இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தியை அதிகரிக்கவும், வெளிநாட்டில் இருந்து இற்குமதி செய்யப்படும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மற்றும் உதிரிப் பாகங்கள் அளவீட்டைக் குறைக்க வேண்டும் என்பதற்காகப் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் அறிக்கையில் சுங்க வரி உயர்த்தப்பட வாய்ப்புகள் மிகவும் அதிகம்.
இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மற்றும் உதிரி பாகங்களின் உற்பத்தியை அதிகரித்த மத்திய அரசு ஏற்கனவே பல பிரிவுகளில் PLI திட்டத்தை அறிவித்துள்ள நிலையில், இத்திட்டத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்யவும், இதே வேளையில் வேலைவாய்ப்புகளையும் அதிகரிக்கவும் சுங்க வரியை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
பிப்ரவரி 1 பட்ஜெட்
ஜனவரி 31-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கும் நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ம் தேதி 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். கொரோனா தொற்றில் பாதிப்பில் இருந்து வர்த்தகச் சந்தை 80-90 சதவீதம் வரையில் மீண்டு வந்துள்ள நிலையில் வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தை மேம்படுத்த இந்தப் பட்ஜெட் மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது.
பட்ஜெட் எதிர்பார்ப்பு
அனைத்துத் தரப்பு மக்களுக்கும், நிறுவனங்களுக்கும் இந்தப் பட்ஜெட் மீது அதிகப்படியான எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் பட்ஜெட் 2022 அதிகப்படியான கவனத்தை ஈர்த்துள்ளது. இதேபோல் இந்தப் பட்ஜெட் அனைவருக்குமான பட்ஜெட் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சந்தையின் எதிர்பார்ப்புகளை மத்திய நிதியமைச்சர் நிறைவேற்றுவாரா என்பதைப் பிப்ரவரி 1ஆம் தேதி பார்ப்போம்.
உள்நாட்டு உற்பத்தி
இந்தப் பட்ஜெட் அறிக்கையில் மத்திய அரசு உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கச் சுங்க வரியை அதிகரித்தால், தற்போது சந்தையில் இருக்கும் அனைத்து எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோக பொருட்களின் விலை அதிகரிக்கும். இந்தியாவில் உற்பத்தியை உடனடியாக அதிகரித்து விற்பனை சந்தைக்குப் பொருட்களைக் கொண்டு வர முடியாது என்பதே தற்போதைய பிரச்சனை.
விலை உயர்வு
தற்போது சுங்க வரி உயர்த்தினால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் ஸ்மார்ட்போன், ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் மற்றும் இதைத் தயாரிக்கப் பயன்படும் அனைத்து வெளிநாட்டு உதிரி பாகங்களின் விலையும் அதிகரிக்கும். உதிரி பாகங்களின் விலை அதிகரிக்கும் காரணத்தால் இந்தியாவில் அசம்பிள் செய்யப்படும் பொருட்களின் விலையும் அதிகரிக்கும்.