நாட்டில் ஓமிக்ரான் நெருக்கடி இருந்து வரும் பல பரபரப்பான சூழலுக்கு மத்தியில், வரவிருக்கும் பிப்ரவரி 1 அன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் 2022-ஐ தாக்கல் செய்யவுள்ளார்.
இந்த பட்ஜெட்டில் பல்வேறு எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றது. குறிப்பாக சுகாதாரத் துறைக்கு அதிக ஒதுக்கீடு, கிராமப்புற பொருளாதாரத்தினை மேம்படுத்த உள்கட்டமைப்பில் அதிக கவனம் செலுத்துங்கள், ஓமிக்ரானால் சரிந்து வரும் பொருளாதாரத்தினை மேம்படுத்த, தொழிற்துறைகளை மேம்படுத்தவும் குறிப்பிடத்தக்க அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற பலத்த எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றது.
மேலும் இந்த பட்ஜெட்டில் பல புதிய அறிவிப்புகளும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதற்கு முக்கியவத்துவம்
குறிப்பாக மின்சார வாகனங்களுக்கான சலுகைகள், மானிய திட்டங்கள், வாகன ஸ்கிராப்பேஜ் திட்டம் பற்றிய அறிவிப்புகள், தனி நபர் வரி சலுகை, புதிய தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் விதமாக பல சலுகைகள் குறித்தும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வரவிருக்கும் பட்ஜெட்டில் கல்வி மற்றும் உள்கட்டமைப்புதுறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரிச் சலுகை கிடைக்குமா?
ஏனெனில் இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகள் முதல் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் வரையில் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர். ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றாலும், அது பெரியளவுக்கு கைகொடுத்ததாகவும் தெரியவில்லை. ஆக உயர்கல்வி பயில்வோரை ஊக்குவிக்கும் விதமாக வரிச்சலுகைகள் ஏதேனும் அறிவிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
நிரந்தர கழிவை உயர்த்த வேண்டும்
மாத சம்பளம் பெறுவோர் தாங்கள் செலுத்தும் வரியில் நிரந்தர கழிவாக 50,000 ரூபாய் உள்ளது. இதனை 75,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்ற முக்கிய கோரிக்கையும் எழுந்துள்ளது.
இது தற்போதைய காலக்கட்டங்களில் ஊழியர்கள், ஓமிக்ரான் அச்சம் காரணமாக வீட்டில் இருந்து பணி செய்து வருகின்றனர். மேலும் மருத்துவ செலவு, இணைய செலவு, மின்சார செலவு என பலவும் உயர்ந்துள்ளன. ஆக சம்பளதாரர்கள் பெறும் நிரந்தர வரி கழிவான 50,000 ரூபாயினை, 75,000 ரூபாயாக உயர்த்த வேண்டும்.
அண்டை நாடுகளின் திட்டம்
அமெரிக்கா, இங்கிலாந்து, அயர்லாந்து, கனடா போன்ற நாடுகள் கொரோனா காலகட்டத்தில் ஏற்படும் மருத்துவ செலவுகள், வீட்டுச் செலவுகள், அலுவலக அமைப்பு உட்பட பலவற்றிற்கும் ஆகும் செலவுக்கு, சில வரிச்சலுகைகளை அறிவித்துள்ளன. இந்தியாவில் இதுவரையில் அப்படி ஏதும் இல்லை. ஆக நிரந்தர வரிக் கழிவினை அதிகரித்தால், இது ஊழியர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
எவ்வளவு வரிச்சலுகை
இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகளுக்காக பெரியளவில் சொத்து சேர்க்காவிட்டாலும், அதிகபட்சம் நல்ல கல்வியை கொடுக்க வேண்டும் என்பது தான் அனைத்து பெற்றோரின் எண்ணமும். ஆக அப்படிப்பட்ட உயர்கல்விக்காக செய்யும் முதலீடுகளுக்கு வரி சலுகை 80 சி பிரிவின் கீழ் உண்டு. எனினும் தற்போது பெண் குழந்தைகளுக்கான திட்டமான சுகன்யா சம்ரிதி யோஜனா போன்ற திட்டங்களுக்கு வெளிப்படையான வரி விலக்கு என்பது இல்லை. இது 80 சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரையில் வரிச்சலுகை அளிக்கப்படுகிறது. எனினும் இது பல்வேறு வரி சேமிப்பு முதலீடுகளையும் உள்ளடக்கியது.
கல்விக்கு தனியாக விலக்கு அளிக்க வேண்டும்
ஆக குறைந்தபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரையில் கல்வி சேமிப்புக்கு தனியாக விலக்கு அளித்தால், அது மாணவர்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும். இது வரவேற்கதக்க விஷயமாக இருக்கும். இது தனி நபர்களை ஊக்குவிப்பதோடு, எதிர்கால நோக்கத்திற்காக அதிகளவில் சேமிப்பினை செய்யவும் ஊக்குவிக்கும்.