளர்களைப் பெற முடியாமல் தவித்தது.
4ஜி மற்றும் 5ஜி சேவை
இதனிடையில் தான் 4ஜி தொழில்நுட்பத்தை மேம்படுத்த திட்டமிட்டு அதற்காக நிதி உதவி, ஒப்புதல்களை மத்திய அரசிடம் இருந்து பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது ஆகஸ்ட் 2023க்குள் 4ஜி சேவை தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்து அதை 5ஜி சேவையை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக BSNL நிறுவனம் ஒரு புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது.
அஷ்வினி வைஷ்ணவ்
இந்த மாத தொடக்கத்தில், மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், பிஎஸ்என்எல்லின் 4ஜி தொழில்நுட்பம் ஐந்து முதல் ஏழு மாதங்களில் 5ஜிக்கு மேம்படுத்தப்படும் என அறிவித்தார். இதை இந்தியாவில் BSNL நிறுவனத்திடம் உள்ள 1.35 லட்சம் டெலிகாம் டவர்களில் விரிவுபடுத்தப்படும் எனக் கூறினார்.
1.64 லட்சம் கோடி ரூபாய் உதவி
ஜூலை 27 அன்று, பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி (CCEA) BSNL நிறுவனத்தை மீட்டெடுக்கச் சுமார் 1.64 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உதவி திட்டத்தை அறிவித்து இருந்தது. இந்தத் தொகையை வைத்துத் தற்போது இருக்கும் சேவையை மேம்படுத்தும், புதிய திட்டத்தை உருவாக்கவும், தேவையான இடங்களில் முதலீடு செய்யவும் முடிவு செய்தது.
4 ஆண்டுகள்
பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி தரவுகள் படி, இந்த 1.64 லட்சம் கோடி ரூபாய் அளவிலான உதவி திட்டம் அடுத்த நான்கு ஆண்டுகள் மத்திய அரசு BSNL நிறுவனத்திற்கு அளிக்கிறது. ஆனால் இதில் 70 சதவீத தொகையை முதல் இரண்டு ஆண்டுகளில் வழங்கப்பட உள்ளது.
பண உதவிகள்
மேலும் மத்திய அரசு அறிவித்த 1.64 லட்சம் கோடி ரூபாய் உதவி தொகையில், 44,000 கோடி ரூபாய் மட்டுமே பண உதவி இருக்கும், மீதமுள்ளவை பணமில்லாத உதவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
BSNL- TCS கூட்டணி
BSNL நிறுவனம் இந்தியாவில் 4ஜி நெட்வொர்க் அறிமுகம் செய்ய நாட்டின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்விசஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.16000 கோடி ரூபாய் மதிப்பிலான இக்கூட்டணி திட்டத்தில் டாடா குழுமம் இந்தியாவில் முதல் முறையாகச் சொந்தமாக டெலிகாம் நெட்வொர்க் சொல்யூஷன்களை வழங்க உள்ளது.
டிசிஎஸ் செயல்பாடுகள்
இந்தியாவில் 4ஜி நெட்வொர்க் அறிமுகம் செய்ய டிசிஎஸ் மற்றும் அரசு அமைப்பான C-DOT உடன் இணைந்து 4ஜி தொழில்நுட்பத்தையும், டிசிஎஸ் - அரசு அமைப்பான ITI உடன் இணைந்து 4ஜி நெட்வொர்க்கிற்குத் தேவையான டெலிகாம் கருவிகளைத் தயாரிக்க உள்ளது.