டெல்லி: பல எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில் பட்ஜெட் 2021 நேற்று தாக்கல் செய்யப்பட்டது. குறிப்பாக சாமனியர்களுக்கு எதிர்பார்க்கப்பட்ட சலுகைகள் இல்லை என்பது பெரும் அதிருப்தியாகவே இருந்து வருகிறது.
அதிலும் பல தரப்பிலும் தனி நபர் வருமான வரி விகிதம் குறைக்கப்பட வேண்டும் என்பதே மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
மாறாக பிஎஃப் வாடிக்கையாளர்களுக்கு ஒரு கெட்ட செய்தியே வந்துள்ளது. எனினும் இது அதிக சம்பளம் வாங்குவோருக்கே தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
யாருக்கு வரி
ஒரு ஆண்டில் 2.5 லட்சத்திற்கும் அதிகமாக வருங்கால வைப்பு நிதி கணக்கில் பணம் செலுத்தப்பட்டால், அதற்கும் வரி விதிக்கப்படும் என்பது தான் இந்த மோசமான அறிவிப்பே. உண்மையில் சம்பளதாரர்களுக்கு ஒரு கெட்ட செய்தி தான். ஏனெனில் பெரும்பாலான சம்பளதாரர்கள் இதில் சேமிப்பதற்கு காரணமே வரி விலக்கு உண்டு என்பதால் தான்.
சேமிப்புகள் குறையலாம்
இதனால் மற்ற முதலீடுகளை விட இதில் சற்று அதிகம் சேமித்து வருகின்றனர். ஆனால் இனி இதற்கும் வரி இருக்கும் என்பதால், இந்த சேமிப்புகள் குறையவும் வாய்ப்புள்ளது. எனினும் இது குறித்தான அறிக்கையில் அதிக மாத வருமானம் ஈட்டும் பணியாளர்களுக்கு வழங்கப்படும் வரிச்சலுகையை நெறிமுறைப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட்டி வருவாய்க்கு வரி
ஆக இந்த அறிக்கையின் படி, இனி ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருங்கால வைப்பு நிதியில் பணம் செலுத்தப்பட்டால், அதன் மூலம் கிடைக்கும் வட்டி வருவாய்க்கு வரி விதிக்கப்படும். இந்த நடவடிக்கையானது வரும் ஏப்ரல் 1, 2021 முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது. அரசின் இந்த நடவடிக்கையானது அதிக மாத வருமானம் ஈட்டும் பிரிவினரை அதிகம் பாதிக்கும்.
வரி சலுகை குறைப்பு
ஒரு பணியாளரின் அடிப்படை ஊதியத்தில் 12 சதவீதமானது வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இதே நிறுவனத்தின் சார்பில் 12 சதவீதம் செலுத்தப்படுகிறது. ஏற்கனவே பல்வேறு வரிச்சலுகைகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஊழியர்களுக்கு வருமான வரி சலுகையும் அரசு குறைத்துள்ளது. எப்படி இருப்பினும் இது அதிக சம்பளம் பெறுவோருக்கு பெரியளவில் பாதிப்பு தான்.