டெல்லி: நாளை பரவலான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மத்திய பட்ஜெட்டினை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.
இந்த பட்ஜெட் 2021 மிகுந்த எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. ஏனெனில் வரலாறு காணாத அளவு பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளது. இதன் காரமணமாக பொருளாதார மந்த நிலையை போக்கவும், முக்கிய அறிவிப்புகள் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா பொருளாதாரத்தில் உலகின் ஆறாவது பெரிய நாடாக இருக்கும் நிலையில், தற்போது லாக்டவுனில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தான் இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளது. எனினும் கொரோனாவுக்கு முந்தைய நிலையினை அடைய இன்னும் சில காலம் ஆகும் என நிபுணர்கள் கூறுகின்றனர். எனினும் அரசின் ஊக்குவிப்பு நடவடிக்கைகள், இருக்கும்பட்சத்தில் விரைவில் மீண்டு வரலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
பட்ஜெட் 2021 தடுப்பூசி
அதாவது கொரோனாவிலிருந்து மக்களை மீட்க தடுப்பூசி எவ்வளவு முக்கியமோ, அந்தளவுக்கு நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் 2021 என்ற தடுப்பூசியானது விரைவில் கொரோனாவினால் ஆட்கொண்ட பொருளாதாரத்தினை மீட்டுக் கொண்டு வர உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சாமனிய மக்களுக்கு இந்த பட்ஜெட் சாதகமாக இருக்குமா? என்பதே முக்கிய கேள்வியாக இருக்கிறது. ஏனெனில் சமானிய மக்களுக்கு சாதகமாக இருந்தாலே, தேவை கூட ஆரம்பித்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய எதிர்பார்ப்புகள்
அந்த வகையில் சில முக்கிய எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றன. குறிப்பாக வரி சலுகைகள். குறிப்பாக வருமான வரியை குறைக்கலாம். ஏனெனில் வரி சலுகைகள் என்பது நேரடியாக மக்களின் கையில் பணப்புழக்கத்தினை அதிகரிக்கும். இது தேவையை அதிகரிக்கும். இதனால் மக்களின் செலவினங்கள் அதிகரிக்கும். இது பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
ஜிஎஸ்டியை குறைக்கலாம்
குறிப்பாக சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஜிஎஸ்டி வருகைக்கு பின்பு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஜிஎஸ்டி திட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வரலாம். குறிப்பாக பெரும்பாலான பொருட்களுக்கு ஜிஎஸ்டி விகிதம் அதிகம் என்பதால் அதனை குறைக்க வேண்டும் எண்ற நிலை நீடித்து வருகின்றது. இதனை குறைக்கும் போது மக்களின் நுகர்வு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்கள்
கொரோனாவினால் பல லட்சம் பேர் தங்களது வேலையினை இழந்துள்ள நிலையில், பல சாமனியர்களின் முக்கிய எதிர்பார்ப்புகள் அரசு வேலை வாய்ப்புகளை பெருக்கும் திட்டங்களை உருவாக்க வேண்டும் என்பது தான். இதற்கான திட்டங்களில் அரசு அதிகம் செலவிட வேண்டும். குறிப்பாக கிராமப்புற வளர்ச்சி, வளர்ச்சி திட்டங்கள், சராசரி வரி செலுத்தோருக்கு வரி விகிதத்தினை குறைத்தல், அன்னிய முதலீட்டு விதிகள் மாற்றம் என பலவற்றையும் மாற்றம் செய்தல் உள்ளிட்ட பல முக்கிய எதிர்பார்ப்புகள் உள்ளன.
தேவையை அதிகரிக்க வேண்டும்
அதோடு கொரோனா காலகட்டத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது அமைப்பு சாரா தொழிலாளர்களே. அவர்கள் கொரோனா லாக்டவுன் காலகட்டத்தில் தங்களது வேலையினை இழந்து, அடிப்படை வாழ்வாதாரங்களுக்கே கஷ்டப்பட்டனர். இதன் காரணமாக நுகர்வு வெகுவாக குறைந்தது. தேவையும் வீழ்ச்சி கண்டது. ஆக இதனை அதிகரிப்பதே நடப்பு ஆண்டில் அரசுக்கு பெரும் சவாலாக இருக்கும்.
கவனிக்கப்பட வேண்டிய முக்கிய துறைகள்
இது தவிர சுகாதாரம், வேளாண்மை துறை, சிறு குறு நடுத்தர தொழில், ஜிஎஸ்டி விகிதம், தனி நபர் வருவாய், முதலீட்டு விதிகள் மாற்றம், கட்டமைபு துறை, உள்கட்டமைப்பு துறை, ஆட்டோமொபைல் துறை, வங்கி துறை, இப்படி பல்வேறு துறைகளிலும் முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும். இதன் மூலம் நாட்டில் தேவையை ஊக்கப்படுத்தபடுத்த வேண்டும். இதன் பொருளாதாரம் நிலையான வளர்ச்சியினை காணும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இன்னும் சில மணி நேரங்கள் தானே உள்ளது. கொஞ்சம் பொறுத்திருந்து தான் பார்ப்போமே. நாட்டு மக்களுக்காக நிதியமைச்சர் என்ன சொல்லப்போகிறார் என்று.