கடந்த ஆண்டினை நிச்சயம் அவ்வளவு எளிதில் யாராலும், மறக்க முடியாது. ஏனெனில் அந்தளவுக்கு சேதாரத்தினை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக வேலைவாய்ப்பு சந்தையில் பெரும் சேதத்தினை விளைவித்துள்ளது. கடந்த ஆண்டில் இருக்கும் வேலையாவது நிலைக்குமா? அல்லது இதுவும் பறிபோகுமா? என்பதே பலரின் கேள்வியாக இருந்தது. அந்தளவுக்கு கொரோனா மக்களை பாடாய்படுத்தி விட்டது.
கொரோனாவின் தாக்கம் கடந்த ஆண்டில் மட்டுமல்ல, இன்னும் சில ஆண்டுகளுக்கு இருக்கும் என்றும் நிபுணர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படவிருக்கும் பட்ஜெட்டில், மிகப்பெரிய எதிர்பார்ப்பே ஆட்டம் கண்டுள்ள வேலைவாய்ப்பு சந்தையில், தேவையை உருவாக்க வேண்டும் என்பது தான்.
மோசமான சரிவில் இந்தியா
இந்தியா 1952க்கு பிறகு மோசமான சரிவினைக் கண்டுள்ள நிலையில், அதனை மீட்டெடுக்கவும், பொருளாதார சரிவினை மீட்பினையும் உறுதி செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சமயத்தில் பற்பல சவால்கள் காத்துக் கொண்டுள்ளது. குறிப்பாக வீழ்ச்சி கண்ட வருவாயினை மீட்க வேண்டும். இழந்த பல லட்சக்கணக்கான வேலைகளை மீட்டெடுக்க வேண்டும்.
பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு
நுகர்வினை அதிகரிக்க பணப்புழக்கத்தினை அதிகரிக்க வேண்டும். இது சரிந்து போயுள்ள தேவையை மீட்டெடுக்க வழிவகுக்க வேண்டும். இப்படி பல சவால்களுக்கும் மத்தியில் தான் இந்த பட்ஜெட் 2021 (Budget 2021) தாக்கல் செய்யப்படவிருகிறது. இது குறித்து பல மதிப்பீட்டு நிறுவனங்களும், நிபுணர்களும் பலவற்றை பரிந்துரை செய்து வருகின்றனர்.
கொரோனா காலத்தில் பணி நீக்கம்
பேங்க் ஆஃப் அமெரிக்காவின் பொருளாதார நிபுணர் சென் குப்தா, கொரோனா வைரஸ் தேவையை முடக்கியுள்ளது. ஆக பட்ஜெட்டில் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் ஒர் ஆய்வில் பதிலளித்தவர்களில் 19% பேர் தொற்று நோய் காலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்துனர். ஆக பட்ஜெட்டில் வேலைவாய்ப்பினை ஊக்குவிப்பதும் ஒரு முக்கிய அம்சமாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
தேவையை அதிகரிக்க வேண்டும்
மேலும் எரிபொருளுக்கான வரிகளை குறைப்பதன் மூலமோ அல்லது வருமான ஆதரவை வழங்குவதன் மூலமாகவோ, உள்கட்டமைப்புக்கு செலவு செய்வதன் மூலமாகவோ தேவை அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார். அதோடு பணவீக்கத்தினை கட்டுக்குள் வைக்கும் விதமாக மத்திய வங்கி வட்டி விகிதத்தினை குறைவாகவே வைத்துள்ளது. எனினும் நிர்மலா சீதாராமன் கையில் குறைந்த அளவிலான வரவே உள்ளன. எனினும் வரவு செலவு பொறுப்பு உள்ளது.